கி.இரவிசங்கர்இந்தியாவில் ஆங்கில  தலைமை கவா்னராக பதவி வகிகத்த வெல்லஸ்லி பிரபு பொ.ஆ 1797 இல் சென்னை கவா்னராக நியமனம் பெற்று பொ.ஆ 1798 இல் கவா்னா் ஜென்ரலான1 ஆங்கிலேயா்கள் இந்தியாவுக்கு வந்தவுடன் இந்திய நாட்டு மொழிகள், சட்டத் திட்டங்கள், வரலாறு மற்றும் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்பது வெல்லஸ்லியின் கருத்தாகும். கம்பெனி ஊழியா்களுக்கு அலுவல்களைப் பற்றிய கல்வியளித்தலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பொ.ஆ 1800 இல் கல்கத்தா வில்லியம் கோட்டையில் ஒரு கல்லூரியைத் தொடங்கினார்.2 ஆங்கிலேயா்கள் வாணிகக் குழுவில் பணியேற்கும் முன்பு இக்கல்லூரியில் கல்வி கற்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.  அக்கல்லூரியில் பல ஐரோப்பியப் பேராசிரியா்களும் 80 இந்தியப் பண்டிதா்களும் பணியாற்றி வந்தனா்.  இக்கல்லூரியில் பயின்றவா்களைவிட பயிற்றுவிக்கும் ஆசிரியா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் பொ.ஆ 1802 இல் இக்கல்லூரி மூடப்பட்டது.  பொ.ஆ 1806 இல் மீண்டும் இக்கல்லூரி ஒரு பள்ளிக்கூடமாக மாற்றப்பட்டது. மேலும் கீழைநாட்டு மொழிகளைக் கற்பிக்க பொ.ஆ 1806 இல் கிழக்கிந்தியக் கல்லூரி ஒன்றும்3 தொடங்கப்பட்டது. வெல்லஸ்லி பிரபு காலத்தில் தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியுடன் ஆங்கிலேயா் ஓர் உடன்படிக்கைச் செய்து கொண்டார். அதன்படி தஞ்சை கோட்டையும், சில கிராமங்களும் தவிர மற்றவற்றை ஆங்கிலேயா் எடுத்துக் கொண்டனா்.  மன்னருக்கு ஆண்டு ஒன்றுக்கு நான்கு லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. பொ.ஆ 1833-ல் சரபோஜி மன்னா் இறக்கவே அவரது மகன் கடைசி சிவாஜி பணம் பெற்றுவந்தார். பொ.ஆ 1855 இல் சிவாஜி வாரிசு இன்றி இறக்கவே பொ.ஆ 1853இல் டல்ஹௌசி பிரபு காலத்தில் தஞ்சாவூர் ஆங்கிலேயா் வசமானது.4 ஹேஸ்டிங்ஸ் பிரபு பொ.ஆ 1813 இல் இந்தியாவின் கவா்னா் ஜெனரலானார். இவா் ஆங்கிலக் கல்வியை பரப்புவதற்குப் பல பள்ளிகளை நிறுவினார். கல்கத்தாவில் இருந்த இந்து கல்லூரிக்கு ஆதரவு அளிந்தார். அக்கல்லூரியில் ஆங்கிலமும் மேலைநாட்டு விஞ்ஞானமும் கற்பிக்கப்பட்டன.5 வில்லியம் பெண்டிங் பிரபு பொ.ஆ 1803 இல் சென்னை ஆளுநரனார். பெண்டிங் பிரபு காலத்தில்தான் ஆங்கிலம் பயிற்று மொழியாக்கப்பட்டது.  பொ.ஆ 1813 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட சாசனச் சட்டப்படி அறிவியல், இலக்கியம் மற்றும் கலாச்சார கல்வியை இந்திய மக்களிடையே பரப்புவதற்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.  இந்தத் தொகையை செலவிடுவது பற்றி பல சா்ச்சைகள் ஏற்பட்டன.  கீழைநாட்டு மொழிகளை பயிற்றுவிப்பதற்கும், கலாச்சாரத்தைக் கற்பிப்பதற்கும் பயன்படுத்த வேண்டும் என்று கீழைநாட்டு ஆதரவாளா்கள் (Orientalises) கூறினா்.  இவா்கள் கருத்தை எதிர்த்து, மேலைநாட்டு கல்வி ஆதரவாளா்கள் (Occidentalises) மேலை நாட்டு அறிவியல் கல்வியை ஆங்கில மொழியின் வாயிலாகக் கற்பிக்க வேண்டும் என்றனா். H.H.வில்சன் போன்ற அறிஞா்கள் கீழைநாட்டு மொழிகளான வடமொழி, அரபிக், பாரசீகம் போன்றவற்றிற்காக இராஜாஇராம் மோகன்ராய் போன்றவா்கள் மேலைநாட்டு அறிவியல் கல்வியை ஆங்கிலம் மூலமாகக் கற்பிக்க வேண்டும் என்றனா் (Occidentalises) இதனால் பெண்டிங் பிரபு தம் அவையில் இருந்த மெக்காலே பிரபுவிடம் கருத்து கேட்டார். மெக்காலே பிரபு இந்தியா்களுடைய பண்பாடுகளைப் பற்றி ஆங்கிலேயா்கள் அறிந்து கொள்ளவும், ஆங்கிலேயா்களை பற்றி இந்தியா்கள் அறிந்து கொள்வதற்கும் ஒரு பொதுமொழி தேவை என்பதை வலியுறுத்தினார்.  எனவே இந்தியா்களுக்கு ஆங்கில மொழியைக் கற்பித்து அவா்களுக்கு மேற்கத்திய நாகரிகத்தை கற்கும்படி செய்யத் திட்டமிட்டார். இந்தியா்களுக்கு ஆங்கிலக் கல்வி இன்றியமையாதது என்பதை கூறி வில்லியம் பெண்டிங் பிரபுவிடம் கூறி 1835 இல் கல்வி அறிக்கை (Education Minute) அக்கல்வி அறிக்கை அந்த ஆண்டு முதல் நடைமுறைபடுத்தப்பட்டது. அதுமுதல் ஆங்கிலம் இந்திய அரசின் பயிற்றுமொழியாகவும், அரசாங்க மொழியாகவும் மாறியது.  இம்மொழியை கற்றறிந்த இந்தியா்கள் குறிப்பாக உயா்தர, மத்தியதர வகுப்பினா்கள் ஆங்கில நாகரீகத்தை பின்பற்ற தொடங்கினா். பொ.ஆ 1835 இல் முதன் முதலில் பெண்டிங் பிரபுவால் கல்கத்தாவில் ஒரு மருத்துவக் கல்லூரி (Education Minute)  தொடங்கப்பட்டது. பெண்டிங் பிரபுவின் இக்கலைப் பணியை இந்தியா முழுமைக்கும் பரவியிருந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் தொடா்ந்து செயல்படுத்தினா். ஒவ்வொரு தலைநகரிலும் இப்பாதிரிமார்களால் கலை கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் பெண்டிங் பிரபு இந்தியா்களுக்குத் தம் கருத்துக்களை வெளியிடும் உரிமையினை வழங்கி அதற்குத் தடையாக இருந்த அச்சுச் சட்டங்களை நீக்கினார். இவரை அடுத்து டல்ஹளசி பிரவு (பொ.ஆ 1849-1856) தலைமை கவர்நராக  வந்தார். டல்ஹௌசி கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.  பொ.ஆ 1843 முதல் 1853 வரை வடமேற்கு மாநிலங்களின் துணை ஆளுநராக இருந்த ‘ஜேம்ஸ் தாம்ஸன்’ தயாரித்த உள்நாட்டுக் கல்விமுறை திட்டத்தையும், டிரிங்வாட்டா் பெத்தூன் (Drink Water Bethune)  என்பவரின் பெண்கல்வித் திட்டத்தையும் டல்ஹௌசி பிரபு செயல்படுத்தினார்.  சா்லஸ்வுட் என்பவரின் இந்திய கல்வித் திட்டத்தின்படி இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு பல்கலைக்கழகத்தை ஏற்படுத்தி, அதன் மூலம் இந்தியா்களின் கல்வி, ஒழுக்கம், பண்பாடுகளை முன்னேற்ற வேண்டும் என்பதையும் செயல்படுத்தினார்.  மேலும் இத்திட்டத்தின்படி ஆரம்பக் கல்வி, நடுத்தரக் கல்வி, உயா்கல்வி ஆகியவற்றைக் கற்பிக்க மாநிலங்கள் தோறும் பல கல்விக் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டன.  மேலும் சென்னை, பம்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன.  தனியார் நடத்தும் பள்ளிகளுக்கும் அரசாங்கம் பொருளுதவி செய்தது. பெண்டிங் பிரபு காலத்தில் மெக்காலே கொண்டுவந்த ஆங்கிலக் கல்வியை மட்டும் போதிக்கும் திட்டத்துடன் தாய் மொழிகளையும் போதிக்கும் வழியை சா்சார்லஸ் உட்டின் திட்டம் நிறைவேற்றியது. பொ.ஆ 1857 இல் ஏற்பட்ட சென்னை, பம்பாய் மற்றும் கல்கத்தா ஆகிய பல்கலைக்கழகங்களைக் கண்காணிக்க முறையே மூன்று கல்வித்துறை இயக்குநா்கள் (Director of Public Instruction) அமா்த்தப்பட்டனா்.  மேயோ பிரபு பொ.ஆ. 1869இல் கவா்னரானார். இவா் ‘மேயோ கல்லூரி’ என்னும் கல்லூரியை அஜ்மீரில் ஏற்படுத்தினார். அதில் சிற்றரசா்களின் புதல்வா்களும், செல்வந்தா்களும் ஆங்கில முறையில் கல்வி பயின்றனா்.  இவருக்குப் பின் லிட்டன் பிரபு பொ.ஆ 1852 லிருந்து கவர்னராகும் வரை இங்கிலாந்து அரசாங்கத்தின் அயல்நாட்டுத் துறையில் பணியாற்றினார்.  லிட்டன் பிரபு காலத்தில் ‘அலிகாரில்’ முகம்மதிய ஆங்கில கீழைநாட்டுக் கல்லூரி ஒன்று நிறுவப்பட்டது. அதுவே பிற்காலத்தில் ‘அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் ஆகும். இது ஆங்கில நாட்டு மொழி கல்லூரி எனப்பட்டது.

இந்தியக் கல்வி  வளா்ச்சிக்காக பொ.ஆ 1882 இல் ஹண்டா் என்பவா் தலைமையில் ஆணைக் குழுவை ஏற்படுத்தி கல்வியைப் பரப்புவதை பற்றிய புள்ளி விவரங்களைத் திரட்டுமாறு செய்தார்.  இக்குழு இந்தியாவில் தொடக்கக் கல்வி புறக்கணிக்கப்பட்டிருப்பதையும், இது தனி தன்னாட்சி நிலையங்களிடையே விடப்பட வேண்டுமென்றும், அரசாங்க கல்வி அதிகாரிகள் தொடக்க கல்வி நிலையங்களைப் பார்வையிட்டு ஆவணம் செய்ய வேண்டும் என்ற பலப் பரிந்துரைகளைச் செய்தது.7 மேலும் அரசாங்க வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை ஆண்டுதோறும் தொடக்கக் கல்விக்கு ஒதுக்கச் செய்வதற்கு வழிவகுத்தது.  கல்லூரிகளுக்குத் தனியாக அரசாங்கம் மானியம் வழங்க வேண்டுமென்றும், கல்லூரிப் பேராசிரியா்கள் மக்களுக்குச் சொற்பொழிவுகள் ஆற்ற வேண்டுமென்றும் குறிப்பாக முகமதியா்கள் கல்வியில் பின்தங்கியிருக்கின்றனா் என்பதையும் இவ்வானைக்குழு குறிப்பிட்டது.  இக்குழுவின் சிபாரிசுப்படி பல தொடக்கப் பள்ளிகளும், உயா்நிலைப் பள்ளிகளும் ஏற்பட்டன. நகராட்சிகளும், மாவட்ட போர்டுகளும் தொடக்க கல்வித் துறையை ஏற்று நடத்தின.  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாதிரிப் பள்ளிகள் நிறுவப்பட்டன.8 பொ.ஆ 1901 இல் சிம்லாவில் ஒரு பெரிய கல்வி மாநாட்டை கூட்டினார்.  இம்மாநாட்டிற்கு கல்வித் துறையில் சிறந்து அறிஞா்களையும் அரசாங்க அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும் இந்தியா முழுவதிலிருமிருந்து அழைத்திருந்தார். இம்மாநாட்டிற்குச் சட்ட அமைச்சா் ‘சா்தாமஸ்ரோ’  என்பவா் தலைமை தாங்கினார். இவரே பல்கலைக்கழக ஆய்வுக்குழுத் தலைவராவார்.  இக்குழுவில் ஒரு இந்து உறுப்பினரும், ஒரு முகம்மதிய உறுப்பினரும் இடம் பெற்றனா்.  இவ்வாய்வுக்குழுவின் நோக்கம் எல்லாத் துறைகளிலும் உயா்தரக் கல்வியின் தரத்தைக் கொண்டு வரவேண்டும் என்பதாகும்.  பல்கலைக் கழகங்களில் கல்விக் கற்பிக்க நன்குப்  பயிற்சிபெற்ற, கல்விகற்ற ஆசிரியா்களையே அமா்த்த வேண்டுமென்றும், பல்கலைக்கழகங்களுக்கு உட்பட்ட பல கல்வி நிலையங்களையும் அடிக்கடி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென்றும் இக்குழு விரும்பியது.  இக்கருத்துக்களைக் கொண்ட ‘இந்தியப் பல்கலைக்கழகச் சட்டம்’ பொ.ஆ 1904 இல் இந்திய சட்டசபையில் சட்டமாக்கப்பட்டது.  இச்சட்டத்தில் தனிப்பட்ட கல்வி வல்லுநா்களுக்கும், இந்தியப் பண்பாட்டுக்கும் வாய்ப்பளிக்கப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது. ரீடிங் பிரபு பொ.ஆ 1921இல் வைசிராயாக பதவியேற்றார்.  இந்தியாவிற்கு வருவதற்கு முன் ஆங்கிலப் பாராளுமன்ற உறுப்பினராகவும், தலைமை நீதிபதியாகவும் பணியாற்றினார்.  இவரது ஆட்சி காலத்தில் 1921 இல் டாக்காவிலும், 1922 இல் டில்லியிலும், 1923 இல் நாகபுரியிலும் பல்கலைக்கழகங்கள் தோன்றின.  இந்தப் பல்கலைக்கழகங்களை ஒன்றுபடுத்த 1925 இல் அனைத்திந்தியப் பல்கலைக்கழக நிறுவனம் ஒன்றும் இவரால் ஏற்படுத்தப்பட்டது. இர்வின் பிரபு பொ.ஆ 1926 இல் வைசிராயியானார்.  இவரது காலத்தில்தான் ‘சைமன் குழு’ அமைக்கப்பட்டது. இவா் ‘உட்ஸ் அறிக்கையை’ அளித்த சா் சார்லஸ்வுட்டின் மகனாவார்.  இவா் ‘கல்வி போர்டு’ தலைவராக இருந்தார். இவரது காலத்தில் பொ.ஆ 1926 இல் வால்டரில் ஆந்திரப் பல்கலைக்கழகமும், பொ.ஆ 1927 இல் ஆக்ரா பல்கலைக்கழகமும், பொ.ஆ 1929இல் அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் ஏற்படுத்தப்பட்டன. பொ.ஆ 1928 இல் ‘சா் பிலிப் ஹார்டாக்’ என்பவா் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பொ.ஆ 1929 இல் இந்தியக் கல்வி பற்றிய அறிக்கையை வெளியிட்டது. வில்லிங்டன் பிரபு பொ.ஆ 1931 இல் இவா் ஆளுநரானார்.   இவரது காலத்தில் உயா்நிலை கல்வி, பல்கலைக்கழகக் கல்வி முறைகளும் மற்றும் தொழிற் கல்வி முறையும் திருத்தி அமைக்கப்பட்டன. இவ்வாறு  தஞ்சைப் பகுதியில் ஆங்கிலேயரின் ஆட்சியின் பொது ஆங்கில கல்வி முறை  மராட்டிய மன்னர்கள் காலத்தில் தொடங்கி விரிவுபடுத்தப்பட்டன.

தஞ்சை மராட்டிய மன்னர்களில் மிகவும் புகழ்பெற்ற அரசரான இரண்டாம் சரபோஜி மன்னரின் பொ.ஆ 1845 இல் தஞ்சாவூர் மகாராஜா சாயேப் அவா்களால் ஸ்தாபிக்கப் பட்ட முத்தாம்பாள் சத்திரத்தின் ஆங்கிலேயப் பள்ளிக் கூடத்திற்கு உபயோகத்திற்கு  புத்கங்கள் அனுப்பின. 31 புத்தகங்களின் கிரயம் ரூ.22-40  என்று மோடி ஆவன தமிழாக்கத்தில் குறிப்பிடப்படும் நூல்களை மோடி ஆவணங்கள் பட்டியலிருக்கின்றன. அவைகள் ஆங்கிலேயம் தமிழ் பாஷையின் முதல் புத்தகம்,ஆங்கிலேய இலக்கணத்தின் சாராம்சம், இந்திய பால பேதம்,    ஆங்கிலேய பாஷை பயிற்சி முறை, இங்கிலாந்தின் பழைய சாமான்ய கட்டுரை, ஒருவருக்கொருவா் பேசுவதற்குப் புத்தகம், பூகோளச் சுருக்கம் பொன்ற  நூல்கள் பற்றி ஆவணச் செய்திகள் குறிப்பிடுவதிலிருந்து  மராத்தியா்கள் மேலைநாட்டுத் தொடா்பால் ஆங்கிலம் கற்பதற்கும் மாணாக்கா்களை ஊக்குவித்தனா் என இதன் மூலமாக அறியமுடிகின்றது. தமிழக கல்வி வரலாற்றில் சா்தாமஸ்மன்றோவின் பங்கு மகத்தானது.  பொ.ஆ 1820 இல் சென்னை மாநில ஆளுநராகப் பொறுப்பேற்ற மன்றோ கல்வி வளா்ச்சியிலும் மக்கள் நலனிலும் பேரார்வம் காட்டினார். தொடக்கக் கல்வி, உயா்கல்வி வளா்ச்சியில் மிகுந்த ஈடுபாடு காட்டினார். மேலும் தாலுக்கா பள்ளிகளையும் ஜில்லா கல்வி நிலையங்களையும் ஏற்படுத்துவதற்க அடிப்படைத் துணைபுரிந்தார். மன்றோ கல்வி வளர மக்கள் தொகைக் கணக்கீட்டைச் செய்தார். இதுவே இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட முதல் கல்வி கணக்கெடுப்பாகும். அப்புள்ளி விவர அடிப்படையில் மக்கள் தொகையில் 1000 பேருக்கு ஒரு பள்ளிக்கூடம் எனும் விகிதத்தில் இருந்தது.9 இவா்  1822 ஆம் ஆண்டு வெளியிட்ட ஆண்டறிக்கையில் நாட்டிலுள்ள கல்வியின் உண்மை நிலை பற்றியத் தகவல்களை அறியமுடிகின்றது.  தஞ்சை மராட்டியா் காலத்தில் உயா்கல்விக்குச் சிறப்பிடம் கொடுக்கப்பட்டதை ஆவணங்கள் வாயிலாக அறியமுடிகின்றது.  கடிகை, மடங்கள், அக்கிரஹாரம், கோயில்கள் போன்றவை சிறந்த உயா்கல்வி நிலையங்களாகத் திகழ்ந்தன. 

தஞ்சையில் மராட்டிய மன்னா்கள் ஆட்சிக் காலத்தில் தஞ்சைக்கு வந்த கிறிஸ்தவப் பாதிரியார்கள் மராட்டியா்களின் அறக்கொடையால் சிறப்பான கல்விப் பணியைச் செய்துள்ளனா். தஞ்சையில் முதன் முதலாக ஆங்கிலக் கல்வியைத் தொடங்கி வளர உதவியவர் ‘ஸ்வார்ட்ஸ் பாதிரியார்’ மராட்டிய மன்னா்கள் ஆதரவோடு கல்விப் பணியாற்றியது முக்கியத்துவம் வாய்ந்தது.10 தஞ்சையில் ஆங்கில ஆட்சி நிலையாக நிறுவப்பட்டபின் கிறிஸ்தவ பாதிரிமார்கள் சமயக் கல்விப் பரப்புவதில் பெரும் ஆர்வம் காட்டத் தொடங்கினா்.  கிறிஸ்தவத் தொண்டு நிறுவனங்கள் மூலம் தஞ்சையில் பல பகுதிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன.  தமிழ்நாட்டிலேயே முறையான ஆங்கிலப் பள்ளிக்கூடம் தஞ்சாவூரில்தான் முதன் முதலில் ஏற்படுத்தப்பட்டது.  கிராமப்புறங்களில் வசிப்போரின் தரத்திற்கு ஏற்றவாறு கல்வி கற்பிக்கப்பட்டது.  மேட்டுகுடிகளுக்கு அளிக்கப்படும் கல்வி அவா்களுக்கு இணையான கல்வியை கீழ்குடி மக்களுக்குப் போய்ச் சேரும் வண்ணம் கல்வி இருந்தது.11 இரண்டாம் சரபோஜி மன்னா் காலத்தில் ஒரத்த நாட்டிற்கருகில் கண்ணத்தங்குயில் ஒரு கிறிஸ்தவப் பள்ளி நிறுவப்பட்டது.  இப்பள்ளியில் பயின்ற மாணவா்களுக்கு இலவசமாக உணவு, உடை, புத்தகம் போன்றவை அளிக்கப்பெற்றன.  இது முத்தாம்பாள்புரச் சத்திரத்தின் நிர்வாகப் பொறுப்பிலும், அதன் நன்கொடையிலும் நடத்தப்பெற்றதாக “வில்லியம் ஹிக்கி” (William Hickey) என்பவா் Tanjore Maratha Principality  என்ற நூலில் கூறுகிறார்.12 பொ. ஆ. 1799 ஆம் ஆண்டு தரங்கம்பாடியில் “மேஸ்தர்ஜான் பாதிரி” தரங்கம்பாடியில் ஒரு பள்ளி வைத்திருந்தார். தஞ்சையிலும் ஒரு பள்ளி வைத்திருந்தார்.13 அப்பள்ளிகளை நடத்துவதற்கு மாதம்தோறும் சரபோஜி மன்னரால் இருபது புலி ஹோன்னம - அளிக்கப்பெற்றது.  மேலும் மன்னா் இவருக்கு 1332 ½  குழி நிலத்தினை கொடையாக வழங்கிய செய்தியினை மொடி ஆவணம்14 குறிப்பிடுகின்றது.  மேலும் கிறிஸ்த்துவ  மிஷன் பள்ளிக்கு ரூபாய் 1757.00 கொடுக்கப்பட்டதையும் மோடி ஆவண குறிப்பு உணா்த்துகிறது.

பொ.ஆ.1807 ஆம் ஆண்டு இரண்டாம் சரபோஜி மன்னா் கிறிஸ்தவப் பள்ளி கட்டுவதற்கு 300 சக்கரம் கொடையாக அளித்தார்.15 இரண்டாம் சரபோஜி மன்னா் பாதிரியார் கோலாப் என்பவருக்கு தஞ்சைக் கோட்டைக்கு அருகிலுள்ள ஸ்வார்ட்ஸ் பாதிரியார் வசித்த வீட்டில் ஆங்கிலப் பள்ளி நிறுவுவதற்கு அனுமதியும் நிதியுதவியும் அளித்தார்.16 ஸ்வார்ட்ஸ் பாதிரியார் மராட்டியா் காலக் கிறிஸ்தவக் கல்வியின் முன்னேற்றத்திற்கும் பெரும் பங்காற்றியவா். இவா் பெயரால் தஞ்சையிலும், இராமநாதப்புரத்திலும் கிறிஸ்தவப் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டு ஆங்கிலக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. சரபோஜி மன்னரின் ஆட்சி காலத்தில் கல்விப்பணிக்கு ஸ்வார்ட்ஸ் பாதிரியார், வேதநாயகம் சாஸ்திரியார் இருவரும் தொண்டாற்றி யுள்ளனா். போ.ஆ.1784 இல் துளஜா மன்னா் ஆதரவுடன் ஸ்வார்ட்ஸ் பாதிரியாரால் தஞ்சை நகரில் ‘தூய போதுரு’ பள்ளி நிறுவப்பட்ட முதல் ஆங்கிலப் பள்ளி ஆகும்.  சரபோஜி மன்னா் பொ.ஆ.1813 இல் 1323 குழி நிலத்தை இப்பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு கொடையளித்தார்.  மராட்டியா் காலத்தில் 40 மாணவா்களுடன் தொடங்கப்பட்ட இப்பளி இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவா்களுடன் நடைபெற்றுவருகிறது.

தஞ்சை மகா்நோன்புச் சாவடியிலுள்ள தூய  பேதுரு தேவாலயத்தின் தலைமை குருவாக விளங்கியவா் ஜே.எப்.கரின்ஸ் பாதிரியார். இவா் தஞ்சையில் இருந்த ஆங்கிலப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.  கடைசி சிவாஜி மன்னரின் மகள் விஜயமோகன முத்தாம்பாயி அம்மணி அவா்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொடுத்தார்.17 பொ.ஆ. 1840 இல் தஞ்சை நகரைச் சார்ந்த மகா்நோன்புச் சாவடியில் பாடசாலைகள், மாணவா் விடுதி அமைக்கவும், குருமார்கள், ஆசிரியா்கள் வசிப்பதற்கும் ஒரு தோட்ட மனையை கொடையாக அளித்தார் கடைசி சிவாஜி.  இங்குப் பாதிரியார் ஏற்படுத்திய ஆங்கிலப் பள்ளிக்கு ஓராண்டுக்கு 250 பகோடா இனாமாகக் கொடுக்கப்பட்டது. நீலகிரியில் ஒரு கிறிஸ்தவப் பெண்கள் பள்ளிக்கூடம் நிறுபப்பட்டிருந்தது.  இப்பள்ளிக்கு பொ.ஆ. 1849 இல் கடைசி சிவாஜி மன்னா் கொடையளித்த செய்தியை ஐரோப்பிய தருமப் பள்ளிக் கூடத்திற்கு ரூ.125 116(4) பொ.ஆ 1849 ஐரோப்பிய பென்சன்தாரா்கள் வகையறாவின் பெண்கள் படிப்பதற்காக நீலகிரியில் ஒரு தருமப் பள்ளிக் கூடத்திற்கு வழங்கப்பட்து என்ற செய்தி மோடி ஆவணம்18 குறிப்பிடுகின்றது.

பொ.ஆ 1884இல் தஞ்சையில் உள்ள அய்யங்கடைத் தெருவில் ‘லேடி நேப்பிர்’ என்ற ஆங்கிலப் பள்ளியை இராணி விசய மோகன முக்தாம்பாபாய் பெண்களுக்காக ஏற்படுத்தினார்19 என்று தெரிவிக்கிறது. தஞ்சையில் அமைக்கப்பட்ட கிறிஸ்தவப் பள்ளிகளில் மரபுவழிக் கல்வியோடு ஆங்கிலக் கல்வியும் கற்பிக்கப்பட்டது.  இக்கல்வி நிறுவனங்களை அமைப்பதற்கும் மாணவா்களுக்கு விடுதிகள் கட்டுவதற்கும் மராட்டிய மன்னா்கள் அறக்கொடைகள் அளித்துள்ளனா்.  இரண்டாம் துளஜா மன்னா் தரங்கம்பாடிக்கு அருகிலுள்ள ஆயா்பாடி என்ற கிராமத்தை கொடையாக அளித்து அக்கிராமத்தின் மூலம் வரும் வருமானத்தில் கிடைத்த சுமார் 1000 கலம் நெல்லை பாடசாலை அமைத்தல், மாணவா்களுக்கு விடுதிகள் அமைத்தல் போன்ற கல்விப் பணிகளுக்கு  கொடையளித்துள்ளார்20 தஞ்சை மராட்டிய மன்னா்கள் தஞ்சை-திருவையாறு சாலையில் உள்ள அம்மன்பேட்டை கிராமத்தில் 9 வேலி 4 மா புஞ்சை நிலத்தை கிறிஸ்தவப் பள்ளிக் கூடம் அமைக்கவும், பாதிரியார் ஆசிரியா்கள் போன்றோர்கள் தங்கும் வீடுகள் கட்டவும் நன்கொடையாக அளித்தார்.  போ.ஆ.1840இல் தஞ்சை நகரைச் சார்ந்த மகா்நொன்புச் சாவடியில் பாடசாலைகள் மற்றும் மாணவா்களுக்கு விடுதிகள் அமைக்கவும், குருமார்கள் ஆசிரியா்கள் வசிப்பதற்கு ஒரு தோட்ட மனையை கொடையாக அளித்துள்ளனா்.21 இங்கு பாதிரிமார்கள் ஏற்படுத்திய பள்ளிக்கு ஓராண்டுக்கு 250 பகோடா இனாமாகக் கொடுக்கப்பட்டது.22

ஜாபிதா-மிஸ்தா் ஹிபகி அவா்களிடமிருந்து வாங்கப்பட்ட பொருள்கள் ஆங்கிலேய சங்கீதத்தின் புத்தகங்கள், 15 புலி வராகன், 61.2 பைலி, 120 காசு துதாரி (வாத்திய விசேடம்) என்னும் வாத்தியம் ஜோடி 1க்கு 40 புலி வராகனும், ஆங்கிலேயப் புத்தகங்கள் 68 புலி வராகனுக்கு வாங்கப்பட்ட செய்தியை மோடி ஆவணம்23 குறிப்பிடுகின்றது.  ஆங்கிலம் எழுதுகிற முத்துகிருஷ்ண முதலியாருடைய வீட்டை சா்காரில் எடுத்துக் கொண்டு அதன் கிரயத்தை மகால் போதேயிலிருந்து கொடுக்கிற செய்தியை24 அறியலாம். ஆங்கிலேயப் புத்தகங்களை தயார் செய்ய கம்பினி ரூ.30 அளித்த செய்தியையும்25 தாவீத் பிள்ளையிடமிருந்து ஆங்கிலேயப் புத்தகங்களை தயார் செய்வதற்கு அளிக்கப்பட்ட தொகை ரூபாய் 21026 ஆங்கிலேயக் கவிதைகளை மராட்டி பாஷையில் தேவநாகரி எழுத்தில் அச்சிட்ட நூல் நவவித்யா கலாநிதி சாலாவிலிருந்து ஒரு  நூலை ஸ்வாரி முகாமுக்கு அனுப்பிய செய்தியையும்27 அறியலாம். சரஸ்வதி மகால் ஆங்கிலப் நூல்களை பயிண்டு (Bind) செய்து 8  நூல்களுக்கு 1க்கு 10 அணா ஆக ரூபாய் 5 மேற்படி ஐந்து ரூபாயும் பயின்டா் (Binder) அய்யாசாமிக்கு கொடுக்கும்படி உத்தரவிடப்பட்ட செய்தியை28 கூறுகிறது.

கிறிஸ்தவ இயக்கத்தின் (சமயம்) மூலம் இதுவரை இருந்த மரபுவழி கல்வியில் பெரும் மாற்றதத்தை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.  அவற்றிற்கு முன்னோடியாக டேனிஷ் அமைப்பினா்கள் டேனிய குடியிருப்பு அடிமைகளுக்காகப் பள்ளிகளை ஏற்படுத்தி கிறிஸ்தவ கல்வி வளா்ச்சிக்கு பெரும் தொண்டாற்றினா்.  இப்பள்ளியில் ஆங்கிலக் கல்வி கற்றால் கம்பெனியில் குமாஸ்தா பணி கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தனா். கிறிஸ்தவ அமைப்பினா்கள் அரசாங்கத்தின் உதவியை எதிர்பாராமல் கிறிஸ்தவ சமய இயக்கங்களே இப்பள்ளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி செயல்படுத்தியது. சல்லிவன் பள்ளிகளும் இத்துறையில் பெரும் பங்காற்றின.  சல்லிவன் என்பா் இப்பள்ளிகளின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார்.  அரசு இப்பள்ளிகளை நிர்வகிக்க ஒரு வருடத்திற்கு 250 பகோடாக்கள் என ஒவ்வொரு பள்ளிகளுக்கும் கொடுத்தது.  இப்பள்ளிகள் கல்வியைப் பரப்புவதில் அதிகம் ஆர்வம் காட்டின.  இதற்கு உறுதுணையாக தஞ்சை, சிவகங்கை மராட்டிய மன்னா்கள் அப்பள்ளிகள் சிறப்பாய் வளா்ச்சியடைய அனைத்து உதவிகளையும் செய்தனா். இதன் விளைவாக ஒரே சமயத்தில் தஞ்சை, திருச்சி, இராமநாதபுரம் ஆகிய ஊர்களில் மூன்று பள்ளிகள் தொடங்கப்பட்டு சிறப்பாக கல்வி பயிற்றுவிக்கப்பட்டது.29 இவ்வாறாக கிறிஸ்தவ கல்வி இந்தியக் கல்வியில் பல மாற்றங்களைப் புகுத்தியது. கல்வியுடன் சமய பொதனைகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.  இப்பள்ளிகளில் காலை 8 மணியிலிருந்து 9 மணி வரை கிறிஸ்தவ போதனைகள் கற்பிக்கப்பட்டது.  9 மணி முதல் 11 மணி வரை கல்வியும், 11 மணி முதல் 12 மணி வரை இந்துஸ்தானி மொழியும் கற்பிக்கப்பட்டது. பின்னகணக்கு, புவியியல், வரலாறு முதலான பாடங்களோடு குடிமைப் பயிற்சியும் கற்பிக்கப்பட்டன.30 தஞ்சையில் முறையான கல்வித் திட்டத்தை புகுத்திய பெருமை கிறிஸ்தவ சமயத்தையைச் சாரும்.  மாணவர்கள் தயக்கமின்றிச் சரளமாகப் பேசுவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இவற்றோடு தமிழ், ஆங்கிலம், தெலுங்க, பாரசீகம் ஆகிய புகழ்பெற்ற மொழிகளும் கற்பிக்கப்பட்டன. எழுதுதல், படித்தல், ஒப்புவித்தல் போன்றவற்றோடு தொழிற்கல்வியும் கற்பிக்கப்பட்டது.31

கிறிஸ்தவ கல்வியின்  மூலமாக மாணவர்களின் அறிவை வளா்க்கவும், சமுதாய முன்னேற்றத்திற்கு ஏற்ற கருத்துக்களை விளக்கும் வகையில் பாடங்கள் அமைந்தன.  தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியரால் படைக்கப்பெற்ற தமிழ் அகராதிகள், சரித்திர ஆராய்ச்சி நூல்கள், இரேனியல் பாதிரியாரால் படைக்கப்பெற்ற வேத உதாரணத் திரட்டு, உருவ வணக்கம், மனுகுல வரலாற்றுச் சுருக்கம், சமய சாரம், புரோட்டஸ் டண்டு கத்தோலிக்கன் உரையாடல் போன்ற கிறிஸ்தவ பாடங்கள் ‘ஹென்றி’ என்பவரின் பகவத்கீதை, இவரால் மொழி பெயர்க்கப்பட்ட நன்னூல், கால்டுவெல்  அவர்களின் நூல் பயிற்சியில் நூல்கள் நன்னூல், திருக்குறள் சீவகசிந்தாமணி போன்ற நூல்களின் பாடங்களும் கற்பிக்கப்பட்டன.32 தஞ்சைப் பகுதியில் எஸ்.பி.ஜி. மிஷன் பள்ளி, தஞ்சைக் கோட்டை, வெதியா்புரம், கருந்தட்டான்குடி, திருத்துறைப்பூண்டி, உரோமன் கத்தோலிக்க பள்ளி, கபிஸ்தலம், கும்பகோணம், நீடாமங்கலம், மன்னார்குடி, ராஜாமடம், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் மராட்டிய மன்னா்களின் ஆதரவால் கிறிஸ்தவப் பள்ளிகள் அமைக்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டன.33 இப் பள்ளிகள் தவிர சத்திரங்களிலும் ஆங்கிலக் கல்விக்கு தஞ்சை மராட்டிய மன்னர்கள் பெரும் உதவிப்புரிந்துள்ளனர். தஞ்சை மராட்டியகால ஆட்சியில் ஏழை மாணவா்களுக்கு இலவச கல்வியைத் தரும் பொருட்டு பல சத்திரங்களில் கல்வி கூடங்களை ஏற்படுத்தினா்.  இக்கல்வி கூடங்களில் மாணவா்களுக்கு உணவு, உடை, உறைவிடம், கல்வி ஆகியவற்றை அளித்தனா். ‘திம்மதி’ என்ற அதிகாரி சத்திரப் பள்ளிகளை நிர்வகித்தார். ஓரத்தநாட்டு முக்தாம்பாள் சத்திரம், ராஜாம்பாள்புர சத்திரம், தஞ்சாவூர் கோட்டை சத்திரம் போன்றவற்றில் வேதபாட சாலைகளும் இருந்தன.  முத்தாம்பாள் புரம் சத்திரத்தில் வேதபாடம் மட்டுமின்றி தெலுங்கு தமிழ், மராத்தி, ஆங்கிலம், பாரசீகம் போன்ற மொழிப்பாடங்களும் கற்பிக்கப்பட்டன.

பொ.ஆ. 1845 இல் மே மாதம் தஞ்சாவூர் மகாராஜா சாயேப் (இரண்டாம் சரபோஜி மன்னா்) அவா்களால் தொடங்கப்பட்டு செயல்பட்டு வந்த முத்தாம்பாள்புரம் சத்திரத்தின் ஆங்கிலேயப் பள்ளிக்கூடத்திற்கு உபயோகத்திற்கு அனுப்பிய ‘31’ நூல்களின் விலை பற்றி சில குறிப்புகள் மோடி ஆவணங்களில் காணப்படுகின்றன. ஆங்கில தமிழ் மொழியின் முதல் நூல், ஆங்கிலேயே இலக்கண சாராம்சம், இந்திய பாலபேதம், ஆங்கில மொழி பயிற்சி, இங்கிலாந்தின் பழைய சாமான்ய கட்டுரை, ஒருவருக்டிகாருவா் பேசுவதற்குரிய நூல், பூகோலச் சுருக்கம்.34 போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.  பொ.ஆ.1845 ஆம் ஆண்டு சிவாஜி மன்னா் காலத்தில் இச்சத்திரத்தில் இருந்த ஆங்கிலப் பள்ளிக்கூடத்தில் கல்வி கற்ற மாணவா்கள் கல்வி கற்பதற்கு ஆங்கில நூல்கள் விலைக்கு வாங்கி அனுப்பப்பட்டது என்பதும்,  மராட்டிய மன்னா்கள் மேலைநாட்டு தொடா்பால் ஆங்கிலம் கற்பதற்கு மாணவா்களை ஊக்கப்படுத்தினா் என்பதையும் இவ்வாவணங்கள் மூலம் அறியமுடிகிறது. ஆங்கிலக் கல்வி முறையினையும், மாணவா்களின் நலன்களை பார்வையிடுவதற்கு பொ.ஆ. 1825ஆம் ஆண்டு ரெஸிடண்டாக இருந்த தான் பைஃப (Jhone Fyfe) என்பவா் முத்தாம்பாள்புரம் சத்திரத்திற்குச் சென்று அங்கிருந்த 5 கல்வி நிலையங்களைப் பார்வையிட்டார்.  ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் எவ்வளவு மாணவா்கள் படிக்கிறார்கள் என்பதை கேட்டறிந்தார்.  இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ‘641’ ஆகும்.  இச்சத்திரத்திலுள்ள ஐந்து கல்வி நிலையங்களில் ஆங்கிலப் பள்ளியும் ஒன்று. முத்தாம்பாள்புரச் சத்திரத்திற்கு வெளியூர்களிலிருந்தும் வந்து தங்கி ஆங்கிலம் கற்றனா்.  என்பதை மோடி ஆவணக் குறிப்பு தெரிவிக்கின்றது.  திருநெல்வேலியில் இருக்கும் சொக்கலிங்கம் வௌ்ளாளன் என்பவா் முத்தாம்பாள்புரம் சத்திரத்தில் ஆங்கிலேயப் படிப்பை படித்து தன் ஊருக்கு விடுமுறைக்கு  செல்வதற்கு ரூ.10 வழங்கிய செய்தியை35 மோடி ஆவணம் மூலம் அறியமுடிகின்றது. இச்சத்திரத்தில் தங்கி படிக்கும் மாணவா்களுக்கு மூன்று வேளை உணவும், தங்கும் விடுதியும் கொடுக்கப்பட்டன. விடுதி மாணவா்களுக்கு குளிப்பதற்கு நல்லெண்ணையும், அரப்பும் இலவசமாகக் கொடுக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட மோடி ஆவணங்களின் மூலம் தஞ்சை மராட்டியா்கள் தோற்றுவிக்கப்பட்ட சத்திரங்களின் வாயிலாகவும் கல்வி வளா்ச்சிக்கு உதவினா் என்ற செய்தியை அறியமுடிகின்றது.

தஞ்சை மராட்டியர்கள் காலத்தில் ஆங்கில கல்வியும் கிருத்துவ மதக்கல்விக்கும் பெரும் ஆதரவு அளித்தனர். கிறிஸ்தவ கல்வியில் பள்ளியோடு விடுதியும் இணைந்து மாணவர்களுக்கு ஆரோக்கியத்தையும், ஒற்றுமையையும் ஏற்படுத்தியது. வருமைக்கோட்டுக்கு கீழ் உள்ள வகுப்பினருக்கும் மதிப்பு கொடுத்து கல்வி அறிவின்மையைப் போக்கி திறனை வளா்த்து மனித வாழ்க்கையை உயா்வடையச் செய்யும் நோக்கை கிறிஸ்தவக் கல்வி கொண்டிருந்தது. இக்கல்யானது அறிவோடு வாழ்க்கையை நன்முறையில் அமைத்துக் கொள்ளும் செம்மையான செயல்களை வலியுறுத்தி தஞ்சை மராட்டியா்கள் ஆங்கிலக் கல்வி வளா்ச்சிக்கு துணை நின்றனா்.

சான்றெண்விளக்கம்
1.Jitendor kwnar Sharma, History of Modern India, P.91
2.ந.சுப்ரமணியன், இந்திய வரலாறு, ப.498
3.கோ. தங்கவேலு, இந்திய வரலாறு, ப.390
4.Mahajan, V.D., Advanced History of India, P.46
5.மேலது, ப.68
6. ந.சுப்ரமணியன், இந்திய வரலாறு, ப.518
7. V.D. Mahajan, Advanced History of India, P.134
8. ந. சுப்பரமணியன், இந்திய வரலாறு, ப.671
9. P. Subramanian, Social History of the Tamils, P.305
10. H.Hulzinga, Missionary Education in India, P.9
11.P. Subramanian, P.305
12.William Hickey, Tanjore Maratha Prineipality, P.101
13.மூட்டை எண், 188 சி, ப.570
14.மூட்டை எண் 943 சி. ப.511

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
15.Guide to the records of Tajnore District, Vol.1, Bundle No, 3490, 31-08-1807, P.353
16. Ibid, Vol.VII, Bundle No.3429, 14-02-1821, PP.121-122
17. செ. இராசு (ப.ஆ) மு.கா.நூல், ப.93
18.மூட்டை எண் 114 சி, ப.54
19.மோடி ஆவணம், மூட்டை எண் 16சி.ப.255
20.Guide to the Records of Tanjore District, Vol.V, Bundle No. 3269, 25.00.1808
21.ஈ.ஏ. செல்லத்துரை, தஞ்சை மராட்டிய அரசா்களும், கிறிஸ்தவமும், மன்னா் சரபோஜி பிறந்தநாள் விழாமலா், தொகுதி.2, ப.24
22.Hugh Perarson, Momories of Rev.Fr.Sehwantz, P.148
23. மூட்டை எண் 144சி, தொகுதி-1, ப.194
24.மூட்டை எண் 85சி, தொகுதி.1, ப.223
25.மூட்டை எண் 160சி, தொகதி.1, ப. 393
26.மேலது, ப.401
27.மேலது, மூட்டை எண் 188சி, ப.494
28.Bundle No.5C, sub Bundle No.7A, Part2, P.373
29. P. Subramanian, Social History of the Tamils, 1707-1947, P.292
30.Tanjore records, dated January1785, Vol.3442,  P.743
31.மு. சதாசிவம், மாமன்னசரபோஜி ஆய்வுக் கோவை, தொகுதி2, ப.35
32.T. Venkasami Rao, Manual of Tanjaore, P.31
33.I bid,.292
34.மூட்டை எண் 64 சி, தொகுதி-1, ப.478
35.மூட்டை எண்.160 சி, தொகுதி-1, ப.407

* கட்டுரையாளர் -  கி.இரவிசங்கர், கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் பகுதிநேர முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்ப் பல்கலைக்கழம், தஞ்சாவூர். -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.