முன்னுரை

தெய்வச்சிலையாரின் இலக்கிய மேற்கோள்களில் : எச்சக்கிளவிகளை முன்வைத்து தொடரியல் சிந்தனைகள்சங்ககால மக்களின் வாழ்க்கை முழுவதும் பண்பாட்டு மயமாக்கப்பட்டச் சூழல். அதனால் அவர்கள் பண்பாடு கருதியே குறிப்பால் நிறங்கள் வழி தங்களது பாலியல் செய்திகளை உணர்த்தி வந்தனர். சங்க இலக்கியத்தில் பாலியல் புனைவுகளை வெளிப்படையாகச் சுட்டும் மரபு இல்லை. அவற்றை நிறங்கள் வழிக் கூற முற்பட்டுள்ளனர். சமூகத்தில் படைக்கப்பட்ட நிறம் மொழியமைப்பில் ஓர் ஊடகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிறங்கள் சமூகக் கட்டமைப்பில் குறியீடாகவும், சமுதாயத்தினரின் எண்ணங்களை உள்ளடக்கியதாகவும் திகழ்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வண்ணக்குறியீட்டின் வழியாக சங்க மகளிர் தம் பாலியல் உணர்வுகளை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் என்பதை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்துள்ளது.

நிறக்குறியீடு

மனிதன் தனது கருத்துகளைப் பிறரிடம் பரிமாறிக் கொள்ளும் கருவியாக மொழியைப் பயன்படுத்துகிறான். இம்மொழியினை நாம் இருவகையாகப் பகுக்கலாம். ஒன்று சைகைமொழி அல்லது குறியீட்டு மொழி, மற்றொன்று பேச்சுமொழி. மேற்கூறியவற்றுள் குறியீட்டு மொழியினை நோக்கும்பொழுது அதில் பலவகை உண்டு. அவற்றுள் ஒன்றாக நிறத்தைக் (வண்ணம்) குறிப்பிடலாம். நிறத்திற்கும் மனிதனுக்குமான உறவு ஆதிகாலம் முதல் இன்று வரை மிக நெருக்கமான ஒன்றாகத் திகழ்கிறது. இந்நிறங்களைக் குறியீடாகப் பயன்படுத்தும் பொழுது அதற்குரிய தன்மை அல்லது பொருண்மையின் அடிப்படையில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

பொன்மை நிறம்

சங்க இலக்கியத்தில் ‘பசலை’ நோய் பெரும்பாலும் களவொழுக்கத்தில் தலைவியிடம் நிகழ்வதாகும். இதற்கென ஒரு தனிநிறம் இல்லை. தலைவியின் இயல்பான நிறத்தில் காணப்படும் மாற்றமே பசப்பு நிறமாகும். களவொழுக்கத்தில் தலைவன் பிரிவிற்கு ஆற்றாத தலைவி அவன் வரையாது விடுவானோ என்னும் அச்சமிகுதியும் அலர் அச்சமும் அவள் உடல் நிற வேறுபாட்டிற்குக் காரணம் எனக் கூறலாம். தலைவன் தான் கூறிச் சென்ற பருவத்தே வாராமையால் வருந்திய தலைவி, தான் பசலையிற்ற நிலையையும் பருவம் வந்தமையையும் யாரேனும் தலைவரிடம் சென்று அறிவுத்தினால் நலமாகும் என்று தோழிக்குக் கூறுகிறாள். தலைவியின் இத்தகைய மனப்போரட்டத்திற்குக் காரணம் பாலுணர்ச்சியே

“நீர்வார் பைம்பதற் கலித்த

மாரிப் பீரத்தலர்சில கொண்டே” (குறு.98 : 4-5)

இவ்வடிகளின் மூலம் தலைவியின் பாலியல் உணர்ச்சி புறநிலைக் குறியீடுகளின் வாயிலாக வெளிப்படுத்துவது ஆகும். அவ்வாறு வெளிப்படுத்துவதற்கு இங்கு பொன்மை நிறம் பயின்று வந்துள்ளது. தலைவன் பிரிவால் தலைவிக்குப் ‘பசலை நோய்’ வந்துவிட்டது. இதைத் தலைவனிடம் சென்று தோழியை உணர்த்தச் செய்வதன் பொருட்டு பீர்க்க மலரைக் காட்டவேண்டும். இத்தகைய பீர்க்க மலரின் ‘நிறம்’ தலைவர்க்குப் பசலை நோயின் நிறத்தை உணர்த்தும். எனவே இங்கு தலைவியின் பாலியல் உணர்வைப் புறநிலைப் பொருள்களின் வழி அதாவது பொன்மை நிறம்வழி தலைவனுக்கு உணர்த்தும் நோக்கு அறியமுடிகிறது.

செந்நிறம்

“நிறம் என்ற சொல் தொடக்கக் காலத்தில் பொதுத் தன்மையில்லாமல் சிவப்பை மட்டுமே பொருளாகக் கொண்ட இரத்தத்தின் நிறத்தையே குறித்தது” என்ற கருத்தினை டி.டி கோசாம்பி என்பவர் “பண்டை இந்திய வரலாறும் அதன் பண்பாடும்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சங்க இலக்கியத்தில் செந்நிறம் குறித்த பதிவுகள் பாலியல் பொருண்மையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்க இலக்கியத்தில் மகளிர்தம் பாலியல் உணர்வை வெளிப்படுத்த ‘செந்நிறம்’ சிறப்பானதொரு இடத்தைப் பெறுகிறது.

தலைவன் பரத்தையர் காரணமாகப் பிரிந்த பிரிவின்கண் தலைவிக்குப் பூப்புத் தோன்றிய பன்னிரு நாட்களும் தலைவியை விட்டுப் பிரிந்திருத்தல் கூடாது என்கிறது தொல்காப்பியம்

“பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும்

நித்தகன் நுறையார் என்மனார் புலவர்

பரத்தையிற் பிரிந்த காலையான்” (தொல். கற்பியல் : 187)

“தலைவி பூப்பெய்திய செய்தியைத் தலைவனுக்கு உணர்த்த சேடியர் செய்த கோலங்கொண்டு பரத்தையர் மனைகட் செல்வார். இத்தகைய சேடியர் கோலம் தான் செவ்வணி. இக்குறியீடுதான் தலைவி பூப்பெய்திய செய்தியைத் தலைவனுக்கு உணர்த்தும்.

மேலும் பரத்தையிற்பிரிவின் வகையில் உணர்த்தி உணரும் ஊடற்குரிய கிளவிகள் பதினொன்றில்,

“செவ்வணியணிந்து சேவடியை விடுப்புழி” (நம்பி. 205-7)

என்னும் பாடல் அடியின் மூலம் செவ்வணி என்ற சொல்லை மூல அடியில் முதலில் பயன்படுத்தியது நம்பி அகப்பொருள். எனவே பூப்புச் செய்தியை அறிவிக்க ‘சிவப்பு நிறம்’ இலக்கணத்தில் பயன்படுத்தியது தெரிகிறது.

சங்க இலக்கியத்தில் செவ்வணி நிகழ்வு கற்புக்கால ஊடலில் பரத்தையர் பிரிவின்கண் தோன்றியதைப் பரிபாடல் உணர்த்துகிறது.

“தோள்புதிய உண்ட பரத்தை இல்சிவப்புற

நாள் அணிந்து, உவக்கும் சுணங்கறை யதுவே” (பரி.19 : 19-20)

இதில் தோழி செவ்வணி அணிந்துகொண்டு பரத்தையர் சேரி வழியே தலைவிக்காகச் சென்றாள் என்ற செய்தி தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை காணலாம். இங்கு தலைவியின் பாலுறவு உணர்த்துவதற்கு ‘சிவப்பு நிறம்’ பயன்பட்டுள்ளது.

சங்கப் புலவர்கள் தங்கள் பாடல்களில் இச்சை வேட்கையை நிறங்கள் வழி வெளிப்படுத்துகின்றனர். இச்சை வேட்கைத் தொடர்புடைய ஆண்குறியும், பெண்குறியும் சங்கப் பாடல்களில் அதிக அளவில் உருவகப்படுத்தப்படுகிறது. மேலும் சங்க இலக்கியத் தலைவன் தலைவி பேச்சில் நிறங்கள் வழி வெளிப்படுத்துகின்றன. இதனை,

“செம்புலப் பெயல்நீர் போல

அன்புடைய நெஞ்சந்தாங் கலந்தனவே” (குறுந்.40. 4-5)

என்னும் பாடல் அடிகளின் மூலம் மழை ஆண்மைக்கும், செம்புலம் பெண்மைக்கும் குறியீடுகளாகின்றன. இப்பாடல் குறிஞ்சித் திணைவகை என்பதலால் ‘புணர்தலும் புணர்தல் நிமித்தமும்’ என்னும் கருத்து வெளிப்படுகிறது, வளமை என்பது மழை என்னும் ஆண்மையும், ‘சிவந்தநிலம்’ என்பது பெண்மையும் கலத்தலைக் குறிக்கும். இந்தக் குறியீட்டாக்கம் பழந்தமிழர் சிவப்பு நிறத்தின் வழி பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது புலனாகும். மேற்கூறியவற்றை நிரூபிக்கும் நோக்கில் ‘செந்நிறம்’ புணர்தலுக்குரிய ஓர் அடையாளமாக விளங்குவதை நன்று அறிந்து கொள்ள முடிகிறது. இப்பொருண்மையின் நீட்சியாகத்திhன் தமிழர் தங்கள் வாழ்வில் நிகழ்த்தப்பெறும் அனைத்து சடங்குகளிலும் குறியீடாகக் செந்நிறத்தை பயன்படுத்துகின்றனர்.

சங்க இலக்கியத்தில் குருதி என்ற சொல் 67 இடங்களில் பயின்று வந்துள்ளது. இக்குருதி என்னும் சொல்லாட்சி குருதி, போர்கள் வேட்டை, பலியிடுதல் என்ற பொருண்மையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏனைய ஐந்து இடங்களில் குருதி உவமையாகக் கையாளப்பட்டுள்ளது.

“தோடார் தோன்றி குருதிபூப்ப” (முல்லை.96)

“குருதி ஒப்பின் கமழ்பூங் காந்தள்

வரியணி சிறகின் வண்டுண மலரும்” (நற்.399)

“குருதிப் பூவின் குலைக் காந்தட்டே” (குறுந்.1)

ஆகிய வரிகளில் ‘குருதி’ என்ற சொல் ‘காந்தள்’ மலரோடு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. மேற்கூறிய வரிகளுள் நற்றிணை, குறுந்தொகை அமைந்துள்ள இரண்டு பாடல்களுமே களவுக் காலச்சூழலை வெளிப்படுத்துபவையாக அமைந்துள்ளன.

இப்பாடல்களின் மூலம் குருதியின் நிறமுடைய காந்தள் மலர் தலைவியாகவும் அதனை உண்ண வரும் வண்டு தலைவனாகவும் உவமைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குருதி நிறமுடைய காந்தள் மலர் புணர்தலுக்குரிய ஓர் அடையாளமாகக் பயன்படுத்தப்பட்டதை சங்கப்பாடல்களில் காண முடிகிறது. புணர்தலுக்குரிய அடையாளமாகச் செந்நிறத்தைப் பயன்படுத்தினார் என்ற காரணத்தைக் காண விழையும்போது, பெண் பாலினத்தின் பூப்பின் மூலம் வெளிப்படும் குருதியைக் குறிப்பிடலாம்.

பூப்புக் காலத்தின்பொழுது வெளிப்படும் குருதிக்கு உயிர்ப்புச் சக்தி இருப்பதனால் இக்காலங்களில் புணர்வதால் நல்ல இனப்பெருக்கத்தை உருவாக்க முடியும் என்ற கருத்து உண்டு. எனவே, இக்காலங்களில் புணர்தல் என்பது அவசியமாகிறது. இந்நிகழ்வினை மையமாகக் கொண்டு சங்க இலக்கியத்தில் தலைவி தனது பூப்பின் வெளிப்பாட்டைத் தலைவனுக்கு எவ்வகையில் உணர்த்துகிறாள். என்பதை,

“குக்கூ என்றது கோழி; அதன் எதிர்

துட்கென்றன்று என்தூஉ நெஞ்சம்

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள்போல் வைகறை வந்தன்றால் எனவே” (குறுந்.157)

என்ற அடிகளின் மூலம் தலைவி தனது பூப்பின் வெளிப்பாட்டை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இதில் பூப்பை அடையாளப்படுத்தும் வகையில் ‘வைகறை’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. வைகறை என்பதின் மூலம் அது செந்நிற வானத்தையும் விடியற்காலைப் பொழுதையும் குறிப்பதால் தலைவி அந்நாளில் தான் பூப்பு எய்தினாள் என்ற செய்தி தெளிவாகிறது. மேலும் இக்காலத்தில் தலைவி, தலைவனுடன் சேரமுடியாமல் பிரியும் நாட்களை எண்ணி வருந்துவதாக இப்பாடலின் பொருள் அமைந்துள்ளது.

தலைவி தனது பூப்பின் வெளிப்பாட்டைத் தலைவனுக்கும் தெரிவிக்க பயன்படுத்தும் உத்திகளாக,

“எம்நயத்து உறைவி ஆயின், யாம் நயந்து

…………………. ஒண் செந்காந்தள்

வாழைஅம் சிலம்பின் வம்புபடக் குவைஇ

யாழ் ஓர்த்தன்ன இன்குரல் இனவண்டு” (நற்.176)

என்ற பாடலின் தலைவி பூப்பு நீராடிய செய்தியைப் பரத்தையர் உடன் இருக்கும் தலைவனுக்கு உணர்த்தும் வகையில், தனது தோழிக்குச் செந்நிற ஆடை, அணிகலன்கள், மலர்கள் ஆகியவற்றால் ஒப்பனை செய்து அவளைப் பரத்தையர் வீதியின் வழியே செல்லச் செய்கிறாள். தோழியின் இச்செவ்வணி அடையாளத்தைக் கண்ட தலைவன் காலம் தாழ்த்தாது தலைவியுடன் வந்து சேர்ந்து மகிழ்வான் என்பது புலனாகிறது.

முடிவுகள்

சங்க மகளிர் தம் பாலியல் புனைவுகளை வெளிப்படுத்த நிறங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

தலைவியின் பூப்புக்காலத்தைத் தலைவனுக்கு உணர்த்தும் பொருட்டு, தோழி செவ்வணி அணிந்து செல்லுதல் அக்கால மரபு என்பது தெளிவாகிறது.

செந்நிறம் புணர்தலுக்குரிய ஓர் அடையாளமாகவும், தமிழர் தம் வாழ்வில் நிகழ்த்தப்பெறும் அனைத்துச் சடங்குகளிலும் வண்ணங்களைப் பயன்படுத்தி வந்தனர் என்பது புலனாகிறது.