எழுத்தாளர் முருகபூபதிபேராசிரியர் க. கைலாசபதி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தின் முதல் தலைவராக நியமனம் பெற்றதையடுத்து, அவர் 1976 ஆம் ஆண்டு இலக்கிய உலகிற்கும் இலக்கிய மாணவர்களுக்கும் பயனுள்ள ஆய்வரங்கொன்றை இரண்டு நாட்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்திருந்தார். தமிழகத்திலிருந்து அசோகமித்திரனும் அழைக்கப்பட்டிருந்தார். குறிப்பிட்ட 1976 ஆம் ஆண்டு தமிழ் நாவல் நூற்றாண்டுக்காலமாகும். பல முன்னோடி நாவலாசிரியர்களை உலகுக்கு அறிமுகப்படுத்தியிருந்த தமிழ்நாடு, இந்த நூற்றாண்டுக்காலத்தை ஏனோ மறந்துவிட்டிருந்தது. இத்தனைக்கும் தனது வாழ்நாள் பூராகவும் தன்னை ஒரு எழுத்தாளன் என்று நிறுவிவரும் கலைஞர் தமிழக அரசில் அப்போது முதல்வராக பதவியிலிருந்தார். இவ்வாறு தமிழகம் மறந்த பல விடயங்கள் இருக்கின்றன. 1990 ஆம் ஆண்டு சென்னை அடையாறில் இலக்கிய ஆர்வலர் (அமரர்) ரங்கநாதன் அவர்களின் இல்லத்தின் மேல்மாடியில் நடைபெற்ற மல்லிகை 25 ஆவது ஆண்டு மலர் அறிமுகநிகழ்வில் கலந்துகொண்ட இலக்கிய விமர்சகர் சிட்டி அவர்கள், இலங்கையரின் பல முன்மாதிரிகளை சுட்டிக்காட்டிப்பேசும்போது கைலாசபதியினால் நடத்தப்பட்ட நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கையும் தொடர்ச்சியாக 25 ஆண்டுகளையும் கடந்து வெளியாகும் மல்லிகையையும் சிலாகித்துப்பேசினார். மேற்சொன்ன யாழ்.பல்கலைக்கழக நாவல் நூற்றாண்டு ஆய்வரங்கிலும் அடையாறில் நடந்த மல்லிகை நிகழ்விலும் நான் கலந்துகொண்டிருக்கிறேன்.

எல்லாமே நேற்று நடந்ததுபோன்று நினைவில் தங்கியிருக்கிறது. இந்த நினைவை முன்னிறுத்தியே கடந்த 2011 ஆம் ஆண்டு இலங்கையில் கொழும்பில் நடைபெற்ற முதலாவது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் எனது தொடக்கவுரையில் இலங்கை இலக்கிய உலகின் சில முன்மாதிரிகளைச்சுட்டிக்காட்டினேன்.

இலங்கையில் இதுவரையில் நூற்றுக்கணக்கான நாவல்கள் வெளியாகியுள்ளன. செங்கை ஆழியானிடமும்  கனடாவில் தற்போது வதியும் கலாநிதி நா.சுப்பிரமணியனிடமும் இதுதொடர்பான நீண்ட பட்டியலே இருக்கிறது. பத்திரிகைகள், இதழ்களில் வெளியான தொடர்கதைகளும் நாவல் என்ற பெயரில் நூலுருப்பெற்றுள்ளன. இவ்வாறு தொடர்கதையாக எழுதி நாவலாக நூல்வடிவில் வெளியிடும் மரபு தற்காலத்தில் மிகவும் குறைந்துவருகிறது. தொடர்கதைகளை நாவல் என்று கருதமுடியுமா? என்ற விமர்சனங்களும் விவாதங்களும் தொடருகின்றன.

கைலாசபதி, நாவலாசிரியர் செ.கணேசலிங்கனின் ‘செவ்வானம்’ என்ற பெரிய நாவலுக்கு எழுதிய நீண்ட முன்னுரையே பின்னர் அவரால் விரிவுபடுத்தப்பட்டு எழுதப்பட்ட ‘தமிழ்நாவல் இலக்கியம்’ என்ற  நூல் என்பதும், அதனை கடுமையாக விமர்சித்து விமர்சகர் வெங்கட்சாமிநாதன் எழுதிய ‘மார்க்சீயக்கல்லறையிலிருந்து ஒரு குரல்’ என்ற நீண்ட கட்டுரையும், அதனைப்பின்னர் கொழும்பிலிருந்து வெளியான (1972 காலப்பகுதியில்) பூரணி மறுபிரசுரம் செய்ததும், அதற்கு நுஃமான் மல்லிகையில் எதிர்வினையாற்றி தொடர் எழுதியதும், அதற்கு எதிர்வினையாற்றி மு.பொன்னம்பலம் மல்லிகையில் பதில் தந்ததும் இன்றைய தலைமுறை படைப்பாளிகளுக்குத் தெரியாது போனாலும் மூத்தவர்களுக்கு நன்கு தெரியும்.

கைலாசபதி தினகரனில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தை அன்றுவாழ்ந்த இலக்கியவாதிகள் பொற்காலம் என்று குறிப்பிட்டுவருகின்றனர். கைலாஸ் தொடக்கத்தில் சிறுகதை எழுதிப்பார்த்து பின்னர் விமர்சகரானவர். இதழியலிலும் தனது ஆற்றலை வெளிப்படுத்தியவர். பல எழுத்தாளர்களுடன் நேரடியாகவும் கடிதம் ஊடாகவும் தொடர்புகொண்டு புதிய விடயங்களை தினகரனில் அறிமுகப்படுத்தியவர். இளங்கீரனின் தொடர்கதைகளுக்கு களம் வழங்கியவர். அத்துடன் குறிப்பிட்ட தொடர்கதைகள் தொடர்பான வாசகர் கடிதங்களுக்கும் பிரசுரத்தில் முன்னுரிமை கொடுத்தவர்.

இந்தப்பின்னணிகளுடன் அவர் முன்னிலைவகித்து 1976 இல் நடத்திய நாவல் நூற்hறண்டு ஆய்வரங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பிட்ட ஆய்வரங்கின் முன்னோட்டமாக யாழ். பல்கலைக்கழகத்தில் சில கருத்தரங்கு அமர்வுகளையும் அவர் நடத்தியிருந்தார். சிவத்தம்பி, நுஃமான், சுப்பிரமணியன் , சித்திரலேகா மௌனகுரு உட்பட பலர் அந்த கருத்தரங்குகளில் சமர்ப்பித்த கட்டுரைகள் பின்னர் தனி நூலாகவும் தொகுக்கப்பட்டு வெளியானது. குறிப்பிட்ட ஆழமான பார்வைகளைக்கொண்ட அந்த நூலை இடப்பெயர்வுகளின்போது எங்கோ தொலைத்துவிட்டேன்.

நூற்றாண்டு ஆய்வரங்கில் இளங்கீரன், டானியல், தெணியான் உட்பட சில நாவலாசிரியர்களும் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் நடந்து முடிந்த அந்த நிகழ்வின் இறுதிவேளையில், அதுவரையில் பொறுமை காத்திருந்த மல்லிகை ஜீவா இயல்பான தர்மாவேசத்துடன் எழுந்து, ‘இந்த ஆய்வரங்கு இங்கு எம்மத்தியில் வாழும் நாவலாசிரியர்களை கனம்பண்ணத்தவறியது என்றும் நாவலாசிரியர்களுக்கும் கட்டுரை சமர்ப்பிக்க சந்தர்ப்பம் வழங்கியிருக்க வேண்டும்  என்றும் விமர்சகர்களின் வழிகாட்டுதலில் ஒரு படைப்பாளி நாவல் எழுதமுடியாது என்றும் உரத்துப்பேசிவிட்டு அமர்ந்தார்.

‘பல்கலைக்கழகத்துக்கு நாவல் தொடர்பாக மாணவர்களுக்குத் தேவைப்படும் கட்டுரைகளுக்கும் உசாத்துணைக்கும் நடத்தப்பட்ட ஆய்வரங்கு’ என்று சில படைப்பாளிகள் தமது உள்ளக்குமுறலையும் வெளிப்படுத்தியிருந்தார்கள்.

டானியலின்;  ‘பஞ்சமர்’ நாவலுக்கு யாழ்ப்பாணத்தில் மட்டுமன்றி இலங்கையில் பலபாகங்களிலும் அறிமுக விமர்சனக்கூட்டங்கள் நடந்தன. அனைத்திலும் டானியல் கலந்துகொண்டார். அதன்பின்னர் பஞ்சமரின் இரண்டாம் பாகத்தை எழுதிய அவர், அதில்வரும் ஐயாண்ணன் என்ற பாத்திரம் தான் எதிர்பார்த்தவாறு சித்திரிக்கப்படாதிருந்ததையும் ஏற்கனவே நடந்த பல பஞ்சமர் விமர்சனக்கூட்டங்களில் அவர் செவியில் விழுந்த கருத்துக்களும் அவரே அறியாமல் நுழைந்துவிட்டிருப்பதையும் உணர்ந்து, இரண்டாம் பாகத்தை பின்னர் மாற்றித்திருத்தி எழுதி முழுமைப்படுத்தினார் என்ற தகவல் கசிந்திருந்தது. இதுபற்றி டானியலுடன் நேரடிhக உரையாடி தெளிவுபெறுவதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் அவருக்கும் இந்த பல்கலைக்கழக விமர்சகர்கள் மீது கொஞ்சம் கடுப்பு இருக்கத்தான் செய்தது. அதனை அவரது கிராமிய மண்மணம் கலந்த வார்த்தையில் இப்படிச்சொன்னது நினைவிலிருக்கிறது.

“ எட தம்பி, பிள்ளை பெறாத மருத்துவச்சி கர்ப்பிணிப்பெண், பிரசவத்தின்போது எப்படி முக்கவேண்டும்” என்று சொல்லிக்கொடுப்பதுபோலத்தான் இவையளின்ட விமர்சனமும்”  டானியல் இப்படிச்சொல்லியிருக்கும் அதேவேளை பெயர் தெரியாத ஒரு மேநாட்டு அறிஞர் அதே கருத்தை இப்படி வேறுவிதமாகச்சொல்லியிருக்கிறார்: “ ஓடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்கும் முடவனே விமர்சகன்”

இந்தப்பின்னணிகளுடன் சமீபத்தில் தமிழகத்தில் வெளியான ஒரு இலக்கியத்தகவல் என்னை சிந்திக்கவைத்தது. அதனாலேயே இந்த ஆக்கத்தை எழுத முனைந்தேன். தமிழில் தலை சிறந்த  சில நாவல்களின் பெயர் வெளியிடப்பட்டிருந்தது. தி.ஜானகிராமனின் மோகமுள், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு படகு, அசோகமித்திரனின் ஒற்றன், கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம், சுந்தரராமசாமியின் புளியமரத்தின் கதை, ஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு உலகம் ஒரு வீடு, ஜி. நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே, கி.ராஜநாராயணனின் கோபல்லபுரத்து மக்கள், வண்ணநிலவனின் கடல்புரத்தில் ஆகியனவே தமிழில் சிறந்த நாவல்கள் எனக்கூறப்பட்ட பட்டியல்தான் அந்தத்தகவல்.

இந்தத்தகவலை அறிந்த அவுஸ்திரேலியாவிலிருக்கும் எனது நண்பர் ஒருவர்  குறிப்பிட்ட  நாவல்களை தமிழகத்திலிருந்து தருவித்துவிட்டு எனக்குச்சொன்னார். அதில் சிலவற்றை நான் முன்பே படித்துவிட்டிருந்தேன்.  குறிப்பிட்ட நண்பர் ஒரு எழுத்தாளர் இல்லை. அவர் நிறைய வாசிக்கும்  தேர்ந்த வாசகர். அந்த நாவல்களை ஏற்கனவே படித்து அவற்றால் கவரப்பட்ட ஒரு தமிழகத்தவரின் மதிப்பீடுதான் எனது நண்பரையும் குறிப்பிட்ட நாவல்களின் பால் ஈர்க்கச்செய்திருக்கிறது. இத்தனைக்கும்  அந்த நண்பர் இலங்கையர். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து கால்நூற்றாண்டைக்கடந்தவர். அவர் என்னிடம் கேட்ட கேள்விதான் இந்த ஆக்கத்தின் ரிஷி மூலம். " இலங்கையில் தலைசிறந்த பத்து தமிழ் நாவல்களை சொல்லுங்கள்.” என்றார். “யோசிக்க வேண்டும். அவகாசம் தாருங்கள்” என்றேன். ஏனென்றால் என்னிடம் உடனடியாக பதில் ஒன்றும் இல்லை.

இலங்கை எழுத்தாளரான செ. கணேசலிங்கன்  தமிழகத்தில் வாழ்ந்துகொண்டு தாயகத்தொடர்புடனிருப்பவர். நானறிந்தவரையில் அவர்தான் அதிகமான நாவல்கள் எழுதிய இலங்கையர். சமீபத்தில் அவருடன் தொலைபேசியில் உரையாடியபோது தான் ஒவ்வொரு வருடமும் ஒன்றுக்கு மேற்பட்ட நாவல்கள் எழுதிவிடுவதாகச்சொன்னார். அவருக்கு அடுத்ததாக இலங்கையில் அதிகம் நாவல் எழுதியவரில் செங்கை ஆழியானின் பெயர்தான் எனது நினைவுக்கு வருகிறது.  மல்லிகையில் இலங்கை நாவலாசிரியர்கள் பற்றியும் நாவல்கள் தொடர்பாகவும் விரிவாக எழுதியிருப்பவர் செங்கை ஆழியான்.
 
இலங்கையில் பத்திரிகைகளில் தொடர்கதை எழுதி பின்னர் அவற்றை நாவல் என்ற பெயரில் வெளியிட்டிருப்பவர்களின் பட்டியல் ஈழத்துத்தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலை எழுதியுள்ள தற்போது கனடாவில் வதியும் கலாநிதி நா.சுப்பிரமணியனிடமும் இலங்கையிலிருக்கும் செங்கை ஆழியானிடமும் இருக்கும் என நம்புகின்றேன்.
 
இளங்கீரன், டானியல், எஸ்.பொ, அ.ந.கந்தசாமி, சி.வி. வேலுப்பிள்ளை, செங்கை ஆழியான், செ. யோகநாதன், தெணியான், தெளிவத்தை ஜோசப், நா. பாலேஸ்வரி, உட்பட பலரது தொடர்கதைகள் நாவல் என்ற பெயரில் பின்னர் நூலுருப்பெற்றுள்ளன.  தொடர்கதையாக எழுதாமல் தனிநாவலாக எழுதியிருப்பவர்களின் பட்டியலை இங்கு விரிவஞ்சித்தவிர்க்கின்றேன். வீரகேசரி பிரசுரம் ஊடாக தனிநாவல் எழுதியிருப்பவர்களுடன் பார்த்தால் இலங்கையில் அந்தப்பட்டியல் நீளமானது. வடக்கு, கிழக்கு, மலையகம், தென்னிலங்கையிலிருந்தும் ஏராளமான நாவல்கள் வெளியாகியுள்ளன. தேசிய சாகித்திய விருது உட்பட பரிசில்களும் பெற்ற நாவல்கள் பலவுண்டு. எனினும் தலைசிறந்த நாவல்கள் எவை என்ற மதிப்பீடு எவரிடமும் இருக்கிறதா?

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற பலரும் கனடா, அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலிருந்து தொடர்கதையாகவன்றி தனி நாவல்கள் எழுதியிருக்கிறார்கள்.  ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், முல்லை அமுதன், மா.கிறிஸ்டியன், வவனியூர் இரா.உதயணன, விமல்.குழந்தைவேல் (இங்கிலாந்து), நிலக்கிளி பால மனோகரன், ஜீவகுமாரன், (டென்மார்க்) அ.முத்துலிங்கம், கதிர்.பாலசுந்தரம், தேவகாந்தன், வ.ந.கிரிதரன், அகில், கே.எஸ். பாலச்சந்திரன், குரு அரவிந்தன்(கனடா) ஷோபா சக்தி (பிரான்ஸ்) இ.தியாகலிங்கம் (நோர்வே) கருணாகரமூர்த்தி, பார்த்திபன் (ஜெர்மனி) எஸ்.பொ, மாத்தளைசோமு, நடேசன், முருகபூபதி, மனோஜெகேந்திரன், நித்தியகீர்த்தி, பாமினி செல்லத்துரை (அவுஸ்திரேலியா) ஆகியோர் இந்தப்பட்டியலில் இணைகிறார்கள். இவர்களின் படைப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்படவேண்டும். புகலிடப்படைப்புகள் பெரும்பாலும் பிறந்த மண்ணையும்  புகலிடத்தையுமே சித்திரிப்பதாகவும் முழுமையாகவே புகலிடத்தை சித்திரிக்கும் நாவல்கள் எண்ணிக்கையில் குறைவு என்றும் விமர்சனம் இருக்கிறது.

தமிழக எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தற்காலத்தில் மிகுந்த கவனிப்புக்குள்ளான படைப்பாளி. இவரது பார்வையில் தமிழில் மிகச்சிறந்த நூறு நாவல்களில் சில இலங்கை எழுத்தாளர்களின் நாவல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் ஈழத்து இலக்கியம் பற்றிய அறிமுகம் படிப்படியாக ஆனால் மந்தகதியிலேயே கிடைத்துவருகிறது. தீராநதி, உயிர்மை, காலச்சுவடு ஆகியனவற்றில் எம்மவர்களின் நூல்கள் பற்றிய அறிமுகமும் நேர்காணல்களும் வெளியாவதனாலும் ஈழப்பிரச்சினையும் முள்ளிவாய்க்கால் பேரவலமும்  அங்கு மிகுந்த கவனிப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியிருப்பதனாலும் ஈழத்து நாவல்கள் பற்றிய புரிதல் உருவாகியிருக்கிறது.

இலங்கையில் ஒரு நாவல் வெளியானதும் நடத்தப்படும் வெளியீட்டு நிகழ்வுகளில் தெரிவிக்கப்படும் கருத்துக்களிலிருந்து அதன் தரத்தை மதிப்பீடுசெய்துவிடமுடியாது. அத்துடன் அதற்கு வழங்கப்படும் தேசிய விருதின் ஊடாகவோ பாராட்டுப்பத்திரங்களின் மூலமோ அதன் தரத்தை கணித்துவிடவும் இயலாது. இலங்கையில் பெரும்பாலன விமர்சகர்கள் பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக அல்லது பேராசிரியர்களாக தகைசார் பேராசிரியர்களாக இருப்பதனால் நாவல் எழுதுபவர்களும் தமது படைப்புக்கான அங்கீகாரத்துக்கு அவர்களையே நம்பியிருக்கின்றனர். அவர்களின் முன்னுரையுடன் வரும் தமது நாவலுக்கு வாசகர் மட்டத்திலும் பல்கலைக்கழகத்திலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அவர்களுக்குண்டு.
 
இத்தருணத்தில் ஜெயமோகன,; எம்மவர் பற்றி பதிவுசெய்திருப்பதை சுட்டிக்காட்டலாம் எனக்கருதுகின்றேன். “ பெரும்பாலான ஈழ இலக்கியங்கள் அவர்களின் வாழ்க்கையின் எளிய ஆவணங்கள் என்ற அளவிலேயே கவனிக்கத்தக்கவை. இலக்கியமாக அல்ல. ஈழத்தை மொட்டையாக்கியது கோட்பாட்டு நோக்கின் மிதமிஞ்சிய மேலாதிக்கமே” என்று சொல்லும் ஜெயமோகன் இப்படியும் சொல்கிறார்:- “ ஈழம் அளவுக்குச்செல்வாக்கான கோட்பாட்டாளர்கள் எவரும் தமிழில் இருந்ததில்லை என்பதை ஒரு நல்லூழ் என்றே சொல்லவேண்டும்.” (கனடா காலம் இதழ்-2008 மே)

ஈழத்து இலக்கியத்தை கோட்பாட்டு ரீதியில் வளர்ச்சிபெற்றதாக கணிக்கும் ஜெயமோகன் மற்றும் வண்ணநிலவன், வெங்கட்சாமிநாதன்  போன்றோரின் வாதங்களை எம்மவர்கள் என்றைக்கும் ஏற்றுக்கொள்வதில்லை. மு.தளையசிங்கம், மு. பொன்னம்பலம், அ.யேசுராசா போன்றோர் விதிவிலக்கு. ‘ஈழத்தில் தமிழரின் நெருக்கடி பல அற்புதமான படைப்புகளை தந்திருக்கவேண்டும். ஆனால் ஏமாற்றமே.” என்ற கருத்துப்பட ஒரு சந்தர்ப்பத்தில் சுந்தரராமசாமியும் சொல்லியிருந்தார்.

இவர்களின் அளவுகோல்களின் அடிப்படையில் எம்மால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியாது.

எம்மவரின் படைப்புகளில் பிரதேசமொழிவழக்கு அவர்களுக்குப்புரியாதிருந்ததும் சோகம்தான். ஆனால் அவர்களின் சென்னைத் தமிழையும் தஞ்சாவூர் மற்றும் தலித் படைப்புகளின் தமிழையும் நாம் தொடர்ச்சியான வாசிப்பின் மூலம் புரிந்துகொண்டோம். எமக்குக்கிடைத்த வாய்ப்பு அவர்களுக்கு கிட்டாமல்போனதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

மேனாட்டு படைப்பாளிகளின் பல நாவல்களை ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியூடாகவும் படித்தபின்பே அவற்றின் மகிமையை, திறனை எம்மவர்கள் தெரிந்துகொள்கின்றோம். ஆய்வுகள் எழுதும்போது அவர்களை மேற்கோள்காட்டுகின்றோம். ஆனால் தமிழ் நாவல்களை படிப்பதற்கு அவை போதியளவு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாதமையினால் மேநாட்டு வாசகர்களால் மதிப்பிட முடியாதிருக்கிறது. ஒரு படைப்பின் உள்ளடக்கம் சர்வதேசப் பார்வைகொண்டதாக இருக்கும் பட்சத்திலேயே அதுகுறித்த மதிப்பீட்டின் தாக்கம் உயரும். இந்நிலைமையில் இலங்கையில் இதுவரையில் வெளியான தமிழ் நாவல்களில் மிகச்சிறந்த பத்து நாவல்கள் எவை? என்ற கேள்வியை எழுப்பினால் இலக்கியத்திலும் ருசிபேதம் என்ற அடிப்படையில் எத்தனைபேர்  அவற்றை இனம்காட்ட முன்வருவார்கள்.?

ஒருவரைக்கவர்ந்த ஒரு நாவல் மற்றுமொருவரைக்கவரும் என்று எதிர்பார்க்கமுடியாது. ஆனால் வளர்ந்துவரும் புதிய தலைமுறை படைப்பாளிகளுக்கும் வாசகர்களுக்கும் இனம்காட்டமுடியும். அவற்றுள் சிறந்தவற்றை, ஆங்கிலத்திலோ அல்லது சிங்களத்திலோ மொழிபெயர்ப்பதன் ஊடாக பிறமொழி வாசகரிடத்திலும் அவற்றுக்கு அறிமுகத்தை பெற்றுக்கொடுக்க முடியும். இலங்கையில் தனிப்பட்ட விருப்புவெறுப்புக்கு அப்பாற்பட்ட படைப்பாளிகளும் விமர்சகர்களும் இணைந்த யுஉயனஅiஉ தன்மைக்கு ஏற்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு காலத்துக்குக் காலம் இலங்கையில் வெளிவந்த, மற்றும் சமகால நாவல்கள் பற்றிய மதிப்பீடுகளை அவை மேற்கொள்ளும்போது, குறிப்பிட்ட நாவல்கள் எதன் நிமித்தம் சிறந்த நாவலாகக்கருதப்படுகிறது என்ற தெளிவை அல்லது புரிதலை படைப்பாளிக்கு வழங்கும். இலங்கையில் தற்போது கொடகே என்ற சிங்கள அன்பரின் நிறுவனம் பல தமிழ் நாவல்களை சிங்களத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுவருவது வரவேற்கத்தக்க முயற்சி. அதற்கான கடின உழைப்பிற்கு நாம் மரியாதை செலுத்தவேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.