புதிய மாதவிஅம்மா..
உன் கடைசிப்பயணத்தில்
என் கண்ணீர் வாக்குமூலம்.
என்னை மன்னித்துவிடு.
நான் விரும்பினாலும்
நான் விரும்பாவிட்டாலும்
என்மீது சுமத்தப்பட்டிருக்கும்
இந்தியன் என்ற அடையாளத்தினை
கிழித்து எறியும்
எந்த ஆயுதங்களும் இல்லாமல்
நிராயுதப்பாணியாக
களத்தில் நிற்கும்
என்னை..
அம்மா மன்னித்துவிடு.

கசாப்புக்கு கூட
உயர்நீதிமன்றம
உச்ச நீதிமன்றம்
கதவுகள் திறந்திருக்கின்றன
பலகோடியில் பராமரிப்பு செலவு
இத்தனையும் செய்து
இந்திய முகத்தைக்
காப்பாற்றத் தெரிந்த
எங்கள் நீதிதேவதைக்கு
அன்னையே..
சக்கரநாற்காலியில்
நீ சாய்ந்தக்கோலத்தில்
மருத்துவம் நாடி வந்தப்போது மட்டும்
கறுப்புத்துணியால்
கண்களைக் கட்டிய
கங்காணிகள்
எப்போதும் உலாவருகிறார்கள்
எங்கள் தோட்டத்தில்.

தோட்டம் எங்களுடையதாக இருந்தாலும்
நாங்கள் அதில் கூலிகளாக்கப்பட்டதை
அறியாமலேயே
கூட்டணி மேடையில்
கும்மாளம் போடுகிறோம்.
அம்மா.. அவர்களை மட்டுமல்ல
அவர்களையே மாறி மாறி
தலைவர்களாகக் கொண்டாடும்
எங்களையும்
மன்னித்துவிடு.
வீரர்கள் விதைக்கப்பட்ட
மண்ணில்
உன் கடைசிப்பயணம்
புறநானூறை வாழவைத்த
என் அகநானூறே
உன் பாதங்களைத் தொட்டு
வணங்கத்துடிக்கும்
கைகளைத் தொலைத்து நிற்கும்
................ உன் மகள்.......