விரதமெலாம் தானிருந்து
விரும்பியெனை இறைவனிடம்
வரமாகப் பெற்றவரே
வாய்மைநிறை என்னப்பா
விரல்பிடித்து அரிசியிலே
எழுதவைத்த என்னப்பா
உரமாக என்னுள்ளே
உணர்வோடு கலந்துவிட்டார் !

தோள்மீது எனைத்தூக்கி
தான்மகிழ்ந்து நின்றிடுவார்
வாழ்நாளில் வீழாமல்
வளரவெண்ணி பலசெய்தார்
மெய்வருத்தம் பாராமல்
எனையெண்ணி தானுழைத்தார்
கண்ணெனவே காத்துநின்றார்
கருணைநிறை என்னப்பா !

பொட்டுவைத்த  என்முகத்தை
கட்டிக்கட்டி கொஞ்சிடுவார்
பட்டுச்சட்டை  வாங்கிவந்து
பரவசத்தில் மூழ்கிடுவார்
இஷ்டமுடன்  தன்மார்பில்
எனையுறங்க வைத்திடுவார்
அஷ்ட   ஐஸ்வரியமென்று
அனைவர்க்கும் சொல்லிடுவார் !

நானுண்ட   மிச்சமெலாம்
தானெடுத்து சுவைத்திடுவார்
அவர்பாதி  நானென்று
அவருக்குள் எண்ணிடுவார்
உலகிலென்னை உயர்ந்தவனாய்
உருவாக்க  உருவானார்
நிலவுலகில் என்னப்பா
நிகரில்லா தெய்வமன்றோ !

பட்டம்பல   நான்பெற்றேன்
பதவிகளும் வகித்துநின்றேன்
கஷ்டம்பல  பெற்றாலும்
கைகொடுத்தார் எந்தனப்பா
விருதுகளோ எனையணுகி
விரும்பிவந்து சேர்ந்தனவே
விரும்பிநின்ற என்னப்பா
விண்ணுலகு சென்றுவிட்டார் !

ஆளாக்கிவிட்ட   எந்தன்
அன்புநிறை  அப்பாவை
அனுதினமும் எண்ணியெண்ணி
அலமந்து  நிற்கின்றேன்
ஆண்டவனின் திருவுருவாய்
அப்பாவைக் காணுகிறேன்
அவர்நினைப்பை மனமிருத்தி
அவர்வாழ்த்தை வேண்டுகிறேன் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.