பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

சி. ஜெயபாரதன் (கனடா)  கவிதைகள்!

1. கானடா நாடென்னும் போதினிலே

கானடா நாடென்னும் போதினிலே, இன்பக்
கானம்வந் தேகும்நம் காதினிலே
தேனினும் இனிய தேசமடா, இதைத்
தேடிப் புகுந்ததெம் யோகமடா

எங்கெங்கு காணினும் ஏரிகளே, திசை
எப்புறம் நோக்கினும் ஆறுகளே
பொங்குநீர் வீழ்ச்சிகள் மேவுமடா, பனிப்
பூக்களை வானமும் தூவுமடா

ஊசி இலைமரக் காடுகளாம், பனி
ஓங்கும் உயர்மலை மேடுகளாம்
வீசிடும் வெப்ப வீடுகளாம், குளிர்
வெப்பம் மாறிடும் நாடுகளாம்.

ஈரேழு மாநிலப் பனிநாடு, சீராய்
இரட்டை மொழியாளும் தனிநாடு
நீர்வளம், நிலவளம் மிக்கதடா, பயிர்
நீண்டு விளைந்திடத் தக்கதடா

முப்புறம் ஆழ்கடல் சூழுமடா, பனி
மூடும் துருவம் வடக்கிலடா
கப்பல்நீந் திடும்நீர் மார்க்கமடா, தென்
காவலாய் அமெரிக்கத் தேசமடா

மேப்பிள் சிவப்பிலைக் கொடிபறக்கும், அருள்
மேவிப் பிறர்க்குக் கொடையளிக்கும்
ஆப்பிளும் பீச்சுக்கனி பழுக்கும், பல்
ஆயிரம் தக்காளிக் காய் தழைக்கும்

தாமிர வைரத் தளங்களடா, ஒளிர்த்
தங்கமும் வெள்ளிச் சுரங்கமடா
பூமியில் புதிய காண்டமடா, இதைப்
போற்றிக் காத்திட வேண்டுமடா


2. கனடா தேசீய கீதம்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

ஓ கானடா !
எமது இல்லமே ! சொந்த பூமியே !
நின் மாந்தரிடம் எல்லாம்
நிஜ தேசப் பற்றை
நிலை நாட்டுவது நீ !
ஒளி நிறைந்த எமது
உள்ளத் தோடு நீ
உயர்வதைக் காண் கின்றோம் !
நேர்வட திசையில் நீ
நிலைத்திடும் தனி நாடே !
நீண்டு அகண்ட கண்டம்,
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
சீரும் சிறப்பும் பொங்கிட
எமது நாட்டை, இறைவா நீ
சுதந்திர நாடாய் வைத்திரு !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !
ஓ கானடா !
உனை யாம் காத்து நிற்போம் !


Canada National Anthem

O Canada !

Our home and native land !
True patriot love
In all thy sons command.
With glowing hearts
We see thee rise,
The true North
Strong and free !
From far and wide,
O Canada,
We stand on guard
for thee.
God keep our land
Glorious and free !
O Canada,
We stand on guard for thee.
O Canada,
We stand on guard for thee

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

****************

தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை -

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

தோட்டத்துக் காவல்காரன்
நித்திரையிலயர்ந்த கணமொன்றில்
தனித்துவிழும் ஒற்றை இலை
விருட்சத்தின் செய்தியொன்றை
வேருக்கு எடுத்துவரும்

மௌனத்திலும் தனிமையிலும்
மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்
வந்தமர்ந்து காத்திருக்கிறான்
இறப்பைக் கொண்டுவரும்
கடவுளின் கூற்றுவன்

நிலவுருகி நிலத்தில்
விழட்டுமெனச் சபித்து
விருட்சத்தை எரித்துவிடுகிறேன்

மழை நனைத்த
எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும்
இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது
ஈரத்தில் தோய்ந்த
ஏதோவொரு அழைப்பின் குரல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*********************

- முனைவென்றி நா சுரேஷ்குமார் (பரமக்குடி, இராமநாதபுரம் மாவட்டம்) கவிதைகள்!

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

1. மரங்களை வளர்ப்போம்!

யாருமே தவமிராமல்
இயற்கை நமக்களித்த
வரங்கள்!
மரங்கள்!!

உலக உயிர்களையெல்லாம்
காத்துக்கொண்டிருக்கிற
கடவுள் நீட்டிய
கரங்கள்!
மரங்கள்!!

காற்று வரும் திசையை
நம் கண்களுக்கு உணர்த்தும்
கலங்கரை விளக்கம்!
மரங்கள்!!

உழைத்துக் களைத்த
உழவன்
உறங்கத் துடிக்கும்
தாய்மடி!
மரங்கள்!!

நம் சுவாசக்காற்றை
சுத்திகரித்து அனுப்பும்
சுத்திகரிப்பு ஆலைகள்!
மரங்கள்!!

தாயில்லா குழந்தைகட்கும்
சேயில்லா தாய்தந்தையர்க்கும்
குடிசைகள்கூட இல்லா
ஏழைகட்கும்
தாயாய்... சேயாய்...
குடிசைகளாய்...
மரங்கள்!!

அன்பாலும் கருணையாலும்
பிறரிதயந்தொட்ட
ஞானிகளைப் போல்
இதமான தென்றலால்
வான் மேகங்களை
வருடிக்கொடுத்து
மழைபொழிய வைக்கும்
மகாத்மாக்கள்!
மரங்கள்!!

செடியாய் கொடியாய்
இலையாய் பூவாய்
காயாய் கனியாய்
விதையாய் விறகாய்
சருகாய் மருந்தாய்
தன்னையே அர்ப்பணிக்கும்
தியாகச் செம்மல்கள்!
மரங்கள்!!

ஜாதிமத இனமொழி
வேறுபாடின்றி
பாரினில் உயர்ந்த
நம் பாரத தேசத்தினைப்போல்
ஓரறிவு முதல் ஆறறிவு வரை
உயிர்கள் அனைத்திற்கும்
அடைக்கலம் தரும்
ஆலயங்கள்!
மரங்கள்!!

மரங்களைப் பார்த்தாவது
மதங்கொண்ட மனிதர்களின்
மனங்கள் மாறட்டுமே!

மரங்களை வளர்ப்போம்!!

2. தந்தை பெரியார்!

அன்புகாட்டுபவள்
தாய்!
அறிவை வளர்ப்பவர்
தந்தை!
நீ எம் தமிழ்க்குலத்திற்கே
பகுத்து அறியும்
அறிவை உணர்த்தியதால்
உன்னை ‘தந்தை’ என்றழைப்பது
காரணப் பெயராயிற்று!
பூரணப் பெயராயிற்று!
தோரணப் பெயராயிற்று!!

நாத்திகனாய் தானிருந்தும்
ஆத்திகர்களின் மனவுனர்வுகளை
மதித்த பண்பாளன் நீ!

மதுவை ஒழிக்க
மகளிரணி போராட்டம்
நடத்த வைத்தாய்!
இன்றோ...
இயற்கை பானமாய்
இளநீர் இருக்க...
மதுபானமே
எங்கள் நாட்டின்
தேசிய பானமாயிற்று???!!

நீ
கோயிலுக்கு போகவில்லை
எனினும்
கோயில் உன்னைத்தேடி வந்தது
தன்னை நிர்வகிக்கும்படி...!!

எப்படிப்பட்ட விமர்சனங்களையும்
எதார்த்தமாய் ஏற்றுக்கொண்ட
எதார்த்தவாதி நீ!

எவனோ ஒருவன்
தன்னைநோக்கி வீசிய
செருப்புகளை
காலணிகளாய் ஏற்றுக்கொண்ட
புன்னகையாளன்!!

சாதிவேறுபாடுகளின் காரணமாய்
நீதியின் குரல்வளை நெரிக்கப்பட்டபோது
சாதியொழிப்புப் போராட்டம் நடத்தி – நீயோ
வேதியியல் மாற்றம் நிகழ்த்தி வந்தாய்!!

தொண்ணூறு வயதுக்குமேல்
தொண்டாற்றிய
தமிழ்நாட்டு மகாத்மா நீ!!

மரணம் வருவதை
உணர்ந்துங்கூட
விழிப்புணர்வு பயணத்தை
நிறுத்தாமல்
தொடர்ந்து இயங்கிய
மார்க்கண்டேயன் நீ!!

உள்நாடு வெளிநாடு
உலமெலாம் சுற்றிவந்த
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா நீ!!

அன்புகாட்டுபவள்
தாய்!
அறிவை வளர்ப்பவர்
தந்தை!
நீ எம் தமிழ்க்குலத்திற்கே
பகுத்து அறியும்
அறிவை உணர்த்தியதால்
உன்னை ‘தந்தை’ என்றழைப்பது
காரணப் பெயராயிற்று!
பூரணப் பெயராயிற்று!
தோரணப் பெயராயிற்று!!

3. தமிழ்நாடு

என் இந்தியத்தாயின்
காலடியில் தான்
நான் வாழ்கிறேன்!

என் தாயின் கால்களால்
நான் நசுக்கப்படுகிறேன்!

என் தாய்க்கோழி மிதித்து
குஞ்சு நான் சாகிறேன்!

தாகத்திற்கு எனக்கு
தண்ணீர் கூட கிடைக்கவில்லை!

என்மீது வாழ்ந்த மக்கள்
கடல்சூழ்ந்த தீவில்
காக்கை கழுகுகளுக்கு
இரையாகின்றனர்!

இந்தக் கொடுமைகளையெல்லாம்
பார்த்துக் கொண்டே
ஒன்றுமே செய்ய இயலாத
ஒன்பது போலவே
வாழ்கிறேன் நான்!!

என் பெயர்
தமிழ்நாடு!

4. அண்ணன் எழுதிய பாடல்!

அன்பான தங்கச்சிப்பாப்பா
அன்பான தம்பிப்பாப்பா
அண்ணன் எழுதிய பாடல்கேட்க
ஆனந்தமாய் வாருங்கள்!

தாயிடம் அன்பைக் கற்க வேண்டும்
தந்தையிடம் பண்பைக் கற்க வேண்டும்
நீயும் நாளை உயர வேண்டும்
நாட்டிற்குப் பெருமை சேர்க்க வேண்டும்!!

துள்ளித் திரிந்து விளையாட வேண்டும்
தூய்மையா யுடலைப் பேண வேண்டும்
பள்ளிக்குத் தவறாமல் செல்ல வேண்டும்
பாடங்களைக் கவனமாய் படிக்க வேண்டும்!!

உள்ளத்தில் தூய்மை உனக்கு வேண்டும்
உறுதியும் வாய்மையும் உனக்கு வேண்டும்
கள்ள மில்லா நட்பு வேண்டும்
கருணை பொங்கி வழிய வேண்டும்!!

கலாமின் அறிவுரைகள் கேட்க வேண்டும்
காந்தியின் அகிம்சையும் உனக்கு வேண்டும்
நாளைய இந்தியா உயர வேண்டும்
நம்பிக்கை எப்போதும் உனக்கு வேண்டும்

தடைகளை எதிர்த்து சாதிக்க வேண்டும்
தங்கமாய் நீயும் ஜொலிக்க வேண்டும்
படைகள் பலவந்து எதிர்த்த போதும்
பாசம் மட்டும் மிஞ்ச வேண்டும்

எதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்
‘ஏனெதற்கு’ என்று கேட்க வேண்டும்
புதியதோர் உலகு படைக்க வேண்டும்
பழைய வரலாறு உடைக்க வேண்டும்

சாதியின் பெயரும் உனக்கு வேண்டாம்
சமயத்தின் பெயரும் உனக்கு வேண்டாம்
வீதிகளில் பரவும் தீவிர வாதம்
வேதனை தரு முனக்கு வேண்டாமே!! 

5. தாயன்பைத் தேடி ...

என் மூன்றரை வயதில்
என் கன்னத்தில் ஒன்று
என் வலது கன்னத்தில் ஒன்று
என் இடது கன்னத்தில் ஒன்று
என வாஞ்சையோடு
நீ கொடுத்த மூன்று முத்தங்கள்
நினைவுகளாய் இன்னுமும்
என் நியூரான்களில்
கண்ணீரோடு கலந்திருக்கிறது!

நான் சிரித்தபோது
நீ சிரித்தாய்!
நான் அழுதபோது
நீ அழுதாய்!
உன் உணர்வுகளை மறந்து
என் உணர்வுகளை மட்டுமே
உன் உலகமென நினைத்த
என் உலகம் நீ!
நான் வணங்கும் தெய்வம் நீ!!

என் செவிலித்தாயான
தமிழன்னையை
எனக்கு முதல்முதலில்
கற்றுக்கொடுத்த
தமிழாசான்
என் அன்னையே...
நீ தான்!

இலக்கணம் படித்ததில்லை! – உனக்குத்
தலைக்கனமும் பிடித்ததில்லை!! – தமிழ்
இலக்கியம் படித்ததில்லை! – உனக்கென
இலக்குகள் எதுவுமில்லை!!

நீ கற்றுக்கொடுத்த
தமிழ்மொழியால்
உன்மகனான நான் – தமிழ்
இலக்கியத்தில்
மூழ்கிக் கொண்டிருப்பதைப்
பார் அம்மா...!

பல ஆண்டுகளாய்
நம்மிருவரையும் பிரித்துவைத்தே
வேடிக்கை பார்க்கிறது
காலம்!

பிணந்தின்னும் கழுகுகள் போல்
பணம்பண்ணும எந்திரங்களாய்
மாற்றிவிட்டது காலம்!

பசிதூக்கத்தை மறக்கவைத்து
பாசத்தைத் துறக்கவைத்து
உணர்வுகளை இழக்கவைத்து
மனிதநேயத்தை மறக்கவைத்து
மரக்கட்டைகள் போல
மாற்றிவிட்டது காலம்!

மீசை முளைத்தபின்னும் – முகத்தில்
முடி முளைத்தபின்னும்
உருவமது மாறியபின்னும் –என்
பருவமது மாறியபின்னும்
கலப்படமில்லாத தாய்ப்பாலைப்போன்ற
பரிசுத்தமான உன் அன்பைத்தேடும்
மூன்றரை வயதுப் பாலகன் நான்!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ப.மதியழகன் (மன்னார்குடி) கவிதைகள்!

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

1. உசிதம்

மழையை வரவேற்கும் விதமாய்
ஜன்னல்களைத் திறந்து வைத்தேன்
மரங்களில் கூடுகட்டிய
பறவைகளெல்லாம் தொப்பலாக
நனைந்து விட்டிருந்தன
மண்ணில் விழுந்த துளிகளெல்லாம்
றெக்கை முளைத்து
பட்டாம்பூச்சியாய்ப் பறந்தது
மழைவிட்டவுடன்
போய்ப் பார்த்தேன்
வீதியை துப்புரவு செய்திருந்தது
காகிதக் கப்பலில்
லங்கை வரை
பயணம் செய்ய முடிந்தது
பால்யத்தில்
மரங்களை உலுக்கி
மழைத்துளிகளில் நனைந்தது
ஞாபகத்திற்கு வந்தது
சிறுவர்கள் தேங்கிய தண்ணீரில்
குதித்து விளையாடினார்கள்
முன்னெச்சரிக்கையாய்
குடையோடு சென்றவர்கள்
மழையில் நனைவதிலிருந்து
தப்பிப் பிழைத்தார்கள்
கரை கடந்த புயல்காற்றால்
ஊரே வெள்ளக் காடானது
இயந்திர உலகில்
மழை பார்த்தல்
மற்றவருக்கு
வித்யாசமாய்ப் படுகிறது.

வைகறை

பால்காரன் இன்று
நேரத்தோடு வந்துவிட்டான்
நாளிதழில் சூடான செய்திகள்
எதுவுமில்லை
காஃபியை ஒரு மிடறு குடித்தவுடன்
குளிருக்கு இதமாய் இருந்தது
தொலைக்காட்சி சேனல்களில்
ராசிபலன் சொல்லிக் கொண்டிருந்தார்கள்
குழந்தைகளை ஏற்றிச் செல்லும்
பள்ளி வாகனம்
வீட்டைக் கடந்து சென்றது
மூடுபனியைக் கிழித்துக் கொண்டு
சூரியக் கதிர்கள் பூமியில் விழுந்தன
விடியலை வரவேற்று
வானம்பாடி கானம் பாடியது
மலர்கள் இதழ் விரிக்கும் காட்சி
மனதை கொள்ளையடித்தது
பனிச்சாரலில் சேலைத் தலைப்பால்
தலையை மூடிக்கொண்டே
மாக்கோலமிட்டனர் பெண்கள்
புல்லிதழ்களின் மீது படிந்துள்ள
பனித்துளி பகலவன் வரவால்
விடை பெற்றுச் சென்றது
விதியின் மீது பழிபோட்டே
வாழக் கற்றுக் கொண்டார்கள்
மக்கள்.

இவைகளைக் கடந்து

சொற்களுக்கு மத்தியிலுள்ள
இடைவெளில்
ஆழ்ந்த மெளனம் படிகிறது
ஆகாயக் குதிரை
மரணத்தை நோக்கி
என்னை அழைத்துச் செல்கிறது
நாளையைப் பற்றிய கனவில்
இன்று கரைந்தோடுகிறது
தண்ணீர்வரத்து குறைந்த
நதியோரத்தில் பன்றிகள் மேய்கின்றன
பசியெடுக்கவில்லை என்றால்
பிச்சைக்காரன் ஏன்
யாசகம் கேட்கிறான்
புகைவண்டி சக்கரத்தில்
நேற்று அடிபட்டு இறந்தவனின்
குருதி தோய்ந்திருந்தது
காற்றில் உதிர்கிறது
பூக்கள்
அதன் காயாகும் எண்ணம்
ஈடேறவில்லை
மனம் வேட்டையாடும் போது
மனிதனின் நிழல்
நிறம் மாறினால் என்ன
முதுமையைக் காட்டும்
கண்ணாடி முன்பு
எவர் நிற்க ஆசைப்படுவர்
நாடி தளரும் போது
கற்கள் கூட
கடவுளாகத் தோன்றும்.

சம்பவம்

இந்த இரவு
என்னை பயமுறுத்துகிறது
இதைப் போன்றதொரு
இரவில் தான்
முதன் முதலாக தற்கொலை
செய்து கொண்டவளை
நேரில் பார்த்தேன்
இரவில் இரண்டு
கூரிய பற்கள் முளைக்கிறது
நகங்கள் கத்திபோன்று
நீளுகிறது
இரவு கடவுளுக்கானதல்ல
கனவில் ரத்த வெறி பிடித்த
மிருகமாய் மனம் அலைகிறது
இரவில் சாஸ்திரங்கள்
சாதுர்யமாக மறக்கப்படுகின்றன
இரவின் சவலைக்
குழந்தைதான் பகலோ
என எண்ணத் தோன்றுகிறது
சியர்ஸ் சத்தத்தில்
அபலைகளின் கூக்குரல்
அமுக்கப்படுகிறது
இரவுக்கு தாகம் அதிகம்
அதனால போதையில்
மிதக்கிறது
கிளர்ச்சியூட்டும் செய்கைகளில்
மனித இனம்
தன்னைத் தொலைக்கிறது.

விளிம்பில்

விரோதியை
நினைத்துக் கொண்டு
தலையணையை
குத்திக் கொண்டிருந்தேன்
கனவில் பேயைக் கண்டேன்
விழித்த பின்னும்
இதயம் வேகமாக
துடித்துக் கொண்டிருந்தது
மேகங்களில்
ஒவ்வொருவரும் ஒவ்வொரு
உருவத்தைக் காண்கிறார்கள்
நிலையற்றதே
கண்ணுக்குப் புலப்படுகிறது
நிலையானது
மனதுக்கு அப்பால் இருக்கிறது
காலக்ஸிக் குவியலில்
பூமி சிறு துரும்பு தான்
அறைகளிலுள்ள
பொருட்களை அகற்றலாம்
வெற்றிடத்தை என்ன செய்வது
ஆடுறா ராமா என்றான்
குரங்குடன் சேர்ந்து கூட்டமும்
குட்டிக்கரணம் அடித்தது
நான் வாழ வேண்டிய
இடத்திற்கு வந்து சேர்ந்தேன்
அது கல்லறையாக இருக்குமென்று
கனவிலும் நினைக்கவில்லை.

வழக்கம் போல்

இந்த வயதில்
இந்த நிலையில் இருப்பது
இறைவனின் சங்கல்பம் என்று
திருப்தியடைய முடியவில்லை
விதவிதமான மனிதர்கள்
விதவிதமான மாற்றங்கள்
எனக்கான அழைப்பு
வரும் வரை
இந்த வாழ்வை
சகித்துக் கொள்ள வேண்டியது தான்
வாடிப்போன பூவை
சூடிக் கொள்ள முடியுமோ
கண்ணீரால் தான்
காரியம் சாதிக்க முடியும்
இரத்தத்தை விட
அடர்த்தியானதல்லவா கண்ணீர்
பணத்தை இலக்காக கொண்ட
ஓட்டம்
மரணத்தில் போய் முடிகிறது
நடக்கின்ற காரியங்களில்
நம் பங்கு எத்தனை
கடன் கொடுத்தவனிடம்
எந்த சிபாரிசும் செல்லுபடியாகாது
மனிதனாக பிறந்தது மட்டுமே
வாழ்வதற்கு தகுதியாகிவிடுமா.

ப.மதியழகன் (மன்னார்குடி), திருவாரூர் மாவட்டம்.
தமிழ்நாடு,

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


மனதை இழக்கா உறவு .....!

- கலைமகள்ஹிதாயாரிஸ்வி (இலங்கை) -

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

நல்ல இதயம்  தோழி நீ
அன்பானவள் ..
பாசாமானவள்
யாசகம்  கேட்டு வருவோர்
கைகளில் மணம் குளிரும்
பொதிகொடுப்பாய் .!

துயரங்கள்
உன்னை  தடவிக்கொண்டன!
மனம்  பொறுத்து 
பொறுமையைச்  சோதனையில்
அனைத்தையும்  தாங்கிக்கொண்டாய்..!

வறுமை பரந்து போகும்,
இல்லாமை  இலாது  போகும் ...,
மனமது   குளிரைச் செய்யும் ...,
எண்ணிலடங்கா    
நலவுகள்  செய்தாய்
நற்  கருமங்கள்  புரிந்தாய் ...!
காலத்தால்  அழியுமோ   ..?
மனங்களால்  மாறுமோ ..?
 
சொல்வதில்  உண்மை
செயல்களில்  நன்மை
வாழ்வில்  தூய்மை 
நட்பில்  பெருமை
வறுமையில்  கருணை
எல்லாம்  நிறையப்  பெற்றாய்

தோழி,
நீ _
என்  கவிதைகளில்
ஓர்  சுவாசம் ...
நேயத்தின் முன் நிழல் ...
மூச்சிலே வாழும்  சுவை ...
மனதை  இழக்கா உறவு ...
எண்ணத்தில்  வாழும்  இமயம் ...!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். 


பிச்சினிக்காடு இளங்கோ  கவிதைகள்!

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

1.அடைமொழி(07.10.2011)

நல்லவன்தான் நான்
நான் விரும்பும் நல்லவனில்லை
நான்

நான் 
நல்லவனாக இருந்துகொண்டிருக்கிறேன் அதிகமாய்
அவ்வளவுதான்

பிறருக்கெல்லாம்
நான் ஒரு யோக்கியன்

எனக்கும் கூட
நான் யோக்கியனாக இல்லாமல் இல்லை

நான் விரும்பும் அளவுக்கு
யோக்கியனில்லை நான்

மனசோடு பேசும்போதுதான்
புரிகிறது
இடைவெளி இருள்

இடைவெளியைக் குறைக்காமல்
வெளிச்சத்தில் இருந்தாலும்
தொடர்கிறது இருள்

புதைத்தவை அதிகம்
விழுங்கியவை ஏராளம்
மறைத்தவையும் அப்படியே

கழிகிறது காலம்
அடைமொழியோடு

எப்போதும்
எங்களோடு இருப்பது
நீயா? இறைவனா?

எப்போதும்
எங்களுக்குத் தேவை
நீயா? இறைவனா?

எங்களை வாழவைப்பது
நீயா? இறைவனா?

எங்களை இயக்குவதும்
எங்களுக்காக இயங்குவதும்
நீயா? இறைவனா?

உணவுக்கும் தொழிலுக்கும்
உறுதுணை
நீயா ? இறைவனா?

உலகு தொழவேண்டியது
உன்னையா? இறைவனையா?

நீயின்றித் தெய்வம்
உண்டா? தேவையா?

ஐயமில்லை

அய்யன் சொன்னதையே
நானும் சொல்கிறேன்…
“நீதான்….நீதான்
நீர்தான்…நீர்தான்”

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


வற்றாத கடல்…

- சம்பூர் சனா -
 
பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

கண்ணில் வழியும்
ஒரு துளி போதும்…
கண்ணே உனக்காய் கடல் அமைப்பேன்..!
 
காற்றைக் கூட
கையால் தொட்டு
கண்ணே இசையமைப்பேன்…
 
நீ சூரியன் போல் சுட்டாலும்
பீனிக்ஸாய் வந்திடுவேன்..
சுட்டுவிரல் காட்டியுன்னை
அன்பாய் அழைத்திடுவேன்…
 
ஆனால் அன்பே
எனை வார்த்தைகொண்டு
வெட்டி
வேளால் நெஞ்சைத் வீழ்த்தினாயே..!
அதைவிட
நஞ்சைக் கொண்டு
ஊட்டி
வாயால் எனை வாழ்த்தலாமே..!!
 
கடலினை எடுத்து
இறைவன் எனக்கு
கண்களில் வைத்தானா..?
வங்காளம் வற்றும் -
கரிபியன் வற்றும் -
கண்களில் நீர் ஏன் வற்றவில்லை…?!
 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


- ஜுமானா ஜுனைட் ( இலங்கை) கவிதைகள்!    

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

1. காலம் ஒரு கணந்தான்….! 

பொன் என மின்னு
தண்மதி போல்
ஓரழகிய உள்ளம் வை…
தாமதியாமல்
ஓர் இலட்சியம் தனை வகு..
அதையடைவதற்காய் என்றும்
அயராமல் முனை…
 
இன்பம்
உனை மறந்து
தூர ஓடினாலும்
இருவிழிகளும்
“ஆறு” போல்
ஆகினாலும்;
வாழ்வின் நிலையாமை
உணர்…
பூந்துணர் போல்
வெற்றி மலரும்,
பாடுபட்டால்
இருள்கள் புலரும்..
 
ஆயுள்
நீண்டுசெல்வதில்லை
அறிந்து கொள்..
வாழ்வே ஒரு
நீர்க்குமிழி..
அதற்குள் எதற்கு
“காட்டு வழி”..?
முடிந்தால் பிறர்க்கு
காட்டு “வழி” …! 
 
கதிரோன் சுட்டெதென்று
பூமி
அழுததில்லை..
இலைகள்
காய்வதனால்
இன்பமாய் பறத்தல் காண்…
 
நதிகள் நெலிவதனால
அழகு
குறைவதில்லை
தோல்வி
கலப்பதனால்
வாழ்வு வளம் பெறுமே…
 

2. பூமி சொல்கிறது

“ஈசனவன் படைத்து விட்டான்…
இமயங்களைச் சுமத்தி விட்டான்…
என்னிதயம் மண்ணுக்குள்ளே
மண்ணவரோ எனக்கு மேலே…,
மானிடனின் மனசுக்குள்ளே
எதைப் படைத்தாய்
என்னிறைவா..?

எனைச்சுடச்சுட
வைப்பதேனோ…
காரிருளும் ஒளிமயமும்
என் வாழ்க்கை வட்டங்கள்…
நான் சுமக்கின்ற மானிடர்
தருமதிப்புகளும் “வட்டங்கள்”
வாய் திறந்து சொல்லி விட
என் வாயோ இதயத்தில்!
 
எனைச்சுடச்சுட
வைப்பதேனோ…
சுடச்சுட வைப்பதேனோ
எனைச்சூடதனால் சூழ்வதேனோ…
படப்பட நெகிழுகிறேன்
மானிடப் பாதம் பட்டதனால்
பாடுகிறேன்..!”

3. மகா சக்தி
 
விழியோரம் வடிகின்ற
ஒரு நீர்த் துளிதான்
இந்த உலகத்திலேயே
சக்தி மிக்கது!
அணு குண்டை விடவும்
அபூர்வமானது.
 
ஒரு நீர்ச்சுணையருகில்
நின்று
தவங்கிடந்தாலும்
கிடைக்காது… இந்த
அதிசயத்து நீர்!
 
இந்தப் பாரையே
புறட்டுகின்ற
பக்குவம் பெற்றது
கண்ணீர்த் துளிதான்!
 
ஆசைப் பட்டால்
கண்ணீரிலும்
கப்பல் ஓட்டலாம்…
அதற்கும் மிஞ்சினால்
ஒரு துளிக்
கண்ணீரிலேயே
அகிலத்தை அடங்க
வைக்கலாம்…                 
  

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


ஒரு நினைவின் பெரு வலி

- கல்லூரன் -

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

ஆண்டுகளாய் மூடிக்கிடந்த
யன்னல்;
மீண்டும் ஒரு தடவை
மெதுவாய் விழி திறந்த அக் கணத்துள்
ஆறெனப் பொங்கப் பிரவாகித்ததே
அவ்வழகிய நீரோடை
அதில்ää
நம் நினைவுகளும்
பொச்செனப் புலர்ந்து புன்னகைத்தனவே
எங்கிருந்தோ உடைப்பெடுத்துப் பெய்த
அப்பெருமழையில்.

• 
ஒரு பக்கச் சார்பான
உனது இரண்டாவது விசாரணையின்
தீர்ப்பு என் சுவர்களில் ஒட்டப்பட்ட பொழுது
வற்றிப்போன
அவ்வாற்றங்கihயிலிருந்து
எல்லாப் பறவைகளும்
விடைபெற்றுக் கொண்டன
என்னைத் தவிர.
• 
அடித்து
மூடிக்கொண்ட அந்த யன்னலின்
கதவிடுக்கில்
அகப்பட்டுக்கொண்டது
எனது இதயந்தான்
எனினும்
கசிவது உனது குருதிதான்
உனது கண்ணீர்தான்
   
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


சாம்பற்பூச்சிகளென

 -துவாரகன் -

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

சிரி
அணை
சிதை
ஊரைக்கூட்டு
உனதென்று சொல்

இரத்த நாளம்
மூளைத்திசு
எங்கும்
மூட்டைப் பூச்சியாய்
களிம்பாய் ஒட்டு.

துலா மிதித்து
வந்தாரை வாழவைத்து
வளர்ந்த சாதி
வாய் கிழியச் சொல்.

சுட்டுவிரல்
நாற்காலி
உச்சக்குரலோடு சேர்ந்து
நீயும் விழுங்கு
சாம்பற்பூச்சிகளென!
11/2011
    - 
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


சென்ரியு

-மாமதயானை(புதுச்சேரி)

பதிவுகள் டிசம்பர் கவிதைகள் (1)!

1.இசை வாத்தியார்
அழுதாலும் சிரித்தாலும்
சரிகமபதநி

2.பொம்மை கடையில்
நண்பனின் சாயலில்
நிறைய குரங்கு பொம்மைகள்

3.ஆசிரியரின் பாடத்தில் அசோகன்
மாண்வனின் மனதில்
மரம் வெட்டும் தந்தை

4.புத்தகம் முழுக்க
பிறரைப்பற்றி
முடிந்தது சுயசரிதை

5.நம்பிக்கை விதைகளை
எங்கு விதைப்பது
வரண்ட பூமியாய் மனசு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.