- சீ. நவநீத ராம கிருஷ்ணன் -

கோடி ஆண்டுகளாய் சுழலுகின்ற பூமி
கொட்டிக் கிடக்கின்ற பிணிகளோடு இன்று...

நாம் அவளைத் தோண்டினோம் - வளங்கள் தந்தாள்!
அவளைக் காயப்படுத்தினோம் - தாயாய் நின்றாள்!
நெஞ்சைப் பிளந்தோம் - நீராய் வந்தாள்!
நேசத்தை வார்க்கின்ற வேராய் வந்தாள்!

அவளே நமக்கு கருவறை - கல்லறையும் அவளே!
அவள் மடி இருக்கும் வரை - அநாதை என்பதே இல்லை!
ஆயிரம் ஆயிரம் பிள்ளைகள் இருந்தும்
அவள் நிற்பதோ ஆதரவற்றவளாய்...

மரங்கள் அவளது ஊமைச்சேய்கள்...
நதிகள் அவளது இரத்த ஓட்டங்கள் - அவளது நிலை
கண்டு வானம் கூட தன் வற்றிப்போன
கண்களால் எப்போதாவது மழையாய் அழுகிறது!

பொறுமையின் சிகரமாய் அவள் இருந்தாள்!
பூகம்பமாய் குலுங்கி அழக் காரணம் நாமே!
ஏர்பிடித்து உழுதவுடன் ஊர்முழுதும் சோறிட்டு
உள்ளம் நெகிழ்ந்தவள் - இன்று பாளம் பாளமாய்
வெடித்துச் சிதறும் பரிதாபம் நம்மால்தான்...

இனியாவது அவளை வளப்படுத்தாவிட்டாலும் வேண்டாம்
நண்பா! இரணப்படுத்தாமலாவது இருப்போம்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.