கவிதை: மீண்டும் கவிதைக்குத் திரும்பும் முன்…

அவள் வருவதாய் என்னுள் விதைத்திருந்த ஞானம்
தற்போது அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
எனினும்,
என்னுளிருப்பவள் அவளைக் குறித்து பேசாத நாளில்லை.
என்னுடையது அனைத்தும் அவளுக்கே சென்றுவிட்டதென வாதிடுகிறாள்.
எங்களிருவருக்குள் இதுபோல் அடிக்கடிப் பேரிடர்கள் நிகழும்
அது கணிந்து தற்போது ஊடல் பெயரில் உலா வருகிறது.
காமத்தையும் காதலையும் அணுகாமல்
ஊண்ணுன்னும் உடம்பும்
உடலுள்ளிருக்கும் மனதும்
மனிதக் குறிகளற்றத் தன்மையைப் பெற்றிருப்பது போல
உங்களிருவரின் உணர்வுகள் தனித்திருக்கின்றன என்பது
என்னுளிருப்பவளின் தீர்க்கமான விமர்சனம்.

நான் அவளைத் தீண்டாத பொழுதெல்லாம்
எவ்வளவோ எழுதி அவளிடம் கொடுத்திருக்கிறேன்.
இதுவரை அவளிடமிருந்து என்னைப் பற்றியோ,
அவளைப் பற்றி எழுதிய கடிதங்களோ,
கவிதைகளோ குறித்த விமர்சனமோ எதுவும் வரவில்லை.
‘அவளே வரவில்லை
நீ எதிர்பார்த்திருக்கும் விமர்சனமா வரப்போகிறது’ என்கிறாள்
என்னுள்ளிருக்கும் லோலி (எ) லோலிட்டா.
அதனால்,
ஆதலால்,
ஆகையால்,
இனி தனித்தே செயல்படத் தொடங்கிவிட்டன
எமதான எழுத்தோவியங்கள்.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.