கவிதை: என் கண்ணுள் இவ்வுலகம்

- பேராசிரியர் கோபன் மகாதேவா  ( Prof. Kopan Mahadeva ) -கிட்ட வா, நண்பனே, எட்ட நிற்காமலே;
என் உள்ளத்தினுள் புகுந்து நல்லாய்ப் பார் –
சுற்றிப் பார், நண்பா; சும்மா, பணம் வேண்டாம்!

என் கண்ணின் படிக்கட்டு வழியாய் மேலேறிச் 
சென்றிடுவாய், உள்ளே, என் மனத்தின் குகைக்குள்ளே.
தெண்டித்துப் பார்க்கும் நபர்கள் எவருக்கும் 
வெண் வெளிச்சமாகும், என் உள் மனமெல்லாம்.

அதோ தெரியும் அந்தத் தம்பியைப் பார் நண்பா:
முதுகினில் புத்தகப் பொதியும் 
கையினில் துப்பாக்கியும் கொண்டு 
பையுறை உடுத்து, பனை போல் வளர்ந்து 
முகத்தின் புன்முறுவல் முன்னரே மறைந்து,
மேவி மனத்தில் நிற்கும் கடமைதனில், வெற்றி 
மேவாத விரக்தியுடன், மனமுடைந்து, சோர்ந்து,
சாவதைப் பார், அவன், பொருந்தோடி, வீழ்ந்து!

அவன் உடலை உன்னித்துப் பார், இப்போ, நண்பா:
கவசம் போல் கல்லுறுதி. பட்டுடையின் பளபளப்பு...
அந்த அவயவங்கள் அசைந்த அழகென்ன?
தங்கப் புன்-சிரிப்பென்ன? நாடியின் துடிப்பென்ன?
மின்சாரக் கண்ணும், மிளிர் கருமைச் சுருள் முடியும்...
அன்பெல்லோ கொண்டிருந்தோம், அளவின்றி, அவன்மேலே!

 

எட்டிப்பார், நண்பா, எம் அன்பன் உடம்புள்ளே:
கெட்டித் தனமுள்ள முதிர் மூளை! கண்டாயா?
இடிவிழுந்து உறைந்ததைப் போல் இப்போ நீ காணும் 
துடிப்பின்றித் துக்கிக்கும் இமைக்காத அவன் விழியில் 
கிட்டாத வாழ்வினையும் கிடைக்காத வருங்காலம் 
இரண்டையும் எண்ணி எண்ணி ஏங்கிய நிலை நிற்கும் 
எதிர்பாரா முடிவின் ஏக்கத்தில் ஒளி சிதறி 
எதிர்கொண்ட பெரு நட்ட ஆச்சரியமா, அதிலே?
துண்டிக்கப்பட்ட எம் அன்பனின் தொடைகளில், எம் 
கண் காணும் சித்திரங்கள்: சூலம், பிறை, சிலுவை.

அங்கே பார், நண்பா, நடப்பதை, உந்திப் பார்!
துகில் வெள்ளை நைலோனின் திரைப் பட்டு மஞ்சத்தில்,
முகிற் கூட்டம் ஒன்றின் மேல், முறுக்குடனே சாய்ந்து செல்லும் 
தன்மானம் காத்த எம் தம்பியைப் பவனியில் பார்!

அழகிய தேவ மாதர்கள் கூடி,
பலவகை வாத்தியம் பாங்குடன் முழங்க 
அன்னவர் ஆவியை, ஆபத்துகள் இன்றி,
விண்ணின் வழியில் அழைத்துச் செல்கின்றார்.

பன்றிகளின் தலை படைத்த பாதகர் குழு ஒன்று
அன்னார்க்கு அஞ்சி, அம்மணமாய், நள்ளிரவில்,

பின் நோக்கி ஓடுகிறார், பீதியுடன், தலை தெறிக்க!

எம் அன்புத் தம்பியரின் உயிரை எடுத்தவர்கள் 
கும்மிருட்டில், கள்ளமாய், ஓடி ஒளித்த பின்னும்
தம் பிழைகள் தாமுணர்ந்து திருந்துவரா, சொல், தோழா?


THE WORLD IN MY EYES

Come near, my friend, get closer to me.
Climb into my mind and study it for free.
Step into my eyes and enter my mind.
Anyone who tries will find what’s behind.

See that young man – tall, garbed in a sack,
With gun in his hand and books on his back?
No smile on his face, but duty, instead.
See how, with grimace, he falls down, dead! 

Now look at his limbs – strong, but silk-smooth.
How we all loved him, and the way they moved!
He was courteous and kind – with black tress, bright eyes.
Peep into his mind: how wise, how wise!
As if in a daze, his eyes are still, sad;
Maybe they crave for his life never had.
They seem surprised, and signify much loss.
See the signs on his thighs: trident, crescent, cross!

On white nylon-like veils, spread on soft clouds, 
See how he sails – heroic and proud!
Angels of charm and harpists up high
Save his soul from harm and take it up-sky.

A pig-headed clan runs naked, at night –
Away from our man, fleeing in fright.
Having robbed his dear life, they’re running in stealth.
Do they repent the strife; for causing his death?

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.