உழைப்பாளர் தினக்கவிதை

உணவுக்குப் பின்னாலே ஒழிந்திருக்கும் உழைப்பு
உறைவிடத்தின் ஆக்கமதில் நிறைந்திருக்கும் உழைப்பு
அனைவருமே உடுத்திநிற்கும் ஆடைகளின் உழைப்பு
அகிலத்தில் நினைக்கும் நாளதுவே நல்சிறப்பு !

உழைப்பில்லா நிலையினிலே உலகமே இயங்கா
உழைப்பவர்கள் உலகமதின் உன்னதமே ஆவார்
களைப்பின்றி உழைக்குமவர் கடின உழைப்பாலே
கலகலப்பாய் யாவருமே வாழுகிறார் நாளும் !

உழைக்கின்ற வர்க்கமே உலகத்தில் பெரிது
உழைக்கின்றார் கஷ்டமதை உணர்ந்துவிடல் வேண்டும்
உழைப்பதற்குத் தகுந்தபடி ஊதியத்தை கொடுக்க
உலக   முதலாளிகள் உளம்விரும்ப வேண்டும் !

முதலைவைத்து ஒருநாளும் உழைப்புவர மாட்டா
முதலோடு தொழிலாளி இணைப்பு வரவேண்டும்
தொழிலாளி உழைப்பினிலே முதலிணையும் போது
உற்பத்தி புறப்பட்டு உலகெங்கும் பரவும் !

மாடிமனை கோடிபணம் வாகனங்கள் எல்லாம்
வாழ்க்கையிலே வருவதற்கு வருந்துகிறார் பலபேர்
கோடிபணம் கிடைத்தவுடன் கோபுரத்தில் ஏறி
குருதிசிந்தி உழைப்பாரைக் கொன்றுவிடல் முறையோ !

சேற்றிலே காலைவைத்துத் தினமுமே உழைக்காவிட்டால்
சோற்றிலே கையைவைத்துச் சுவைத்திடல் முடியுமன்றோ
ஆற்றையே மறித்துக்கட்டும் ஆற்றலை கொண்டுநிற்பார்
அகிலத்தில் உழைப்பதாலே அனைவரும் வாழுகின்றோம் !

காலையில் எழுந்துநாளும் மாலையில் படுக்கும்போது
கடினமாய் உழைத்துநிற்பார் காவலாய் நிற்கின்றார்கள்
கஷ்டத்தைப் பார்த்திடாமல் இஷ்டமாய் உழைப்பதாலே
களிப்புடன் நாளும்நாங்கள் களிக்கிறோம் வசதியாக !

உழைக்கின்றார் மனம்மகிழக் கொடுக்க வேண்டும்
உழைப்பதனை உயர்வாக மதித்தல் வேண்டும்
உழைக்கின்றார் உள்ளத்தை உடைக்கா நிற்க
உழைக்கின்றார் தினமதனில் உறுதி கொள்வோம் !

நிலத்தில் வியர்வைசிந்தவே
நிதமுழைக்கும் யாவரும்
உளத்திலுவகை பெற்றிட
உரத்தகுரலைஎழுப்புவோம்
பணத்தையெண்ணி பெட்டியில்
பதுக்கிவைக்கும் போக்கினை
நிலத்தைவிட்டு ஓட்டியே
நித்தமுழைப்பைப் போற்றுவோம் !

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.