1. வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -செம்பவள வாய்திறந்து
சிரித்துநிற்கும் உன்முகத்தை
தினமுமே பார்த்திருந்தால்
சிந்தனையே தெளிந்துவிடும்
வந்தநோவும் ஓடிவிடும்
வலியனைத்தும் மறைந்துவிடும்
எந்திருவே உனையணைத்து
என்னாளும் இன்புறுவேன் !

முழுநிலவு வடிவான
அழகுநிறை உன்முகத்தை
முத்தமிட்டு முத்தமிட்டு
மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே
கொழுகொழுத்த கையாலே
குறும்புநீ செய்கைகையிலே
ஒழுகிவரும் இன்பமதை
உள்ளமெலாம்  நிரப்பிடுவேன் !

பொட்டுவைத்துத் தலைசீவி
புதுச்சட்டை போட்டுனக்கு
மெத்தையென என்மடியில்
விரல்சூப்ப விட்டிருப்பேன்
சூப்பிவிட்டு துப்புகின்ற
எச்சிலெனை நனைக்கையிலே
பார்க்கின்ற அத்தனையும்
பரவசமாய் தெரியுமப்போ !

மழலை  மொழிபேசி
மயக்குவாய் எனைநீயும்
மாமருந்தாய் வந்தமைந்த
மாமணியே நீயெனக்கு
மாதவத்தால் உனப்பெற்றேன்
வாழ்வெல்லாம் மகிழுகின்றேன்
வையகத்தில் நான்வாழ
வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !


3. விதைத்ததை நாம் காத்துநிற்போம் !

- எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா        -ஆங்கிலத்தில் கற்றாலும்
ஆன்மீகம் அகம்நிறைத்தார்
அறிவுடனே ஆன்மீகம்
அவருரைத்து நின்றாரே
தன்குருவை சோதித்து
தன்னுணர்வை அவர்வளர்த்தார்
தன்குருவின் ஆசியினால்
தரணியெங்கும் ஒளியானார் !

ஈரமதைக் கொண்டிருந்தும்
வீரமுடன் செயற்பட்டார்
ஊரெல்லாம் அவர்வார்த்தை
உத்வேகம் ஊட்டியதே
பாரினிலே புரட்சியுடன்
பலகருத்தை அவர்பகர்ந்தார்
பார்வையெலாம் பலநோக்கில்
பாய்ந்துமே சென்றதுவே !

சமயத்தின் தத்துவத்தை
தாமுணர்ந்தே போதித்தார்
சரியான பாதைசெல்ல
தன்கருத்தை அவர்தந்தார்
மனிதமன நிலையாய்ந்து
மருந்தாகப் பலசொன்னார்
நிலையான கருத்தெனவே
நிறுத்திவிட்டு அவர்சென்றார் !

விளக்கமில்லா நின்றவர்க்கு
விவேகமாய் விரித்துரைத்தார்
வேதனையில் இருப்பாரை
வெளியேற்றல் கடமையென்றார்
போதனையைச் சொன்னாலும்
பொறுப்புடனே அவர்செய்தார்
சாதனையின் சிகரமென
சகலருமே போற்றுகின்றார் !

காவிகட்டி வந்தபலர்
கண்மூடிப் பலசொன்னார்
மூடிநிற்கும் பலவற்றை
மூடியே வைத்துநின்றார்
வாடிநிற்கும் மக்கள்தமை
மனங்களிலே கொள்ளாமல்
மூடிநிற்கும் தத்வத்தை
முணுமுணுத்தே நின்றார்கள்  !

காவிகட்டி நின்றாலும்
கண்மூடிக் கொள்கைகளை
களைந்திடுங்கள் எனச்சொன்னார்
களத்தில்நின்று விவேகாநந்தர்
கண்மூடி நில்லாமல்
கண்திறக்க வைத்தவர்தான்
காலமெல்லாம் நாம்நினைக்கும்
கனிவுநிறை விவேகாநந்தர் !

வாய்மையினை யாவருமே
வாழ்வியலாய் ஆக்கிடுங்கள்
வைரமுடை உடலுடனே
வரநீங்கள் முயன்றிடுங்கள்
பொறாமைதனைப் புறந்தள்ளி
புதுத்தெம்பு பெற்றிடுங்கள்
புதுவாழ்வு உங்களுக்குப்
பொலிவாக அமையுமென்றார் !

தேசமதை நேசித்த
திறலான துறவியவர்
பாதகங்கள் தனையெதிர்த்த
பாரதத்தின் துறவியவர்
வீரமுள்ள உணர்வுதனை
ஊட்டிநின்ற துறவியவர்
விவேகநிறை விவேகாநந்தர்
விதைத்ததைநாம் காத்துநிற்போம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.