நேதாஜிதாசன் கவிதைகள் 5!1) நேற்றை வரம் கேட்க சொன்னதால்

நேற்றை கொஞ்சம் நில் என சொல்லிவிட்டு கோயிலுக்குள் போனேன்.
கற்சிலைகள் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது.
உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டது.
நான் வெளியே போய் நேற்றை கோயிலுக்குள் அழைத்து சென்று ஏதாவது கேள் எனக்கு பதிலாக எனக்கு கூச்சமாக இருக்கிறது என்றேன்.
எனக்கு வானமும் நிலமும் நீரும் நெருப்பும் காற்றும் மரமும் வேண்டும் என்று கேட்டது.
கற்சிலை திருதிருவென முழித்து ஆளை விடு என அமைதியானது.
அடுத்த நாள் நிலநடுக்கம்
கோயில் தரைமட்டமாகியிருந்தது நேற்றுடன்.

2) தற்கொலையும் கேள்வியும்

அழுதுகொண்டே தற்கொலை வந்து நிற்கிறது.
கடல் அழுகிறது
கண்ணீர் அலையாக அலைகிறது.
கடல் அழுகிறது
கண்ணீர் அலையாக அலைகிறது
தற்கொலை இறந்தபின்பும்
யாருக்காக அழுகிறது  இந்த கடல் ?
யாருக்காக அலைகிறது இந்த அலை ?

3) டையரி குறிப்புகள்

வலியின் மொழியினால் கடிதம் எழுதி கனவின் சிறுகதையில் சேர்த்து கற்பனையின் மொழியுடன் கலந்து பார்த்த போது என்னை நானே மொழிபெயர்த்து கொண்டிருந்தேன் பேனாத்தலை காகித உடலுடன் பிணத்தின் டையரிகளின் மேல் .

4) சங்கிலித்தொடர்கள்

ஒரு தேனீ கொட்ட மறுதேனீ கொட்ட ஒரு தேனீ கொட்ட மறுதேனீ கொட்ட
ஒரு தேனீ கொட்ட மறுதேனீ கொட்ட
ஒரு தேனீ கொட்ட மறுதேனீ கொட்ட
ஒரு தேனீ கொட்ட மறுதேனீ கொட்ட
ஒரு தேனீ மறுதேனீயிடம் கேட்டது
"ஏன் கொட்டுகிறீர்கள் ? "
மறுதேனீ "யாருக்கு தெரியும்" என மறுதேனீயிடம் "கொட்டு கொட்டு" என பேசிக்கொண்டே கொட்டியது.
இன்னொரு பக்கம் காரணமே தெரியாமல் மனிதர்கள் தீப்பந்தத்தை எடுத்துக்கொண்டு போயினர் நாம் கொளுத்தவேண்டியது குடிசை என்பதை மறந்து.


5) என் பக்கத்து வீட்டுக்காரரை பற்றி

செயமோகன் அவர் பெயர்
அவர் அழகாய் விருதை புறக்கணிப்பார்
பார்க்கவே அழகாக இருக்கும்
நாய்கள் நாவலை எழுதியவரை
இலக்கியவாதி இல்லை என்பார்
கேட்கவே அழகாக இருக்கும்
போர்ஹேவை விமர்சிப்பார்
நினைக்கவே அழகாக இருக்கும்
காவி நிறம் தெளிக்க எழுதுவார் பாருங்களேன் படிக்கவே அழகாக இருக்கும்
இது அவரின் கண்ணில்பட்டால் கட்டுரை எழுதுவார் பாருங்களேன் நினைக்கவே வேடிக்கையாக இருக்கும்
அந்த செயமோகன் என் பக்கத்து வீட்டில் இருக்கிறார்  இப்போது
அவர் எழுதுகோல் தூங்குவதே இல்லை
தூங்கவும் விடுவதில்லை
அவரால் வாசித்துகொண்டே இருக்கிறேன் கும்பகர்ணனாக.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.