-  வே.ம.அருச்சுணன் – மலேசியா பூத்துக்குலுங்கும்
புத்தாண்டே வருகவே
புதுமைகள் சூழந்தே
புண்ணிய பூமியில்
புனித வாழ்வைத் தருகவே........!

2014  ஆம் ஆண்டு
மனங்கள் குலுக்கின
கண்கள் குளமாகி
இதயங்கள் சிதறின
அந்தக் கணங்கள்
மறக்க முடியுமா?

மாயமாகிப்போன விமானம்
பீரங்கித் தாக்குதல்
வானில் சிதறிய செல்வங்கள்
மீண்டும் வருவார்களா நம்மோடு
மகிழ்வோடு உறவாடுவார்களா?
அந்த மரணத்துளிகள்
கனவிலும் வேண்டாம்
ஆத்மாக்கள் அமைதி பெறட்டும்.........!

நம்பிக்கை ஒளிதரும்
2015 ஆம் ஆண்டே
நலம் சேர்க்க வாரீர்
நாடும் மக்களும் வளம் பெற
மலர் தூவி வாழ்த்துக........!

தமிழர்கள் இங்கே
ஒற்றுமையில் தலைதூக்கி
சோதனைகளைப் பொடியாக்கி
தன்மானச் சிங்கங்களாய் வீர்கொண்டு
தமிழ் காக்கும் மொழியினராய்
சமயம் வாழ்விக்கும் நல்லோராய்
பொருளியலில் காலூண்றி
வாழ்தல் வேண்டும்..........!

நாட்டுச் சுதந்திரத்தில்
தமிழர் பங்கு பெரிதென்போம்
நாட்டு வளர்ச்சியில் முதுகெழும்பாய்
பல்லாண்டு துடிப்பாய் இயங்கிவிட்டோம்
நாடு வளர்ந்துவிட்டது
ஏணியாய் இன்னும் நாம் யாசகம்
புரிதல் அநீதியன்றோ..........?

அரசியலில் சுழியம் என்போம்
நாளுக்கொன்றும் ஆளுக்கொன்றும்
பேசியே கொல்கின்றார்
நம்பியவர் நட்டாற்றில்
பத்துவிரல்கள் மூலதனம்
சுயமுன்னேற்றம் வேண்டி
உழைப்போம் உயர்வோம்..........!

மாற்றம் ஒன்றே மாறாதது
வாழ்வின் நீதியை ஏற்போம்
வாழ்வை மாற்றுவோம்
சந்ததி நிலைப்பதற்கு
சிந்தனை செய்வோம்
இலக்கு வகுத்தல் நீதியென்போம்
கூடிவாழ்தல் கோடி நன்மை என்போம்
சாதனைப் படைக்கப் புத்தாண்டில்
உறுதி கொள்வோம்..........!

புத்தாண்டே புனித வாழ்வைத் தந்திடு
இனம் காக்க பூரிப்பாய் வாழ்த்திடு

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.