செப்டம்பர் கவிதைகள் -1

நான்

கவிஞர் தங்கம்மூர்த்தி

நான்
இரவுகளில்
அழுததுதான்
அதிகம்.

என்
இன்பமெல்லாம்
அரைநொடியில்
முடியும்.

என்
கனவுகளில்
பிசாசுகளே
திரியும்.

நான்
கண்விழித்தால்
நரகவாசல்
தெரியும்.

நான்
புன்னகைத்தால்
பொய்ச்சாயம்
வழியும்.

என்
பூங்காவில்
பாம்புகளே
நெளியும்.

என்
அருகில்
வரும்
கழுதைகளும்
முட்டும்.

என்
அருவிகளோ
வெந்நீரைக்
கொட்டும்.

நான்
சாத்தான்கள்
விளையாடும்
மைதானம்.

என்
சாதனையின்
கதை முழுதும்
அவமானம்.

நான்
சத்தமிடும்
சருகுகளின்
அடையாளம்.

என்
சங்கீதம்
முட்புதரில்
நடமாடும்.

நான்
வேதனையின்
உளி வடித்த
சிற்பம்.

நான்
வெறுந்தரையில்
கிடக்கின்ற
தெப்பம்.

நான்
நூலிருந்தும்
திசையறியாப்
பட்டம்.

வெறும்
நுரைகளில்
அலங்கரித்த
சிற்பம்.

நான்
காலமென்னும்
பெருங்கடலில்
ஓரிறகு.

சுழற்
காற்றடித்துத்
தவித்தாலும்
தனியழகு.

சுடும்
பாலைவன
நெடுமணலில்
வசிப்பேன்.

கவி
படைப்பதனால்
வாழ்க்கையை நான்
ஜெயிப்பேன்.


இரவில்...

  -செண்பக ஜெகதீசன்...

செப்டம்பர் கவிதைகள் -1

இரவைக் காவல்வைத்து
இவன் தூங்கச்செல்கிறான்..

இருக்கும் நினைவெல்லாம்
இருப்புப் பணம்,
பெண், மண், பாசம் எனப்
பகலின் பரிமாணங்களில்
பலவாய்..

காவலிருக்கும் இரவின் பொழுதும்
களவாடப்பட்டுவிடுகிறது,
கண்விழித்துப் பகல்கனவில்
படுத்திருக்கும் இவனால்..

இனி காவல்
இவனுக்குத் தேவையில்லை..

கழன்றுகொள்கிறது இரவு-
இருளை மட்டும்
இவனிடம் விட்டுவிட்டு...!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


முனைவென்றி நா. சுரேஷ்குமார் கவிதைகள்!

துளிப்பாக்கள்

செப்டம்பர் கவிதைகள் -1

துணிக்கடையில் துணிப்பஞ்சம்
விளம்பரங்களில் நடிகை
அரைநிர்வாணமாய்

நட்சத்திரப் பெண்களில்
நிலா!
என்னவள்!!

நாத்திகன்கூட
வழிபடும் கடவுள்
அம்மா

தூக்கம்

உழைத்த களைப்பில் உண்டான மயக்கம்!
மூளையின் இயக்கத்தில் மின்சாரத் தடங்கல்!!
கண்களில் பிறந்த கனவுதொழிற் சாலை!
தன்னிலை மறந்து தள்ளாடும் போதை!!
மரணம் பெற்ற மகவுகளில் ஒன்று!
நரக வாழ்க்கையின் நிரந்தரமில்லா ஒய்வு!!
காதலர் வரவேற்கும் கனவு மாநாடு!
மோகம் அரங்கேறும் மோகனப் பூமேடு!!
குருட்டுப் பயணத்தில் குறட்டை ஒலியே!

இருட்டில் மிரட்டும் மௌன மொழியே!!
மரணத்தின் ஒத்திகையாய் மயக்குமிந்த உறக்கம்!
குரங்கான மனதினையே கட்டிவைக்கும் கடிவாளம்!!

பிறந்த குழந்தையின் பிஞ்சு மனம்போல!
உறங்கிச் சாய்வாய் உறக்கத்தில் பிணம்போலே!!

இருள் சூழ்ந்து இமைதழுவச் சொல்கையிலே
காரிகை வேண்டுமடா கண்ணுறங்கச் செல்கையிலே!!

கவிதை முடியுமுன்னே கவிக்கிரண்டு சந்தேகம்!
புவிதனில் உள்ளோரே பதில்சொல் வீரே!
உடலென்னும் கூட்டுக்குள்ளே உயிரெங்கு உள்ளதடா?
உடலா உயிரா உறக்கத்தில் ஒய்வுபெறுவது?
கவிதை முடியும்போது கவிக்கிரண்டு சந்தேகம்!
புவிதனில் உள்ளோரே பதில்சொல் வீரே!


விவசாயி

வானம்பார்த்த பூமி
விதைத்தால் விறகாகும்
கருவேல மரங்கள்

கண்ணீர்விட்டு வளர்த்தோம்
இந்தவருடம் பூப்பெய்தியது
எங்கவீட்டு புளியமரம்

கண்ணைப் போல்
தென்னை வளர்த்தோம்
இளநீர் தந்தது

குழிவிழுந்த வயக்காடு
தாகம்தீர்த்துச் சிரித்தது
மழையால்

உழைத்துக் களைத்த உழவன்
உறங்கத் துடிக்கும் தாய்மடி
மரங்கள்

முத்தங்கள் பலநூறு தா!

சேலைகட்டி வந்தமயில் சோலையிலே கூவும்குயில்
காலையிலே என்முன்னே நடந்தாள்! – நானும்
மாலையிடும் ஆசைகொண்டு வேளைவரும் நாளையெண்ணி
சாலையிலே அவள்பின்னே நடந்தேன்!!

கார்மேகக் கூந்தலோடு வார்த்தமுகப் பொலிவோடு
சேர்த்தெடுத்த அகிலாக மங்கை! – அவளைப்
பார்த்தவுடன் என்னுள்ளே வார்த்தைவழிக் கவிதையாக
பூத்துவிட்டாள் எழிலான மங்கை!!

கச்சணிந்த முன்னழகில் மச்சமுள்ள இடையழகில்
மிச்சமுள்ள பெண்ணழகில் மயங்கி! – நானும்
கச்சணிந்த முன்னழகை மச்சமுள்ள இடையழகை
அச்சமுடன் பின்தொடர்ந்தேன் தயங்கி!!

கொஞ்சதூரம் போனபின்னே வஞ்சியவள் திரும்பிநிற்க
அஞ்சிநின்று வேறுதிசை பார்த்தேன்! – அவள்
நெஞ்சமதை நானறிய வஞ்சியவள் பெயரறிய
கொஞ்சதூரம் நடந்தபடி வேர்த்தேன்!!

தத்தையவள் எனைநோக்கிச் சித்திரமாய்த் திரும்பிவந்து
பத்திரமாய் ஒருசேதி உரைத்தாள்! – ‘நானுன்
அத்தையவள் பெற்றமகள் பைத்தியமா நீ?’என்று
புத்திமதி சொல்லிவிட்டு முறைத்தாள்!!

உண்மையது புரிந்தவுடன் மென்மையான பெண்மையிடம்
உண்மையான காதலென்று சொன்னேன்! – அவளும்
‘நானுமுனைக் காதலித்தேன் நாணமுற்ற நாள்தொடங்கி’
பெண்மையவள் மென்மையாகச் சொன்னாள்!!

முத்துரத வீதியிலே தத்திவிளை யாடுங்கிளி
சித்திரமாய் என்னருகே வந்தாள்! –அவள்
முத்துதிரும் இரத்தினமாய் மோகனமாய்ப் பத்திரமாய்
முத்தங்கள் பலநூறு தந்தாள்!!

‘குழவியாகப் பார்த்தவுன்னை தலைவியாகப் பார்த்தவுடன்
குழம்பியது என்னறிவு’ என்றேன்! – என்
தலைவியான அவளோடு தலைகோதி சாய்ந்தபடி
மழலையாக வீடுநோக்கிச் சென்றேன்!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.