காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தாமாகவே விலகிக்கொள்ள வேண்டும். இல்லையேல் பகிரங்கப்படுத்தப்படும். FFSHKFDR – Vavuniya District தலைவி அறிவுறுத்தல்! சிறீலங்கா அரசின் மிகவும் மோசமான ‘ஆள்கடத்தல்கள், தடுத்து வைத்தல்’ சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ‘பரிகார நீதியும் - நியாயமான இழப்பீடுகளும்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, விசுவாசமாகவும் - அர்ப்பணிப்பாகவும் பணி செய்யும் செயல்பாட்டாளர்கள் யார்? காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை வெளிநாட்டு தூதுவராலயங்களிடமிருந்து நிதியை பெற்றுக்கொள்வதற்கு ஒரு வழிமுறையாக பயன்படுத்தி வரும் அமைப்புகள் எவை? என்பதை கடந்த ஏழு வருட காலத்தில் தம்மால் அறிந்தும் - தெளிந்தும் கொள்ள முடிந்துள்ளதாக தெரிவித்துள்ள கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Vavuniya District) வவுனியா மாவட்ட சங்கத்தின் தலைவர் திருமதி கா.ஜெயவனிதா,

தாங்கள் பணம் சம்பாதிப்பதற்கும் - தமக்கான தொழில்துறையாகவும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை பயன்படுத்தி, இதற்காகவே காலத்தையும் நீட்டிப்பு செய்துகொண்டு திரியும் ‘இடைத்தரகர்’ அமைப்புகள், உறவுகளை தேடியலையும் தமது பயணத்தில் குறுக்கீடு செய்யாமல் தாமாகவே விலகி ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்றும், இனியும் இவ்வாறான அநாகரிக நடத்தைகள் தொடருமாகவிருந்தால் அந்த அமைப்புகள் - அந்த அமைப்புகளின் பணியாளர்கள் தொடர்பில் பெயர் குறிப்பிட்டு பகிரங்கப்படுத்த வேண்டிய துர்பாக்கிய நிலைமைகள் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தை விடவும் ‘இடைத்தரகர்’ அமைப்புகளே பாரிய தடைக்கற்கள்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடியலையும் குடும்பங்களுக்கு ‘அது செய்யப்போகின்றோம் - இது செய்யப்போகின்றோம்’ என்று கூறி, வெளிநாட்டு என்.ஜி.ஓக்களிடமிருந்து பெருந்தொகை நிதியை பெற்று, அதையே தமக்கான ஒரு தொழில்துறையாகவும் - வேலைத்திட்டமாகவும் எடுத்துக்கொண்டு, இந்த அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அங்கும் இங்கும் அலைக்கழித்துக் கொண்டிருப்பதனால், தம்மில் பல குடும்பங்கள் சோர்வடைந்து - மனச்சலிப்படைந்து, காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை தேடிக்கண்டறியும் சங்கங்களின் தொடர் நடவடிக்கைகளில் ஈடுபாடில்லாமல் ஒதுங்கியிருப்பதாகவும், நீதியை கோரும் அழுத்த மற்றும் கவனவீர்ப்பு போராட்டங்களில் பங்குபற்றுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைவடைந்து வருவதாகவும் ஜெயவனிதா கவலை தெரிவித்தார்.

பெருந்துயர் தோய்ந்துள்ள பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் வாழ்க்கையை வியாபாரமாக்கி பணம் சம்பாதிக்கத் துடிக்கும் ‘இடைத்தரகர்’ அமைப்புகளை தாங்கள் நன்கு இனங்கண்டு வகைப்படுத்தியுள்ளதாகவும், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களின் சங்கங்களும் ஒன்றுகூடி ‘தேசிய அளவில் ஒரு கூட்டு இயக்கமாக’ செயல்பட்டு வரும் நிலையிலும், (Forum for Families of Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Tamil Homeland) தம்மை கூட்டு இயக்கமாக தொழில்பட விடாமல் இந்த ‘இடைத்தரகர்’ அமைப்புகள் தமக்கான நிதி வரத்துகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக சங்கத்தின் உறுப்பினர்களை சிறு சிறு குழுக்களாக உடைத்து கையாள்வதாகவும், தமது பிரச்சினைக்கு தாங்களே சுயமாக தீர்மானங்களை எடுத்து இலக்கு நோக்கி நகருவதற்கு, அரசாங்கத்தை விடவும் பெரும் தடைக்கல்லாக இந்த ‘இடைத்தரகர்’ அமைப்புகள் இருப்பதால், இவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து மேலெழுந்து வருவதற்கே தமது வாழ்க்கை காலத்தின் பெரும் பகுதி கழிந்து விடுவதாகவும் தெரிவித்தார்.

கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட, உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் வவுனியா மாவட்ட சங்கத்தின் சிறப்பு கலந்தாய்வுக்கூட்டம், தலைவர் திருமதி கா.ஜெயவனிதா, செயலாளர் திருமதி பே.பாலேஸ்வரி ஆகியோர் தலைமையில் 16.07.2016 சனிக்கிழமை அன்று வவுனியாவில் இடம்பெற்றது. கலந்தாலோசனை செயலணியானது மாவட்டந்தோறும் வருகை தரும்போது, அதற்கு சமுகமளிக்கத்தக்கவாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களை தயார்ப்படுத்தி - வழிப்படுத்தும் நோக்கத்தில் கலந்தாய்வு இடம்பெற்றது.

சங்கத்தின் அழைப்பின் பிரகாரம் குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா, தலைமைக்குழு உறுப்பினர் சு.வரதகுமார் ஆகியோரால், உண்மை, நீதி ஆகியவற்றைக் கண்டடைந்து பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தி, இழப்பீடுகளை பெற்றுக்கொள்ளல் தொடர்பில் அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்புகள், செயல்முறைகள், நடவடிக்கைகள் பற்றி, FFSHKFDR - Tamil Homeland இன் ஒத்திசைவோடு, வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவால் கலந்தாலோசனை செயலணியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் - முன்மொழிவுகள் தொடர்பில் மக்களுக்கு பகிரங்கப்படுத்தி தெளிவுபடுத்தப்பட்டதோடு, கருத்துகளும் பெறப்பட்டன.

கூடவே, காணாமல் போனோர் தொடர்பான விடையங்களை கையாள்வதற்கான அலுவலகம் (Office for Missing Persons) அதாவது OMP நிறுவனத்தை அணுகுவது தொடர்பில் உள்ள அனுகூலங்கள் - பிரதிகூலங்கள், இழப்பீடுகளுக்கான அலுவலகத்திடம் எதை கேட்க வேண்டும்? காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்கள் மீளநிகழாமையை எப்படி உறுதிப்படுத்தலாம்?, இன்றைய உலக ஒழுங்கில் உச்சபட்ச நீதியை எப்படி பெற்றுக்கொள்ளலாம்? சாட்சியங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் உண்டா? என்பவை தொடர்பிலும், நிலைமாறு காலகட்ட நீதியின் பெயரால் நாட்டுக்கு உள்ளே வரவழைக்கப்படும் அமெரிக்க டொலர்ஸ்கள், அந்த நிதியை பெற்று பாதிக்கப்பட்டுள்ள மக்களை ‘மூளைச்சலவை’ செய்துவரும் அமைப்புகளின் போக்குகள் தொடர்பிலும், மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டன.

FFSHKFDR - Tamil Homeland இன் தலைவர் திருமதி ஜெ.நாகேந்திரன் (ஆஷா) அவர்களும், அதன் பிரதிநிதிகளும் இந்த கலந்தாய்வில் பங்குபற்றியிருந்தனர்.  

'பதிவுக'ளுக்கு அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.