ஊத்துக்காடு வெங்கட கவிநான் தீவிர கர்நாடக சங்கீத இரசிகனல்லன். ஆனால் சிறு வயதிலிருந்தே ஒரு சில பாடல்களைக் கேட்டு, அப்பாடல்களுக்கு அடிமையாகிப்போனவன். பாரதியாரின் கண்ணன் பாடல்கள், கண்ணம்மாப் பாடல்கள் எவ்விதம் கேட்கையில் இன்பத்தைத் தருகின்றன. அதுபோல் இப்பாடல்களும் கண்ணனைப்பற்றியவை. கேட்கையில் இன்பத்தைத்தருபவை. பக்திப்பாடல்கள் என்பதற்காக அல்ல. மானுடர்களின் காதல், குழந்தைப்பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் இனிய, எளிய வரிகளுக்காக. மனத்தினை அமைதிப்படுத்தும் இசைக்காக. பாடகர்களின் குரலினிமைக்காக.

இப்பாடல்களை எழுதியவர் அண்மைக்காலத்தவரல்லர். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். நூற்றுக்கணக்கில் கண்ணன் பாடல்களை எழுதித் தானே இசையமைத்தவர். எனக்கு மிகவும் ஆச்சரியமான விடயமென்னவென்றால்... இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்து எழுத்தே வாசிப்பதற்குக் கடினமாகவிருக்கும்போது பதினெட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவரது பாடல்கள் எவ்வளவு எளிமையாக , இனிமையாகவுள்ளன. இப்பாடல்களின் இனிமையும், எளிமையும்தாம் இவற்றை எழுதியவர் யார் என்பதைக்கண்டறியும் ஆவலை எனக்கு ஏற்படுத்தின.

அப்பாடலை எழுதியவர் பெயர் ஊத்துக்காடு வெங்கட கவி

இவரது 'அலை பாயுதே - கண்ணா என்மனம் மிக அலைபாயுதே' பாடலைப் பாடாத கர்நாடக சங்கீதப் பாடகர்கள் எவர்? அப்பாடலின் மொழிநடை எவ்வளவு எளிமையானது. இனிமையானது. இப்பாடலின் 'தெளிந்த நிலவு பட்டப்பகல்போல் எரியுதே - உன் திக்கை நோக்கி என்னிரு புருவம் நெரியுதே. கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே' என்னும் சரணத்தில் வரும் வரிகளும், 'அலை பாயுதே - கண்ணா என்மனம் மிக அலைபாயுதே' என்னும் பல்லவி வரிகளும் மானுட வாழ்வின் காதல் அனுபங்களுடனும் ஒன்றிப் போகும் வரிகள் அல்லவா.

இவரது இன்னுமொரு புகழ்பெற்ற பாடல் 'தாயே யசோதா உந்தன் மாயக் கோபாலக் கிருஷ்ணன் செய்யும் லீலையைப் பாரடி'. இதுவும் பாடகர்கள் பலரால் பாடப்பெற்ற, பாடப்படுகின்ற பாடல்தான். 'அலை பாயுதே' பாடலைப்போல் எளிய , இனிய வரிகள். குழந்தையான கிருஷ்ணன் செய்யும் குறும்புகளை அவனது தாயான யசோதையிடம் கோபியர்கள் முறையிடுவதாக அமைந்த வரிகள். மானுடக் குழந்தையொன்றின் குறும்புகளுடன் மனதை ஒன்ற வைக்கும் வரிகள்.

 

'பார்வை ஒன்று போதுமே' என்பது புகழ் பெற்ற திரைப்படப்பாடல். ஆனால் ஊத்துக்காடு வேங்கட கவி இவ்வரிகளில் அன்றே

'பார்வை ஒன்று போதுமே - கள்ளப்
பார்வை ஒன்று போதுமே' என்று எழுதிச்சென்றிருக்கின்றார். எப்படியான கள்ளப்பார்வை தெரியுமா?

'கார்முகில் போல் வண்ணக் கதிரென்ன மதியென்னக்
கருவிழி கடலினைச் சற்றே திறந்து
கருணை மழை பொழிந்தென் அகம் குளிரும் கள்ளப்பார்வை'

'எத்தனைக் கேட்டாலும் போதும் என்பதே இல்லை' என்றொரு பாடல். அதில் வரும் கீழுள்ள சரண வரிகளைப்பாருங்கள்:

"கண்ணைத் திறந்தால் ரூபம்-
காதைத் திறந்தால் - கானம்
காற்றை யுகந்தால் துளபகந்தம் - ஆனந்தம்
விண்ணை நோக்கினால் வண்ணம் - விண்
மதியை நோக்கினால் கன்னம்
வேறெங்கும் போகாது என் எண்ணம் - இது திண்ணம்'

'பால் வடியும் முகம் - நினைந்து நினைந்தென் உள்ளம்
பரவசமாகுதே-- கண்ணா!' என்று ஆரம்பமாகும் இன்னுமொரு பாடலில் வரும் சரண வரிகளில் சில கீழே:

'வான முகட்டில் சற்று மனம் வந்து நோக்கினும் - உன்
மோனமுகம் வந்து தோணுதே - தெளி
வான தெண்ணீர்த் தடத்தில் சிந்தனை மாறினும் - உன்
சிரித்த முகம் வந்து காணுதே- சற்று
கானக்குயில் குரலில் - கருத்தமைந்திடினும் அங்கு உன்
கானக் குழலோசை மயக்குதே'

ஊத்துக்காடு வெங்கட கவியின் கண்ணன் பாடல்களில் சிலவற்றைப் பின்வரும் இணையத்தளத்தில் வாசிக்கலாம். அதற்கான இணைய இணைப்பு: https://archive.org/stream/OothukkaduVenkataKaviLyricsTamil/OothukkaduTamil.pdf#page/n0/mode/2up

சுதா ரகுநாதனின் குரல் என்னை மிகவும் கவர்ந்த குரல். அவரது 'தாயே யசோதா', 'அலை பாயுதே' பாடல்களை எத்தனை தடவைகள் கேட்டாலும் அலுப்பதில்லை. இப்பாடல்களை நான் வெறும் பக்திப்பாடல்களாக எண்ணுவதில்லை. இவற்றையெல்லாம் , ஜேசுதாஸ், எம்.எஸ். சுப்புலட்சுமி  போன்ற பாடகர்கள் பலரின் இப்பாடல்களையெல்லா  'யு டியூப்' இணையத்தளத்தில் கண்டு, கேட்டு, இரசிக்கலாம்.

கண்ணனைக் குழந்தையாக, காதலானாக எண்ணிப்பாடப்பட்ட பல நெஞ்சையள்ளும் பாடல்களை ஊத்துக்காடு வெங்கட கவி அவர்கள் இயற்றியுள்ளார். மானுட வாழ்வின் காதல், குழந்தைப்பாச உணர்வுகளை வெளிப்படுத்தும் பாரதியாரின் கண்ணன், கண்ணம்மாப் பாடல்கள் எவ்விதம் எம் நெஞ்சைக்கவர்ந்தனவோ அதே காரணங்களுக்காக் ஊத்துக்காடு வெங்கட கவியின் பாடல்களும் கேட்பவர் நெஞ்சைக் கவர்வன.என நெஞ்சைக் கவர்ந்தன. எப்பொழுதில் கேட்டாலும் உள்ளத்தில் இன்பத்தைப் பிறப்பிக்கும் எளிய, இனிய வரிகளுக்குச் சொந்தக்காரர் ஊத்துக்காடு வெங்கட கவி.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.