வ.ந.கிரிதரன் பக்கம்: வாசிப்பும், யோசிப்பும்.எழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா

தமிழ்க்கவி அம்மாஎழுத்தாளர் தமிழ்க்கவி அம்மா அவர்களுக்கு இன்று, ஜூலை 19, 2019,  வயது 70. இந்த வயதிலும் அவர் இவ்வளவு துடிப்புடன் செயற்படுவது, தன் கருத்துகளை ஆணித்தரமாக வெளியிடுவது இவையெல்லாம் என்னை மிகவும் பிரமிக்க வைப்பவை. 'ஊழிக்காலம்' தமிழ்க்கவியை வரலாற்றில், தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலை நிறுத்தி வைக்கும். அதுவோர் இலக்கியப்படைப்பு மட்டுமல்ல , வரலாற்று ஆவணமும் கூட. இந்த வயதிலும் இவ்வளவு இளமைத்துடிப்புடன் இயங்கும் தமிழக்கவியம்மா மேலும் பல்லாண்டுகள் இதே துடிப்புடன் வாழ்ந்து, இலக்கியப்பங்காற்றிட வாழ்த்துகள்.

தமிழ்க்கவி அவர்களின் 'ஊழிக்காலம்' நூல் பற்றி முன்னர் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதிய குறிப்புகளிலிருந்து சில பகுதிகளை இத்தருணத்திலிங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.

"..இந்த நாவலைப் பொறுத்தவரையில் ஏனைய முக்கியமான நாவல்களைப் போல் பாத்திரப்படைப்பு, கதைப்பின்னல், உரையாடல், கூறும்பொருள், மொழி என்பவற்றின் அடிப்படையில் அணுக முடியாது. இதன் முக்கியத்துவம் நடந்து முடிந்த பேரழிவினை ஆவணப்படுத்தும் பதிவுகள் என்ற வகையில்தானிருக்கின்றது. யூதச்சிறுமி ஆன் ஃபிராங்கின் புகழ்பெற்ற 'தினக்குறிப்புகள்' எவ்விதம் ஆவணச்சிறப்பு மிக்கவையாக இருக்கின்றனவோ (அத்தினக்குறிப்புகள் அச்சிறுமியின் பதின்ம வயது உள்ளத்துணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் இலக்கியச்சிறப்பும் மிக்கவை) அதுபோல்தான் தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' நாவலும் ஆவணச்சிறப்பு மிக்கதாகவிருக்கின்றது. அதன் காரணமாகவே ஈழத்தமிழர் இலக்கியத்தில் முக்கியமானதொரு படைப்பாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்கின்றது.

இந்த நாவலில் யுத்தக்காலகட்டத்தில் மக்களின் இடம்பெயர்வுகளை, கூவிவரும் எறிகணைகளிலிருந்து தப்புவதற்காக அவர்கள் படும் சிரமங்களை, அன்றாட வாழ்வியற் பிரச்சினைகளை, இயக்கத்தவரின் செயற்பாடுகளை, இயக்கத்தைக் காரணமாக வைத்துச் சிலர் அடையும் ஆதாயங்களை .. இவற்றையெல்லாம் தமிழ்க்கவி இயலுமானவரையில் பதிவு செய்திருக்கின்றார். இயக்கத்தின் செயற்பாடுகளைப் பாராட்ட வேண்டிய இடங்களில் பாராட்டியும், கண்டிக்க வேண்டிய இடங்களில் கண்டித்துமுள்ளார். ...

தமிழ்க்கவியின் 'ஊழிக்காலம்' என்னுமிந்த ஆவணப்பதிவில் என்னை மிகவும் பிரமிக்க வைத்தது மக்கள் இருப்பினை எதிர்நோக்கிய இயல்பு. பல்வேறு பட்ட எறிகணைகள் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களெல்லாம் சீறிப்பாய்கின்றன. பலரைப் பலிகொள்கின்றன. இலங்கை இராணுவத்தின் கைகளில் ஒவ்வொரு புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமும் விழுந்தவுடன் , மக்கள் மீண்டும் , மீண்டும் இடம்பெயர்கின்றார்கள். யுத்தத்தின் இறுதிவரையில் மக்கள் பலியாகிக்கொண்டிருக்கின்றார்கள். அதே சமயம் தமிழீழ வைப்பகம் போன்ற அமைப்புகள் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன. மக்கள் வைப்பகங்களில் வைத்திருந்த பணத்தை அவ்வப்போது எடுத்து , உணவுக்காக, பங்கர்கள் கட்ட உதவும் பொருட்களைக் காவி வருவதற்கான கூலி போன்றவற்றுக்காக என்றெல்லாம் செலவழிக்கின்றார்கள். விலை அதிகமாகக்கொடுத்துப் பொருட்களை வாங்குகின்றார்கள். வியாபாரிகளும் அதிக விலைக்கு விற்கின்றார்கள். சங்கக்கடை போன்ற அமைப்புகள் யுத்தநிலைக்கேற்ப சந்திக்குச் சந்தி இடம்மாறி தம் சேவைகளை வழங்கிக் கொண்டுதானிருக்கின்றன. குழந்தைகள் பங்கர்களுக்குள் சதுரங்கம், தாயத்து போன்ற விளையாட்டுகளை விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருமுறை இடம் மாறும்போதும் , புதிய இடங்களில் பங்கர்கள், மலசலக்கூடங்கள் அமைத்துத் தம் வாழ்வினைத் தொடர்கின்றார்கள். இவ்விதமான அழிவுகளுக்கு மத்தியிலும், மக்கள் ஒழுங்கிழந்து , சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. அழிவுகளை எதிர்நோக்கி, மீண்டும் நம்பிக்கையுடன் யுத்தத்தினை எதிர்கொள்கின்றார்கள். இவ்விதமான யுத்தச்சூழலில் மக்களின் அன்றாட இருப்பினை நன்கு பதிவு செய்துள்ளார் தமிழ்க்கவி..."


நடிகர் கமலஹாசன்நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவது பற்றி....
நடிகர் கமலஹாசன் அரசியலுக்கு வருவது பற்றி அண்மையில் இயக்குநர் பாரதிராஜா கூறியதாகக் கூறப்படும் பின்வரும் கூற்றினை முகநூற் பதிவில் கவிஞர் மகுடேஸ்வரன் பதிவு செய்திருந்ததைப் பார்த்தேன்:

"கமல்ஹாசனார் அரசியலுக்கு வருவது பற்றி பாரதிராஜா கூறியதாகக் கூறப்படும் இந்தக் கருத்துத்தான் அருமை :'டேய்... அவனை அரசியலுக்கு வர வெச்சிராதீங்கடா... அப்படி வர வெச்சீங்கன்னா சாதாரணமா வரமாட்டான்... நேராகப் போயி அடியிலிருந்து முடி வரைக்கும் சகலத்தையும் கத்துக்கிட்டு வந்து உங்களைக் காலி பண்ணிருவான்.'.."

இது பற்றிய என் கருத்து என்னவென்றால்... அது இதுதான்:

" கமலஹாசனுக்கு ஏனைய நடிகர்களைவிட அதிக வெற்றி வாய்ப்புகள் அரசியலிலுண்டு. கடந்த அரை நூற்றாண்டாக அவரது முகம் மக்கள் மனதிலுள்ளது (களத்தூர் கண்ணம்மாவிலிருந்து இன்று வரை வரை) முக்கிய விடயம். தற்போதுள்ள சூழலில் மக்களைக் கவரக்கூடிய வசீகரமுள்ள ஆளுமைகள் குறைவாக உள்ள சூழலில் அவ்விதமாக வசீகர ஆளுமை உள்ள ஒருவராக அவர் இருப்பது இன்னுமொரு விடயம். அடுத்தது தற்போது நடைபெறும் 'பிக் பாஸ்' அவரைத் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒரு வித 'பிக் பாஸ்' ஆகக்கொண்டு சென்றுள்ளது அடுத்த விடயம். அடுத்தது இவர் தமிழரா என்ற பிரச்சினை கமல் விடயத்தில் எழாது. சீமான், பாரதிராஜா யாரும் நெருங்க முடியாது அந்த விடயத்தில். சாதியைச் சிலர் தூக்கிப்பிடிக்கலாம். ஆனால் மக்கள் மனங் கவர்ந்த ஆளுமையாக அவர் இருப்பதால் அ்து பெரிதாக எடுபடாது. இவ்விதம் பல சாதகமான நிலைகளே உள்ளன கமலைப்பொறுத்த வரையில்....."

உங்கள் கருத்து என்னவோ?


பித்துக்குளி முருகதாஸ்பெருமாள் கோயிலில் பித்துக்குளி முருகதாஸ்..
ஈழகேசரி 1956 மலரில் யாழ்ப்பாணத்து ஆலயங்கள் பலவற்றின் புகைப்படங்களுள்ளன. அவற்றிலொன்றுதான் யாழ் பெருமாள் கோயில். பெருமாள் கோயில் என்றதும் உடனே ஞாபகத்துக்கு வரும் விடயங்கள்: ஒன்று அதிகாலை நேரங்களில் காற்றில் கலந்து வரும் மணியோசையுடன் கூடவே வரும் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் சுப்பிரபாதம். அடுத்தது : எழுபதுகளில் நான் யாழ் இந்துவில் எட்டோ அல்லது ஒன்பதாம் வகுப்பு மாணவனாக இருந்த சமயம், யாழ்ப்பாணத்தில் ஆச்சி வீட்டுக்கு அண்மையிலிருந்த ஆச்சியொருவர் என்னைத்துணைக்கழைத்துக்கொண்டு பெருமாள் கோயிலுக்குக் கூட்டிச்சென்றார். நானும் போய் அவருடன சுமார் மூன்று மணி நேரம் அங்கிருந்து வந்தேன். காரணம்: அவர் அன்று அங்கு தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த பாடகர் ஒருவரின் கச்சேரியினைக் கேட்கச் சென்றிருந்தார். அப்பாடகர்: கறுப்புக்கண்ணாடியும், மஞ்சள் காவியும், பார்வைக்கு 'ஹல்க் ஹோகன்' போன்ற தோற்றமும் கொண்ட பித்துக்குளி முருகதாஸ். அந்த வயதில் அங்கிருந்து அமைதியாக, நிதானத்துடன் சொற்களை அடுக்கிப் பாடிய பித்துக்குளியாரின் கச்சேரியினைக்கேட்டு, ஒருவழியாகப் பித்துப்பிடிக்காமல் வீடு வந்து சேர்ந்தேன் :-) . மறக்க முடியாத அனுபவம் அது


ஜெர்மனி அரசு வெளியிட்ட சுவாமி ஞானப்பிரகாசர் ,முத்திரை!

நூலகம் இணையத்தளத்தில் ஈழகேசரி பத்திரிகை வெளியிட்ட 1936, 1938 & 1956 ஆம் ஆண்டுகளுக்குரிய மலர்களுள்ளன. அவற்றில் 1956 மலரைப்புரட்டியபோது கிடைத்த புகைப்படத்தில் தமிழர் ஒருவருக்கு ஜேர்மன் அரசாங்கம் முத்திரையடித்துப் பெருமைப்படுத்திய விடயம் பதிவாகியுள்ளது. யார் அவர் என்று கருதுகின்றீர்கள்? சுவாமி ஞானப்பிரகாசர்தான் அவர்


வ.ந.கிரிதரன் பக்கம்: வாசிப்பும், யோசிப்பும்.முகநூற் பதிவுகள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒரு விதம்.
சற்று முன்னர் நான் இரசித்து , மகிழ்ந்த முகநூற் பதிவொன்று. முகநூல் நண்பரும் , எழுத்தாளருமான பேனா மனோஹரன் அவர்கள் அவ்வப்போது திரைப்படப்பாடல்களின் வரிகளைப் பதிவிடுவார். இவ்விதமாகப் பதிவிடப்படும் பாடல்களின் வரிகளுக்குப் பொருத்தமாகச் சில வேளைகளில் அப்பாடலின் ஏனைய வரிகளும் அமைந்து விடுகின்றன. அவர் பதிவிட்ட வரிகளுக்கு ஏற்ற எதிர்வினைகளாக ஏனைய நண்பர்களும் வந்து அப்பாடலின் ஏனைய வரிகளைப் பதிவிடுவார்கள். அவற்றை வாசிப்பதும் முகநூலில் ஓரின்பமே. எங்கோயிருக்கும் எழுத்தாளர்கள் ஓய்வாக இருக்கும் இது போன்ற தருணமொன்றில், மனம் விட்டு, சொற் சிலம்பம் ஆடுவதைச் சாத்தியமாக்கியுள்ளது முகநூல். முகநூலின் ஆரோக்கியமான பக்கங்களில் இதுவுமொன்று.

உதாரணத்துக்கு ஒன்று:

பேனா மனோகரன்: கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன். அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்.

எழுத்தாளர் ஆதவன் கதிரேசர்பிள்ளை: நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்.

பேனா மனோகரன்: நான் யாரென்று அப்போது நீ காணலாம்.

ஈழம் மலர் மன்னன் தம்பிராஜா உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது. உன் எண்ணம் எதுவென்று புரிகின்றது. நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை என்றேனும் ஓர்நாளில் நான் பேசலாம்..


MKT ( எம்.கே.தி )
தமிழ்த்திரையுலகின் முதலாவது 'உச்ச நட்சத்திரம்' (Super Star) என்று புகழ்பெற்றவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். அவர் நடித்த திரைப்படங்கள் மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் ஓடிச் சாதனை புரிந்தன. அவரது மகனான அமரர் தி.ரவீந்திரனின் நினைவுக்குச் சமர்ப்பணம் செய்து , பாகவதர் பற்றிய அரிய ஆங்கிலமொழியிலான இணையத்தளமொன்றினை டி.வி.பாலகிருஷ்ணன் அவர்கள் MKT என்னும் பெயரில் உருவாக்கியிருக்கின்றார். பாகவதரின் சுய வாழ்க்கை பற்றி, அவரது ஆரம்ப காலத்துக் கலையுலகப் பிரவேசம் பற்றி, அவரது திரைப்படங்களின் அரிய புகைப்படங்கள், பாடல்களென பாகவதரின் வாழ்க்கை பற்றிப் பல அரிய தகவல்களை உள்ளடக்கியுள்ள இணையத்தளம். மிகுந்த பயனுள்ள தளம் MKT. http://web.archive.org/…/raja1630.tripod.com:…/mktb/id1.html


வழக்கறிஞர் செந்தில்நாதனின் 'ஆரம்ப வானியல்' நூல்

நூல்: ஆரம்ப வானியல்எழுபதுகளில் யாழ் கஸ்தூரியார் வீதியில் , நாவலர் வீதிக்குத் தெற்காக அமைந்திருந்த வழக்கறிஞர் செந்தில்நாதனின் மாடி வீட்டினைக் கடந்து செல்லும் எவரையும் அவரது மாடி வீட்டின் மேல் அமைந்திருந்த தொலைக்காட்டியுடன் கூடிய மொட்டை மாடி  கவராமற் போகாது. அங்குதான் அவர் தொலைக்காட்டியினூடு இரவுகளில் விண்ணை ஆராய்வது வழக்கம். யாழ் வானியற் கழகத்தலைவராக இருந்த இவர் , வானியல் சம்பந்தமான நூலொன்றும் எழுதியிருப்பதை அண்மையில்தான் 'நூலகம்' இணையத்தளம் மூலம் அறிந்துகொண்டேன். எளிமையான மொழி நடையில் எழுதப்பட்டுள்ள பயனுள்ள ஆரம்ப வானியல் நூலாக இதனைக் குறிப்பிடலாம். இரவு வானில் தென்படும் நட்சத்திரங்களை, நட்சத்திரக்கூட்டங்களைப்பற்றி எழுதப்பட்டுள்ள நூல் வானியலில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பயனுள்ள முதனூல்.

இவரைப்பற்றி நினைத்ததும் இவரது மகன் ஒருவரின் நினைவும் கூடவே ஏற்படுவதுண்டு. அவரது பெயர் சேரலாதன். யாழ்ப்பாணக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தவர், கந்தசாமி 'மாஸ்ட்ட'ரின் இல்லத்தில் சிவஞானசுந்தரம் என்னும் ஆசிரியரால் நடாத்தப்பட்ட உயர்தரக் கணிதப்பாடத்துக்கான மீட்டல் வகுப்பொன்றுக்குச் சிறிது காலம் சென்றபொழுது இவரும் வந்துகொண்டிருந்தார். ஆங்கிலப்பாடல்களை எந்நேரமும் பாடிக்கொண்டிருப்பார். அதன் காரணமாக அவரை ஆங்கிலப்பாடல்களைப்பாடும்படி நாம் வற்புறுத்திக் கேட்பதுண்டு. ஒரு சில மாதங்களே நடைபெற்ற அந்தக் கணித வகுப்புக்குப் பின்னர் நான் அவரைச் சந்திக்கவேயில்லை. என் வாழ்வில் மறக்க முடியாத கணிதப்பாட வகுப்பு அது.

வழக்கறிஞர் செந்தில்நாதனின் 'ஆரம்ப வானியல்' நூலுக்கான 'நூலக' இணைப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.

http://noolaham.org/wiki/index.php/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D


வ.ந.கிரிதரன் பக்கம்: வாசிப்பும், யோசிப்பும்.கணையாழியும், ஈழத்துப்படைப்புகளும்!
தமிழகச்சிற்றிதழ்களில் 'கணையாழி' இதழும் முக்கியமான இதழ்களிலொன்று. ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மட்டுமல்ல, மலேசியா, ஆஸ்திரேலியா என வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள்தம் இலக்கியத்துக்கும் முக்கிய இடத்தைக்கொடுத்து, அந்நாடுகளில் வாழும் எழுத்தாளர்களின் படைப்புகளைப் பிரசுரித்து வந்த, வருகின்ற சஞ்சிகை 'கணையாழி'. என்னைப் பொறுத்தவரையில் 'கணையாழி' சஞ்சிகைக்கு என் மனதில் முக்கியமானதோரிடமுண்டு. காரணம்: இது வரையில் நான் எழுதிய ஐந்து படைப்புகளை அது வெளியிட்டுள்ளது. அதற்காக என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கணையாழியில் வெளியான எனது படைப்புகள் வருமாறு: நான்கு கட்டுரைகள்: பண்டைய இந்துக்களின் கட்டடக்கலை மற்றும் நகர அமைப்பு`, `சூழற் பாதுகாப்பு` , `ஆர்தர்.சி.கிளார்க்`, மற்றும் `ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம்` போன்ற விடயங்களைப்பற்றிய கட்டுரைகள்; கணையாழியின் 'கனடாச்சிறப்பித'ழில் வெளியான 'சொந்தக்காரன்' என்னும் சிறுகதை.

தற்செயலாகப் 'பதிப்பகம்' இணையத்தளத்தில் கணையாழி சஞ்சிகையின் சில இதழ்களைப்பார்த்தேன். அவற்றிலொன்று கணையாழி - யூன் 1996 சஞ்சிகை. அதில் வெளியான படைப்புகளைப் பார்க்கும்போது கணையாழி சஞ்சிகை ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். இந்த இதழில் வே.சபாநாயகம் அவர்கள் எழுத்தாளர் தேவகாந்தனின் 'நெருப்பு' , மற்றும் ச.கணேசலிங்கன் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவின் 'மல்லிகை முகங்கள் ஆகிய நூல்களுக்கு நல்ல நூல் அறிமுகக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். மேலும் மேற்படி இதழில் எழுத்தாளர் பொ.கருணாகரமூர்த்தியின் 'அவர்க்கென்று ஓர் குடில்' சிறுகதை, எழுத்தாளர் கே.விஜயனின் 'இலங்கைச்செய்தி மடல்' அத்துடன் எனது 'பண்டைய இந்துக்களின் கட்டடக்கலையும், நகர அமைப்பும்' என்னும் கட்டுரை ஆகிய படைப்புகளும் வெளியாகியுள்ளன.

கணையாழி என்றதும் இன்னுமொரு விடயமும் ஞாபகத்துக்கு வருகின்றது. அது: சென்ற வருடம் தமிழகத்திலிருந்து கவிதா பதிப்பகம் 'கணையாழிக் கட்டுரைகள் (1995-2000) என்றொரு கட்டுரைத் தொகுதியினை வெளியிட்டிருந்தது. அத்தொகுதியில் அக்காலகட்டத்தில் கணையாழியில் வெளியான மேற்படி கட்டுரை மற்றும் ஐன்ஸ்டைனின் சார்பியற் தத்துவம் பற்றிய கட்டுரை ஆகிய இரு கட்டுரைகளும் உள்ளடங்கியுள்ளன. அதுவும் என்னைப் பொறுத்தவரையில் முக்கியமானதொரு விடயம்.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கொப்ப , இந்த ஜூன 1996 கணையாழி இதழ் ஒன்றே போதும் கணையாழி சஞ்சிகை ஈழத்தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளுக்குத் தரும் முக்கியத்துவம். அதற்காக மீண்டுமொருமுறை கணையாழிக்கு நன்றி.

கணையாழி ஜூன்1996 இதழ்: http://www.padippakam.com/document/kaniyali/kaniyali_06_1996.pdf