Surgent Sarath Hemachandraநீதிபதி இளஞ்செழியன்யாழ்ப்பாணத்தில் நல்லூர் பிரதேசத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் யாழ் நீதிபதி இளஞ்செழியனைக் காப்பாற்றத் தன் உயிரைக்கொடுத்ததாக, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த பொலிஸ் சார்ஜன் சரத் ஹேமச்சந்திரா பற்றிச் செய்திகள் ஊடகங்களில், சமூக ஊடகங்களில் வெளிவந்தன. ஆனால் துப்பாக்கிச்சூடு நடைபெற்ற முறையினைப் பார்க்கும்போது இச்சம்பவம் தற்செயலாக நிகழ்ந்த சம்பவங்கள் எதிர்பாராமல் விரிவடைந்ததன் அடிப்படையில் நிகழ்ந்தது போல்தான் தெரிகிறது. இச்சம்பவத்தில் உடனடியாக நீதிபதி இளஞ்செழியனை நோக்கித்தான் துப்பாக்கி பாவிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று சகலரும் எண்ணும் நிலை ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் புங்குடுதீவி மாணவி வழக்கு இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருப்பதுதான். ஏன் இச்சம்பவம் நீதிபதியை நோக்கி நிகழ்த்தப்படவில்லை என்பதற்கான காரணங்களே அதிகமாகவுள்ளன.

ஊடகவியலாளர் டி.பி,எஸ்.ஜெயராஜின் பத்திரிகைக் குறிப்பு இச்சம்பவத்தைப்பற்றிப் பின்வருமாறு கூறுகின்றது:  "Seeing the group of arguing persons blocking the road, Sgt.Hemachandra got off the motor cycle and went towards the group asking them to clear the way for the Judge’s vehicle to pass. A heated exchange of words occurred between Sgt.Hemachandra and the drunken Jeyanthan. At one point Sgt.Hemachandra laid his hand on the pistol in his holster in a bid to scare Jeyanthan but did not pull it out. An enraged jeyanthan engaged in a scuffle with the Policeman who then pulled out the gun. But Jeyanthan suddenly gripped the pistol and tried to seize it. The High court judge Illanchelliyan saw what was happening and got out of the vehicle shouting at Jeyanthan “Vidadaa Pistol ai, Vidadaa pistol ai” ( Let go of the pistol) in Tamil. The other policeman sgt Wimalasiri got out of the vehicle and pushed Judge Illancheliyan back into the vehicle." [Manhunt Launched in North for Killer of Policeman in Jaffna Shooting Incident; Suspect Identified as 39 Year old Ex-Tiger Selvarasa Jeyanthan of Nallur. By DBSJeyaraj- http://dbsjeyaraj.com/dbsj/archives/54396#more-54396]

நீதிபதியைக் கொல்ல வந்திருந்தால், நிச்சயம் துப்பாக்கியுடன் போதிய தயாரிப்புகளுடன் வந்திருப்பார். ஆனால் இங்கு நடைபெற்றதென்ன? ஏற்கனவே சந்தேக நபர் மதுபோதையில் இருந்திருக்கின்றார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் ஏற்கனவே அங்குள்ள அரச உத்தியோகத்தர்களுடன் வர்த்தக அனுமதிப்பத்திரம் ஒன்றுக்காகப் பிரச்சினைப்பட்டுக் கொண்டிருக்கின்றார். இது காரணமாகவே அப்பகுதியில் சனக்கூட்டம் ஏற்பட்டிருந்தது. இச்சமயத்தில் நீதிபதி இளஞ்செழியனின் வாகனத்தொடரணி வந்திருக்கின்றது. சார்ஜன் ஹேமச்சந்திரா கூட்டத்தை விலக்கி வழியினை உருவாக்குவதற்காகச் சென்றிருக்கின்றார். அச்சமயத்தில் அவருக்கும், சந்தேக நபருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கின்றது. அச்சமயம், சார்ஜன் ஹேமச்சந்திரா தன் கைகளை இடுப்பில் சொருகியிருந்த பிஸ்டல் மீது வைத்திருக்கின்றார் சந்தேக நபரை வெருட்டுவதற்காக. . அச்சமயம் ஏற்கனவே குடிப்போதையில் இருந்த சந்தேக நபர் பிஸ்டலைப்பறித்தெடுத்துச் சார்ஜண் ஹேமச்சந்திராவைச் சுட்டிருக்கின்றார். அவர் அதன் பின் தன்னை நோக்கிச் சுட்டுக்கொண்டு வந்த மற்ற பொலிஸ்காரரையும் சுட்டுவிட்டு, வானத்தை நோக்கிச் சுட்டவாறு தப்பிச்சென்றுள்ளார். அவர் நீதிபதியைச் சுட வந்திருந்தால், நீதிபதி இளஞ்செழியன் அவரை நோக்கி 'பிஸ்டலை விடடா' என்று கத்தியவாறு ஓடியபோது சுட்டிருக்கலாம். பின்னரும் சுட்டிருக்கலாம். அவ்விதம் அவர் சுடவில்லை. ஆனால் நீதிபதி குறிப்பிட்டதுபோல் சுட்டவர் துப்பாக்கி பாவிப்பதில் நன்கு அனுபவம் பெற்றவராக இருந்திருக்கின்றார் என்பதும் சரியானது. ஊடகவியலாளர் டிபிஎஸ் ஜெயராஜின் கருத்துப்படி சந்தேகநபர் செல்வராசா ஜெயந்தன் 1996-1999 காலகட்டத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தவர். பின்னர் பொதுவாழ்க்கைக்குத் திரும்பி பல்வேறு தொழில்கள் செய்து வாழ்ந்தவர். பல்வேறு குற்றங்களுக்காக ஏற்கனவே காவல் துறைக்கு நன்கு அறிமுகமான ஒருவராக அவர் இருந்திருக்கின்றார்.

சந்தேக நபர் புங்குடுதீவைச் சேர்ந்தவராக இருப்பதும், தற்போது புங்குடுதீவு மாணவியின் வழக்கு இறுதிக்கட்டத்தை அடைந்திருக்கும் சமயத்தில் இச்சம்பவம் நடைபெற்றிருப்பதும், அவ்வழக்கில் நீதிபதியாக இளஞ்செழியன் இருப்பதும், நீதிபதி இளஞ்செழியனை நோக்கி நடத்தப்பட்ட தாக்குதலாக இச்சம்பவத்தைத் திருப்பி விட்டன என்றே தோன்றுகின்றது.

இதற்கிடையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபகசவோ விடுதலைப்புலிகளின் ஆரம்ப காலகட்டத்தை இச்சம்பவம் நினைவூட்டுவதாகத் தெரிவித்துத் தெற்கில் தன் அரசியலுக்கு இச்சம்பவத்தைப் பாவிக்கத் தொடங்கியிருக்கின்றார். ஊடகவியலாளர் கூறுவதுபோல் சந்தேக நபர் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் என்பது உண்மையானால், மகிந்த கூட்டணிக்கு மெல்லுவதற்குக் கிடைத்த அவலாக இச்சம்பவம் அமைந்து விடும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை.

காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதைதான் இச்சம்பவத்தைப்பார்க்கும்போது ஞாபகத்துக்கு வருகின்றது. அதேசமயம் சார்ஜ்ன் சரத் ஹேமச்சந்திரா நீதிபதியைக் காப்பாற்றுவதற்காக உயிரை விடா விட்டாலும், கடமையில் இருந்தபோது தன் உயிரை விட்டிருக்கின்றார். அத்துடன் நீண்ட காலமாக நீதிபதியின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலாராக இருந்திருக்கின்றார். அது தனிப்பட்ட வகையிலும் பெரிய இழப்பு நீதிபதி இளஞ்செழியனைப் பொறுத்தவரையில். அதனால்தான் அவர் சார்ஜன் சரத் ஹேமச்சந்திராவின் குடும்பத்தினரின் முன்னால் காலில் விழுந்து தன் துயரைக் கட்டுப்படுத்த முடியாமல் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

கடமை நேரத்தின்போது தன்னுயிரை இழந்த சார்ஜன் சரத் ஹேமச்சந்திராவுக்கு அஞ்சலி செலுத்தும் அதே சமயம், இச்சம்பவம் ஓரளவாவது அமைதியாக வாழும் மக்களை மீண்டும் 2009ற்கு முன்னரான நிலைக்குக் கொண்டு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நாட்டின் அனைத்து இன அரசியல்வாதிகளுக்குமுள்ளது. ஊடகங்களுக்குள்ளது. மக்களுக்குமுள்ளது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.