'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

எழுத்தாளர் குப்பிழான் சண்முகம் அவர்கள் அண்மையில் தனது முகநூல் பதிவொன்றில் எனது 'குடிவரவாளன்' நாவல் பற்றிய தனது கருத்துகளைப்பகிர்ந்திருந்தார். அப்பதிவினை இங்கு நான் 'பதிவுகள்' வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

எழுத்தாளர் குப்பிழான் சண்முகத்தின் குறிப்பு!

மே மாதம் 24, இன்று வ.ந. கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலை வாசித்து முடித்தேன். சட்ட பூர்வமாகக் கனடாவுக்கு புலம் பெயரும் வழியில், எதிர் பாராத விதமாக அமெரிக்காவில் அகதித் தஞ்சம் கோர நேரிடுகிறது. ஒரு வருடம் அமெரிக்காவில் சட்ட பூர்வமற்ற அகதியாக வாழ்ந்த அனுபவங்களை நாவல் பேசுகிறது. புலம்பெயர் அகதி வாழ்வின் வித்தியாசமான அனுபவங்கள், வித்தியாசமான மனிதர்கள்.

எதனாலும் சலிக்காத கதாநாயகனின் உறுதி. இயற்கைக் காட்சிகளின் இரசிப்பு. தமிழ் கவிதைகளினதும்- குறிப்பாக பாரதி- இசை, இயற்கை மீதான ஈடுபாடு.. என விரியும் கதை. ' மீண்டும் தொடங்கும் 'மிடுக்காய்' தொடரும் வாழ்வு.

இந் நூலில் அமெரிக்க அகதி வாழ்வின் அனுபவங்களையே கிரிதரன் முக்கியப்படுத்துகின்றார். இதனால் நாவலின் வடிவம் கேள்விக்குறியாகிறது. இந்த இடத்தில் பெர்லின் வாழ்வு அனுபவங்களைப் பேசும் கருணாகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் 'நாவல்' தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது. குடிபெயரும் வாழ்வின் அனுபவங்களைப் பேசும் இவர்கள் எங்கள் பாராட்டுக்குரியவர்களாகிறார்கள்.


கனடாவில் 'தாய்வீடு'

மே மாதத் 'தாய்வீடு' பல முக்கியமான ஆக்கங்களை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. டொராண்டோ, கனடாவில் வெளிவரும் மாதாந்த இலவசப்பத்திரிகைகளிலொன்றான கலைஞர் டிலீப்குமாரை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'தாய் வீடு' ஏனைய இலவசப்பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமானது: கலை, இலக்கியத்தரமுள்ள படைப்புகளைத்தாங்கி வெளிவருவது.

மே மாதப் பத்திரிகையில் அண்மையில் மறைந்த 'தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி'யைச்சேர்ந்த நெடுந்தீவு சண்முகநாதன் பற்றிய கட்டுரைகள் (எஸ்.கே. விக்கினேஸ்வரன், மா.சித்திவிநாயம், டிலீப்குமார் எழுதியவை) வெளியாகியுள்ளன. வெளிவந்துள்ள ஏனைய முக்கிய ஆக்கங்களாகப்பின்வருவனவற்றைக் கூறலாம்:

1.புலம் பெயர் - சில குறிப்புகள் - மு.புஷ்பராஜன்
2. குரங்குகள் - புண்யகாந்தி விஜேநாயக (மூலம்: சிங்களம்; தமிழில் என்.கே.மகாலிங்கம்)
3.இலக்கிய வரலாற்றில் செங்கை ஆழியான் பணியும் வகிபாகமும் - தெளிவத்தை ஜோசப்
4. நியோக - சில குறிப்புகள் - மைதிலி தயாநிதி
5. நியோகா: சில பகிர்தல்கள் - அருண்மொழிவர்மன்
6.புலம் பெயர் மொன்றியல் தமிழர்களின் ஆரம்பகாலக் கலை இலக்கிய முயற்சி - லீலா சிவான்ந்தன்
7. மஞ்சுள வெடிவர்தனாவுடனான நேர்காணல்
8. போரும் ஈழத்திரைப்படங்களும் - ஹசீன்
9. தென்புலத்திலிருந்து கவிதைகள் மூன்று (மூன்று சிங்களக்கவிதைகளின் மொழிபெயர்ப்புகள். எழுதியவர்கள்: மகேஷ் முனசிங்ஹ, குமாரி ஃபெர்னாண்டோ)
10. ஜேர்மனிய இலக்கிய வானில் ஒரு தமிழ்க்கீற்று - துஷி ஞானப்பிரகாசம்

'தாய்வீடு' பத்திரிகையை இணையத்திலும் வாசிக்கலாம். முகவரி: www.thaiveedu.com