'ஓவியா' பதிப்பக வெளியீடாகத் தமிழகத்தில் வெளிவருகிறது வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'!

நேற்று நண்பர் எல்லாளன் தொலைபேசியில் அழைத்தார். அழைத்தவர் வழமைக்கு மாறாக நீண்ட நேரம் உரையாடினார். எதனைப்பற்றியென்று நினைக்கின்றீர்கள்? எல்லாம் அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்திருந்த என் நாவலான 'குடிவரவாளன்' பற்றித்தான்.
நாவலை வாசித்தபொழுது தன் நெஞ்சினைத்தொட்டு விட்டதாகக் கூறினார். தன் கடந்த கால வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் அசை போட வைத்துவிட்டதென்றார். இந்த நாவல் புலம் பெயர்ந்த தமிழர்களில் முதலாம் தலைமுறையினர் பலரும் அனுபவங்களை விபரிப்பதால் பலருக்குத் தம் வாழ்வின் அனுபவங்களை நிச்சயமாக நினைவூட்டியிருக்கும்.

மேலும் தனது அனுபவங்கள் பலவற்றை விபரித்தார். 'காலம்' செல்வம் 'தாய் வீடு' பத்திரிகையில் இது போன்று தன் அனுபவங்களை எழுதியிருக்கின்றார் என்று நினைவு கூர்ந்தார். ஆனால் அவரது அபுனைவு. இது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட புனைவு. அதுதான் வித்தியாசம்.

அவர் அப்பொழுது பகிர்ந்துகொண்ட அவரது அனுபவங்களில் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். ஒருமுறை அவர் வன்கூவரில் வேலை தேடி மோட்டேல்கள் (Motel) ஏறி இறங்கியிருக்கின்றார். சென்ற இடங்களிலெல்லாம் மோட்டேல்களில் Vacancy என்ற அறிவிப்பு இருப்பதைக்கண்டு அவ்விதம் அறிவிப்புக்காணப்படும் இடங்களிலெல்லாம் வேலைக்கு விண்ணப்பித்திருக்கின்றார். ஆனால் ஓரிடத்திலும் வேலை கிடைக்கவில்லை. இவருக்கு ஒரே ஆச்சரியம் : 'என்ன இது எல்லா இடத்திலும் 'வேகன்ஸி'யென்று அறிவித்திருக்கின்றார்களே. ஆனால் ஓரிடத்திலும் வேலை இல்லையென்று கூறுகின்றார்களே' என்று. எப்பொழுதுமே பத்திரிகைகளில் வேலைக்கான 'வேகன்ஸி' விளம்பரங்களைப்பார்த்துப்பார்த்து 'வேகன்ஸி' என்றதும் மனது தவறுதலாக மோட்டேல்களில் அறைகளுக்கான 'வேகன்ஸி' அறிவிப்பை வேலைக்கானதாக எண்ணிவிட்டது.

புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் புகலிடத்தமிழர்களின் இழந்த ஊர் நினைவுகள் பற்றிய கழிவிரக்கம், புதிய இடத்தில் காணப்படும் நிறவேற்றுமை போன்ற மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றை எழுதுவதில் மட்டும்தான் கவனம் செலுத்துகின்றார்கள். ஆனால் இவ்விதமான அனுபவங்களும் புகலிடத்தமிழர்களின் அனுபவங்களே.

Bum / Bomb ( வீதி வழியே, பிச்சையெடுத்துக்கொண்டு அலைந்து திரிபவர்களையும் Bum என்று கூறுவது மேற்கு நாடுகளில் வழக்கம்.) இரண்டு சொற்களும் கேட்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் தமிழ் பாதுகாவல் அதிகாரியொருவர் அடைந்த அனுபவத்தை 'புலம் பெயர்தல்' என்னும் என் சிறுகதையொன்றில் விபரித்திருக்கின்றேன். வாடிக்கையாளர்களொருவர் இரண்டாம் தளத்தில் Bum இருப்பதாகக் கூறியதைக்கேட்ட அந்த அதிகாரி Bomb இருப்பதாகக்கருதி அடையும் பதற்றத்தை விபரிக்கும் கதை அது. இது போன்ற புகலிட அனுபவங்கள் பல சிரிப்பை வரவழைக்கும்.

இவையெல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு நான் அடைந்த அனுபவமும் ஒன்றுண்டு. சொன்னாலும் வெட்கக்கேடு. யாருக்கும் கூறிவிடாதீர்கள்.

அமெரிக்காவில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில் முதன் முதலாக என் பிறந்த நாட்டை விட்டு இன்னுமொரு நாட்டுக்குப் புலம்பெயர்ந்திருக்கின்றேன். அருகிலிருந்த பலசரக்குக் கடையொன்றில் 'பீர்' வாங்கி வருவதற்காகச் சென்ற நான் குடிவகைகளிலொன்றான 'பீ'ருக்குப் பதிலாக மென்பானங்களிலொன்றான 'ரூட் பீர்' (Root Beer) வாங்கி வந்ததை இப்பொழுது நினைத்தாலும் என்னால் சிரிப்பை அடக்க முடிவதில்லை. நல்லவேளை இந்த விடயம் வேறு யாருக்கும் தெரியாது இதுவரை.


கனடா நண்பர்கள் கவனத்துக்கு:

'குடிவர்வாளன்' நாவலை வாங்க விரும்பும் நண்பர்கள் முகநூலின் தகவல் பெட்டி மூலம் தொடர்பு கொள்ளலாம். அல்லது மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம். எனது மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.  தமிழகம் மற்றும் ஏனைய நாடுகளில் வசிக்கும் , நூலினை வாங்க விரும்பும் நண்பர்கள் ஓவியா பதிப்பகத்தாருடன் தொடர்பு கொள்ளுங்கள். அவர்களுடன் தொடர்பு கொள்வதற்கான விபரங்கள் வருமாறு:

வதிலைப்பிரபா:
Oviya Pathippagam, 17-16-5A, K.K.Nagar, Batlagundua - 642 202 Tamil Nadu, India | Phone: 04543 - 26 26 86 | Cell: 766 755 711 4, 96 2 96 52 6 52

email: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.