வாசிப்பும், யோசிப்பும் 157: இலக்கியச்சிறப்பு மிக்க 'தமிழர் தகவல்' மலர்!நவகாலத்தமிழ் இலக்கியம் பற்றி எழுதும் முனைவர்கள் பலர் தமக்குக் கிடைக்கும் நூல்களை மையமாக வைத்தே பெரும்பாலும் எழுதுவது வழக்கம். இதனால் நவகாலத்தமிழ் இலக்கியத்தின் விரிந்த பரப்பினை அவர்கள் பலரின் எழுத்துகள் காட்டத்தவறிவிடுகின்றன. இணையத்தில் குறிப்பாக இணைய இதழ்களில் வெளியாகும் பல படைப்புகளை இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட முனைவர்கள் பலர் தவற விட்டு விடுகின்றார்கள்.  ஆனால், அண்மைக்காலமாகத் தமிழ் இலக்கியம் பற்றிய ஆய்வுகளுக்கு இணைய இதழ்களில் வெளியான படைப்புகளை, கட்டுரைகளை மையமாக வைத்தும் முனைவர்கள் சிலர் ஆய்வுகளைச் செய்யத்தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது. ஆரோக்கியமான செயற்பாடிது.

முனைவர் நா.சுப்ரமணியன், முனைவர் இ.பாலசுந்தரம் போன்றவர்கள் கனடாத்தமிழ் இலக்கியம் பற்றிய தமது கட்டுரைகளுக்கு 'பதிவுகள்' போன்ற இணைய இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளை, படைப்புகளை மையமாக வைத்து ஆய்வினைச்செய்திருப்பது அவதானிப்புக்குரியது. இணைய இதழ்களின் இலக்கியப்பங்களிப்பினை இவர்கள் புரிந்து கொண்டிருப்பது நல்லதொரு விடயம்.

அண்மைக்காலமாக இணைய இதழ்களில் வெளியாகிய பல்வகைப்படைப்புகள் நூலுருப்பெற்று வெளிவருவதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புகள் பல (நீலக்கடல் நாவல் உட்பட) திண்ணை இணைய இதழில் வெளியாகிப்பின் நூலுருப்பெற்றவைதாம். 'பதிவுகள்' இணைய இதழிலும் இவரது இலக்கியக் கட்டுரைகள், பிரெஞ்சுப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகள் பல வெளியாகியுள்ளன. எழுத்தாளர் இரா.முருகனின் 'அரசூர் வம்சம்' 'திண்ணை' இணைய இதழில் வெளியாகி நூலுருப்பெற்றது. அறிவியல் அறிஞர் ஜெயபாரதன் அவர்களின் அறிவியற் கட்டுரைகள் பல திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி நூலுருப்பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் அவரது இலக்கியப்படைப்புகள் பல திண்ணை இணைய இதழில் வெளியாகி நூலுருபெற்றுள்ளன. இவை தவிர நடேசன் (ஆஸ்திரேலியா) அவர்களின் 'அசோகனின் வைத்தியசாலை' 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகிப்பின்னர் நூலுருப்பெற்றதையும், அண்மையில் தமிழகத்தில் ஓவியா பதிப்பக வெளியீடாக வெளிவந்த வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவல் பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியாகி நூலுருப்பெற்றது என்பதையும் மறந்து விட முடியாது. மேலும் அண்மையில் வெளியான தமிழினியின் 'போர்க்காலம்' கவிதைத்தொகுதி 'பதிவுகள்' மற்றும் தமிழினியின் முகநூல் பக்கம் ஆகியவற்றில் வெளியாகிப்பின்னர் நூலாக வெளிவந்ததும் கவனத்திற்கொள்ள வேண்டியதொன்று.

திறனாய்வாளர்கள், எழுத்தாளர்கள் பலர் இணைய இதழ்கள் பலவற்றில் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கின்றார்கள்' எழுதி வருகின்றார்கள். அமரர் வெங்கட் சாமிநாதன் அவர்கள் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களிலும் வேறு பல இணைய இதழ்களிலும் தன் இறுதிவரை தொடர்ச்சியாக எழுதி வந்தார். திறனாய்வாளர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் பதிவுகள் இணைய இதழில் பல கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எழுத்தாளர்களான சு.குணேஸ்வரன், சுப்ரபாரதிமணியன், நாகரத்தினம் கிருஷ்ணா,  முருகபூபதி, யமுனா ராஜேந்திரன், நுணாவிலூர் கா.விசயரத்தினம், தேவகாந்தன் , லதா ராமகிருஷ்ணன் எனப்பலர் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் எழுதி வருகின்றார்கள். தமிழகத்தைச்சேர்ந்த ஆய்வாளர்கள் பலர், முனைவர்கள் பலர் பதிவுகள் இணைய இதழில் ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வருகின்றார்கள்.

'பதிவுகள்' இணைய இதழில் நடைபெற்ற விவாதங்களில் ஜெயமோகன், ரவிகுமார், யமுனா ராஜேந்திரன், R.P.ராஜநாயஹம், புதியமாதவி, ஆதவன் தீட்சண்யா, சுமதி ரூபன், டி.செ.தமிழன், சூரியா , மாலன் எனப்பலர் பங்கொண்டு விவாதித்திருக்கின்றார்கள். எழுத்தாளர் ஜெயமோகன் , , R.P.ராஜநாயஹம் ஆகியோர் படைப்புகள் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகியிருக்கின்றன.

இணைய இதழ்கள் , வலைப்பூக்கள் பற்றி அவற்றின் இலக்கியப்பங்களிப்பு பற்றி முனைவர் துரை மணிகண்டன் போன்றோர் தொடர்ச்சியாக எழுதிவருகின்றார்கள்; எழுதியவற்றை நூலுருவாக்கி வருகின்றார்கள்.

திண்ணை, பதிவுகள், சொல்வனம், முத்துக்கமலம், கீற்று , எதுவரை எனப் பல முக்கியமான இணைய இதழ்கள் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றன.

இணைய இதழ்களின் மற்றும் வலைப்பதிவுகளின் இலக்கியப்பங்களிப்பு பற்றிய விரிவான ஆய்வானது  நடாத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என்பதைப் புலப்படுத்தும் நூல் வெளியீடுகளிவை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.