வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'- மங்கை பதிப்பகம் (கனடா), ஸ்நேகா பதிப்பகம் (தமிழ்நாடு) இணைந்து வெளியிட்ட அமெரிக்கா தொகுதியானது 'அமெரிக்கா' என்னும் நாவலையும் (அளவில் சிறியதானாலும் இது நாவல்தான்) , சில சிறுகதைகளையும் உள்ளடக்கிய தொகுதியாகும். இவை அனைத்துமே 'பொந்துப்பறவைகள்' மற்றும் 'மான் ஹோல்' தவிர , கனடாவிலிருந்து வெளியான 'தாயகம்' பத்திரிகை, சஞ்சிகையில் பிரசுரமானவை (தாயகம் ஆரம்பத்தில் பத்திரிகையாகவும் , பின்னர் சஞ்சிகையாகவும் வெளியானது). முதற் பதிப்பின்போது ஒழுங்காக சரி, பிழை பார்க்காமல் போனதால் பல எழுத்துப்பிழைகள் ஏற்பட்டு விட்டன; சில வசனங்கள் விடுபட்டுப்போயின,  மேலும் இந்நாவல் ஈழத்துத்தமிழ் அகதிகள் சிலரின் நியூயார்க்கிலுள்ள சட்ட விரோதக் குடிகளுக்கான தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்குமொரு நாவல். இந்நிலையில் மீண்டும் அத்தொகுப்பில் வெளியான ஆக்கங்களை சரி, பிழை பார்த்துப் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரித்தாலென்ன என்ற எண்ணம் தோன்றியது. அதன் விளைவுதான் 'அமெரிக்கா' என்னும் இந்நாவலின் மீள்பிரசுரிப்பு. இவ்விதம் பிரசுரிப்பதன் மூலம், அவற்றைச்சரி, பிழை பார்த்து, மீள எழுதுவதன் மூலம் அடுத்த பதிப்புக்குத்தயார் படுத்தலாம் என்றெண்ணுகின்றேன். அத்துடன்  பதிவுகள் வாசகர்களும் அவற்றை இணையத்தின் மூலம் வாசிக்க வழி வகுக்கும் என்றுமெண்ணுகின்றேன். - வ.ந.கிரிதரன் -


 

அத்தியாயம் ஐந்து: முகாமின் பொழுதுபோக்கு அனுபவங்கள் சில....

ஆரம்பத்தில் முதலிரண்டு கிழமைகளிலும் எங்களுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போயிருந்தது. ஜன்னலினூடு தொலைவில்  விமானங்கள் சுதந்திரமாக கோடு கிழிப்பதைப்பார்க்கும்போது  , தொலைவில் வறிய கறுப்பினத்துக் குழந்தைகள் விளையாடுவதைப்பார்க்கும்போது  சுதந்திரமற்ற எங்களது நிலை நெஞ்சினை வருத்தியது.  விசர் பிடித்தவர்களைப்போல்  நாம் ஐவரும் எங்கள் எங்களது படுக்கைகளில் புரண்டு கிடந்தோம்.

ஊர் நினைவுகள் நெஞ்சில் பரவும்.  வீட்டு நினைவுகள் , கெளசல்யாவின் நினைவுகள்  சிறகடிக்கும்.  கலவர நினைவுகளின் கொடூரம் கண்களில் வந்து நிற்கும்.  எத்தனையோ கனவுகள்,  எத்தனையோ திட்டங்கள், பொறுப்புகள் இருந்தன.  வெளியில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் இருண்ட பகுதிக்குள் வந்து இப்படி மாட்டுப்படுவோமென்று யார் கண்டது. இவர்களால் ஏன் எங்கள் நிலைமைகளை உணர முடியவில்லை. எல்சல்வடோர் , ஆப்கானிஸ்தான் இளைஞர்களின் வாழ்க்கை எவ்விதம் வீணாகிக்கொண்டிருக்கின்றது. குற்றச்செயல் புரிந்தவர்களையும், கொடுமை காரணமாக நாடு விட்டு நாடு ஓடி வந்தவர்களையும் ஒன்றாக வைத்திருக்கின்றார்கள். கைதிகளைப்போல் சட்டதிட்டங்கள். காவலர்களின் அதட்டல்கள், உறுக்கல்கள், தத்தமது நாடுகளில் நிகழும் , நிகழ்ந்த அனர்த்தங்களிலிருந்து , உற்றார் , உறவினரைப்பிரிந்து , நொந்த , மனத்துடன் வரும் அகதிகளை இவர்கள் மேலும் வருத்தும் போக்கு.....   எம்மைப்பொறுத்தவரையில் நாம் இன்னும் கலவரத்தின் கொடூரத்திலிருந்து மீண்டிருக்கவில்லை.  அதற்குள் எங்களுக்கு இங்கு ஏற்பட்டுவிட்ட நிகழ்வுகள் மேலும் எம்மை வருத்தின.

எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கின்றது.  அப்பொழுது நான் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன்.  'நான் விரும்பும் நாடு' என்னும் தலையங்கத்தில் எழுதும்படி வகுப்பில் தமிழாசிரியர் பணித்திருந்தார்.  அதற்கு நான் தேர்ந்தெடுத்த நாடு அமெரிக்கா. அதற்காக நான் குறிப்பிட்டிருந்ட காரணங்கள்: அமெரிக்கா ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாடு.  ஆபிரகாம் லிங்கனைப்போன்ற ஒரு சாதாரண விறகு வெட்டி கூட ஜனாதிபதியாக வர முடியும் சாத்தியமுள்ள நாடு அமெரிக்கா. அமெரிக்காவில் மனித உரிமைகள் மதிக்கப்படுகின்றன.  அவர்களது சுதந்திர தேவி சிலையே இதற்குச்சான்று. இவ்விதமாக எழுதியிருந்தேன். ஆனால் இன்று யாராவது இப்படியொரு கட்டுரையினை எழுதச்சொன்னால் நிச்சயம் அமெரிக்காவைத்தேர்ந்தெடுக்க மாட்டேன்.  அகதிகளாக ஓடி வருபவர்களைப் பெரிதாக அரவணைக்க வேண்டாம். ஆனால் அவர்களை மேலும் மேலும் மனோரீதியாக வருத்தாமலிருக்கலாமல்லவா.

இதே சமயம் சட்ட விரோதமாக நாட்டினுள் நுழைபவர்கள் விடயத்தில் அமெரிக்கா ஒரு வித்தியாசமான , விநோதமான சட்டமொன்றினையும் இயற்றி வைத்திருக்கின்றது. நீதியையும், நியாயத்தையும் பாதுகாக்கத்தான் சட்டங்கள். ஆனால் அந்தச்சட்டம் எந்த நியாயத்தைப் போதிக்கின்றதோ தெரியவில்லை.  ஆனால் அந்தச்சட்டத்தினை நாங்கள் உணர்ந்ததே தற்செயலாகத்தான். அதுவும் மூன்று மாதங்கள் கழிந்துவிட்ட பிறகுதான். அது மட்டும் தெரியாமல் போயிருந்தால் சில வேளை இன்னும் நாம் அமெரிக்கத்தடுப்பு முகாமில்தான் இருந்திருப்போமோ தெரியவில்லை.

இன்னுமொரு வழியில் தடுப்பு முகாம் வாழ்க்கை இப்பிரபஞ்சத்தின் சார்புத்தன்மையினை  எங்களுக்கு வெளிக்காட்ட உதவியதென்றுகூடக் கூறலாம். வெளியிலிருந்தபோது விரைவாக ஓடிக்கொண்டிருந்த காலம் தடுப்பு முகாமினுலுள்ளேய ஓடவே மாட்டேனென்று சண்டித்தனம் செய்தது.  எதிர்காலம் நிச்சயமற்றிருந்தது.  முடிவெதுவும்  தெரியாத திரிசங்கு நிலை.  இருதாற்போலிருந்து விரக்தி கலந்த உணர்வுகள் வெடிக்கத்தொடங்கி விடும்.  சோர்வு தட்டிப்படுக்கைகளில் படுத்திருப்போம்.  தொடர்ந்தும் இப்படியே இருப்பது எங்களுக்கு எந்தவிதப்பலனையும் தரப்போவதில்லை என்பது மட்டும் தெளிவாகப்புரிந்தது. 

ஒரு நாளிரவு ஐவரும் படுப்பதற்கு முன்னால் இராஜசுந்தரத்தாரின் கட்டிலில் ஒன்று கூடினோம்.  இதற்கிடையில்  தடுப்பு முகாம் வாழ்க்கை எங்கள் பழக்க வழக்கங்களில்  ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தது.  சிவகுமாரின் வாயிலிருந்து அடிக்கடி தகாத வார்த்தைகள்  வெளிவரத்தொடங்கியிருந்தன.  ரவிச்சந்திரன் இரவில் படுக்கையில் சாய்ந்து , 'லைற்' அனைத்ததும் 'ஊ" என்று ஊளையிடுவதுபோல் சப்தமிடுவான்.  இவனுக்குப் பதிலை டானியலும் அவ்விதமே அனுப்புவான்.  இவர்களைத்தொடர்ந்து ஏனையவர்களும் அவ்விதமே அந்நிகழ்வில்  கலந்து கொள்வார்கள். அச்சமயம் சிறைக்காவலர்கள் வந்து ஒழுங்கை நிலை நாட்டிச்செல்வார்கள்.

இதே சமயம் ரவிச்சந்திரனுக்கு ஆங்கில அறிவு மிகவும் மட்டாகவே இருந்தது.  இவற்றையெல்லாம் கணக்கிலெடுத்து , அன்றைய கலந்துரையாடலில் எங்களது நிலைமையை அலசி ஆராய்ந்தோம்.  அன்றைய கலந்துரையாடலில் பொழுதைப்பயனுள்ளவாறு எவ்விதம் கழிப்பது என்பது பற்றியும், எமது எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் விவாதித்ததில் பினவரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:

அமெரிக்காவில் அகதிநிலைக்கோரி விண்ணப்பித்திருந்ததாலும், ஏற்கனவே பொஸ்டன் தமிழ் அமைப்புகள் எம் விடயத்தில் கை போட்டு விட்டதாலும், எது செய்தாலும் அவர்களை மூலமாகவே அவர்களைக்கலந்து ஆலோசிக்க வேண்டுமெனவும், கனடா செல்வதற்கு ஏதாவது வழிகள் இருக்கும் பட்சத்தில் அது பற்றி ஆராயும் பொறுப்பை அவர்களிடமே விட்டு விடுவதென்றும் முடிவு செய்தோம்.  அதே சமயம் தகாத வார்த்தைகளைப் பாவிப்பதை நிறுத்துவதென்றும், ரவிச்சந்திரனுக்கு இராஜசுந்தரத்தால் ஆங்கிலம் படிப்பிப்பதென்றும் மேலதிக முடிவுகளும் எடுக்கப்பட்டன.

இதே சமயம் எங்களுக்கு எங்களைப்பற்றியும், எங்களது கலந்துரையாடல் பற்றியும்  எடுத்த முடிவுகள் தொடர்பாகச் சிரிப்பாகவுமிருந்தது.  அன்றைய எமது கலந்துரையாடலினை அடுத்து , அடுத்த சில நாள்கள் எம் நெஞ்சினில் சிறிது நம்பிக்கை துளிர் விட்டிருந்தது.  அவ்விதம் கலந்துரையாடியதன் மூலமெங்கள் நெஞ்சின் பாரமும் ஓரளவு குறைந்திருந்தது.

என்னைப்பொறுத்தவரையில் தொடர்ந்தும் தேவையற்ற சிந்தனைகள் நெஞ்சினைத்தாக்க விடுவதில்லையென்று  உறுதி செய்து கொண்டேன்.  என் பொழுதினைக் கூடுதலாக தொலைக்காட்சி பார்ப்பதிலும், டேபிள் டென்னிஸ் டானியல், ரிச்சர்ட் ஆகியோருடன் விளையாடுவதிலும், சிவகுமார், ரவிச்சந்திரனுடன் சதுரங்கம் விளையாடுவதிலும் கழிக்கத்தொடங்கினேன்.

சதுரங்க விளையாட்டினைபொறுத்தவரையில் ஸ்பானிஷ் சிறைக்காவலருக்குத்தான் நன்றி கூற வேண்டும்.  சிறைக்காவலர்கள் சிலரும் சில சமயங்களில் தங்களுக்கிடையில் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருப்பார்கள்.  அந்த ஸ்பானிஷ் சிறைக்காவலரிடம் கேட்டபோது , எந்த வித முறைப்புமில்லாமல் ஒரு சதுரங்க மட்டையினையும், காய்களையும் கொண்டு வந்து தந்தான்.

இது தவிர சமயம் கிடைக்கும்போதெல்லாம் உடற்பயிற்சியும் செய்யத்தொடங்கினேன்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப்பொறுத்தவரையில்  காலையில் 'கார்ட்டூன்'களையும், செய்திகளையும் பார்ப்பதில் விருப்பமாயிருக்கும்.  தடுப்பு முகாமில் இருந்தவர்களில்  பெரும்பான்மையானவர்கள்  'கார்ட்டூன்'களைப்பார்ப்பதில் விருப்பம் கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.  'பிங் பாந்தர்', 'டொம் அன்ட் ஜெர்ரி' முதலான கார்ட்டூன்களையே பெரும்பாலானவர்கள் பார்த்து இரசித்தார்கள். இதே சமயம் எமது தடுப்பு முகாமினுள்ளிருந்த 'வென்டிங் மெஷின்'களிலிருந்தும் பானங்கள், உருளைக்கிழங்குப்பொரியல் போன்றவற்றைப்பெற முடிந்தது. அதற்காக எங்கள் தடுப்பு முகாம் பொறுப்பதிகாரியிடம் ஆரம்பத்தில் கொடுத்து வைத்திருந்த எங்கள் பணத்திலிருந்து ஐந்து டொலர்களோ, பத்து டொலர்களோ சில்லறையாக மாற்றித்தரும்படி நேரத்துடனேயே கூறி வைத்தால், பெரும்பாலும் ஓரிரு வாரங்களில் மாற்றித்தருவார்கள்.

இதற்கிடையில் டானியல், ரிச்சர்ட் மற்றும் அப்துல்லா ஆகியோருடன் நெருக்கமாகப்பழகத்தொடங்கியிருந்தேன்.  ரிச்சர்ட் வித்தியாசமான பிறவிகளிலொருவன்.  எந்நேரமும் பைபிளும் கையுமாகத்தானிருப்பான். இவனுக்கு ஆத்திரம் வந்தே நான் பார்த்ததில்லை.  இவனது வாழ்க்கை மிகவும் எளிமையானது.  சிக்கலில்லாதது.  எல்லாவற்றையும் கடவுள் மேலேயே போட்டுவிடுவான்.  மற்றவர்கள்  எல்லாரும் அமெரிக்கச்சட்ட, திட்டங்களை விளாசு விளாசென்று விளாசித்தள்ளும்போது இவன் ஒரு நாளாவது  அமெரிக்க அரசு மீது ஆத்திரப்பட்டதே கிடையாது. எனக்கே அது வியப்பாகவிருந்தது. "ரிச்சர்ட், உனக்கு உண்மையிலேயே இவர்கள்மேல் ஆத்திரம் வரவில்லையா?" என்று கேட்டால் அதற்கு அவன் "இல்லை. இவர்கள் எனக்குச் சாப்பாடு போடுகிறார்கள்.  தங்க உதவி செய்கின்றார்கள்.  அதற்காக இவர்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். கடவுளையும் வேண்டுகின்றேன்" என்பான். சில வேளைகளில் இவனது கடவுட் பக்தி அதி தீவிரமான, மூடத்தனம் நிறைந்ததோ என்று கூட நான் நினைத்ததுண்டு.  இவன் கடவுளைத்தவிர , ஏன் நவீன விஞ்ஞானத்தைக்கூட நம்ப மறுப்பவன்.  பூமி உருண்டை வடிவமானதென்று சொல்வதை இவன் நம்பவே மாட்டான். ஒரு விதத்தில் பார்க்கப்போனால் இவன் மேல் எனக்குப்பொறாமை கூட ஏற்பட்டது.  இவனைப்போல் மட்டும் இருந்து விட்டால் வாழ்க்கையில் பிரச்சினையென்று ஒன்றுமில்லாதல்லவா போய்விடும்., இல்லையா?

இவனுக்கு முற்றிலும் எதிரானவன் டானியல். இவனது கடவுள் சேகுவேரா. கொரில்லாப்போராட்டம் பற்றிய நூலொன்றினைச் சமயம் கிடைக்கும்போதெல்லாம் படித்தபடியிருப்பான். இவனது குடும்பம் முழுவதுமே சல்வடோர் அரச படைகளின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்குப்பலியாகியிருந்தது.  இவனது அண்ணன் ஒரு கொரில்லா அனுதாபி.  அரச படைகள் இவனது அண்ணனைச்சுட்டுக்கொண்டு விட்டிருந்தன. இந்நிலையில் இயல்பாகவே டானியல் சிறிது ஆவேசத்துடனிருந்தான். 

இவ்விதமான எங்கள் வாழ்க்கையில் ஒருவித மகிழ்ச்சியினை ஏற்படுத்த விரும்பிய சிறைக்காவல் அதிகாரிகள் வாரத்திலொருநாள், அதுவும் அரை மணி நேரம், நாம் விரும்பினால் நாமிருந்த தடுப்பு முகாம் கட்டடத்திற்குச்சொந்தமான , சிறிய முள்ளுக்கம்பிப்பாதுகாப்புடன் கூடிய விளையாட்டு மைதானத்தில் விளையாட அனுமதிப்பதிப்பதாகக்கூறி அழைத்துச்செல்வார்கள்.  வெளியுலகைக்காணும் மகிழ்ச்சியுடன் நாமும் செல்வோம். எங்களை அம்மைதானத்துக்குக்கூட்டிச்செல்வதே ஒரு வேடிக்கையான அனுபவம்தான். இரண்டிரண்டு பேராக விலங்கிடுவார்கள். முன்னுக்கும், பின்னுக்கும் பலத்த பாதுகாப்புடன் எம்மைக்கூட்டிச்செல்வார்கள். மைதானத்துக்குச்சென்றதும் விலங்குகளை நீக்கு விளையாட விடுவார்கள். அதற்காகப்பந்தொன்றினைத்தருவார்கள். நாம் ஒருவருக்கொருவர் எறிந்து பிடித்தோ அல்லது காலால் அடித்து விளையோடிக்கொண்டிருப்போம். அச்சமயங்களில் இடையில் குறுக்கிட்டு, விளையாடியது போதுமென்று மறுபடியும் விலங்கிட்டு ஐந்தாவது மாடியிலிருந்த தடுப்பு முகாமுக்கு அழைத்துச்செல்வார்கள். தனித்துவமான முறையில் மனித உரிமைகளைப்பேணும் அவர்களது நடவடிக்கைகள் ஒரு சமயம் எங்களுக்குச் சிரிப்பையும், வெறுப்பையும் ஒருங்கே தந்தன.

மிகப்பெரிய பயங்கரவாதிகளாக எம்மை உருவகித்து, விலங்கிட்டு இவர்கள் அழைத்து வருவது உண்மையிலேயே எங்கள் மேல் கொண்ட பயத்தினால்தானா என்பதில் எங்களுக்கு ஒரு சந்தேகமிருந்தது. எங்கள் சந்தேகத்தை அப்துல்லாவின் பதில் ஒருவிதத்தில் தீர்த்து வைத்தது எனலாம்.  "உண்மையில் இவ்விதம் விலங்கிடுவது , சிறையில் வைத்திருப்பது எல்லாம் எங்களை மனோரீதியாகப் பலவீனப்படுத்தத்தான். இதைத்தாங்காமல் சிலர் தாமாகவே முன்வந்து தம்மை நாடு கடத்தும்படி கேட்டு விடுவார்கள். இவ்விதம் என் நாட்டைச்சேர்ந்த முகமட் முன்னர் சென்றிருந்தான். ஆனால் இன்று அவனது நிலை என்ன என்பது பற்றி யாருக்குமே தெரியாது?"

அதே சமயம் ஆப்கானிஸ்தானைப்பொறுத்தவரையில்  அமெரிக்கா சோவியத்துச் சார்பு அரசாங்கத்துக்கு எதிராக முஜாகிதீன் கொரில்லா அமைப்புக்கு உதவி செய்து வருகின்றது. ஆனால் அந்நாட்டு நிலைமைகளினால் ஓடிவரும் அப்துல்லா போன்றவர்கள் விடயத்தில் கண்டும் காணாதது போலிருக்கின்றது. ஒரு வேளை அகதிகளென்ற பெயரில் ஆப்கான் அரசின் உளவாளிகள் வருகிறார்களென்ற சந்தேகமோ?

[தொடரும்]

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.