- *இது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ள குறுநூல் வரிசையில் பிரசுரமாகியுள்ளது. 100க்கும் மேற்பட்ட குறுநூல்கள் 10 ரூபாய், இருபது ரூபாய் அதற்குட்பட்ட விலைகளில் பலதரப்பட்ட சமூக இலக்கிய கருப்பொருள்களில் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் இத்தகைய குறுநூல்கள் வெளியாகியுள்ளன. நூல்கள் வேண்டுவோர் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ஐ தொடர்புகொள்ளவும். -

இலக்கியம் மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு

latha ramakrishnanஇலக்கியம் என்பது மனிதவாழ்க்கையின் பிரதிபலிப்பு என்றும், மனித வாழ்க்கை எப்படியிருக்க வேண்டும் என்ற இலட்சிய நோக்கினைப் பிரதிபலிப்பதாய் இலக்கியம் விளங்க வேண்டும் என்றும், இவ்விரண்டு பிரதிபலிப்புகளும் கலந்ததே இலக்கியம் என்றும் நம் வாசிப்பனுபவத்தில் விளங்கிக்கொண்டிருக்கிறோம். எழுத்தின் வலிமை எல்லோருக்கும் தெரியும். சிறந்த நேர்மையான படைப்புகள் பல சமூகத்தில் சீரிய மாற்றங்கள் உருவாகக் காரணமாய் இருந்திருக்கின்றன; இருந்துவருகின்றன.

உண்மையின் அடிப்படையில் உருக்கொள்வதுதான் புனைவு அல்லது கற்பனை. உலகில், காலங்காலமாக மாற்றுத்திறனாளிகளின் இருப்பு என்பது நடப்புண்மை. எனில், அவர்களைப் பற்றிய சித்திரிப்புகள் இலக்கியப் படைப்புகளில் இடம்பெற்றுள்ளனவா? உள்ளது எனில் எப்படிப்பட்ட சித்தரிப்புகள்? இலக்கியப் படைப்புகளில் பண்டைய இலக்கியந்தொட்டு சமகாலஇலக்கியம் வரை, உள்ளூர் இலக்கியம் முதல் உலகளாவிய இலக்கியம் வரை எத்தனை கதாபாத்திரங்கள் மாற்றுத்திறனாளிகளாக இடம்பெற்றிருக்கிறார்கள்? அவர்கள் எவ்விதம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள்?

இலக்கிய ஊடக வெளிகளில் மாற்றுத்திறனாளிகள்:

மாற்றுத்திறனாளிகள் மதிப்பழிக்கப்படுவது, கேலிப்பொருளாக பாவிக்கப்படுவது சின்னத் திரை பெரியதிரைகளில் காலங்காலமாக இருந்துவரும் போக்கு. ஏதாவதொரு சமயத்தில்தான் இதுகுறித்து எதிர்ப்புக்குரல் ஒலிக்கிறது. தொடர்ந்த ரீதியில் இத்தகைய போக்குகள் கேள்விக்குட்படுத்தப்படுவதில்லை.

பெரும்பாலான நேரங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒன்று, அனுதாபத்துடன் அணுகப்படுகிறார்கள், அல்லது, அலட்சியமாக, அசிரத்தையாக அணுகப்படுகிறார் கள்.

பாதிப்புக்குள்ளானவர்களால்தான் தங்களுடைய பிரச்னைகளை சரிவர எடுத்துரைக்க முடியும் என்ற பார்வையின் அடிப்படையில் பார்த்தோமானால் மாற்றுத்திறனாளிகள் எத்தனைபேர் இலக்கியப்படைப்பாளிகளாய் விளங்குகிறார்கள்? விளங்கியிருக்கிறார்கள்?

இதுபோன்ற கேள்விகளை உள்ளடக்கிய ஆழமான ஆய்வலசல் எதுவும் தமிழில் வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை. வரவேண்டியது அவசியம்.

கடந்த 30 வருடங்களாக நான் பங்கேற்றிருக்கும் வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் [WELFARE FOUNDATION OF THE BLIND] என்ற ‘பார்வையற்றோர் நன்நல அமைப்பி’ல் இந்த நோக்கில் கடந்த பத்துவருடங்களுக்கும் மேலாக பார்வையற்றோரின் பிரச்னைகள்/ வாழ்க்கை குறித்துப் பேசும் நூல்களையும், பார்வையற்றோரின் படைப்பாற்றல்களை வெளிப்படுத்தும் நூல்களயும் வெளியிட்டு வருகிறோம். இதுபோல் வேறு சில தனிநபர்களும் அமைப்புகளும் முயற்சிகள் மேற்கொண்டிருக்கக்கூடும். ஆனால், இவை போதுமா?

‘பெண் என்பதால் பெண்களின் பிரச்னைகளைப் பற்றி மட்டும்தான் எழுத வேண்டுமா?  பெண் என்பதாலேயே எல்லாத்தரப்புப் பெண்களுக்குமான பிரதிநிதியாய் பெண்களின் பிரச்னைகளை, இயல்புகளை, வாழ்க்கையை துல்லியமாக எழுத்தில் வடித்துவிட இயலுமா? என்பதான கேள்விகளைப் போலவேதான் மாற்றுத்திறனாளிகள் விஷயத்திலும் கேள்விகள் எழுவது இயல்பு. தவிர, மாற்றுத்திறனாளிகள் என்ற பிரிவில் பலதரப்பட்ட உடற்குறை உள்ளவர்களும் அடங்குவர்.

எப்படியிருந்தாலும், சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளும் சீரிய பங்களிக்கும் [உரிய வழிவாய்ப்புகள் தரப்பட்டால் அங்கத்தினர்கள் இன்னும் சிறப்பாகப் பங்களிக்கக் கூடியவர்கள்]என்பதில் மாற்றுக்கருத்திருக்க முடியாது. சமூக அங்கத்தினர்கள் என்ற அளவில் இலக்கியப்படைப்பு களிலும், ஒளி-ஒலி ஊடகங்களிலும் அவர்களின் பங்கேற்பும் சித்திரிப்பும் எத்தகையதாய் விளங்குகிறது?

படைப்புவெளியில் பார்வையற்றோர்

இலக்கியம் நமக்கு எதிராக இயங்குகிறதா? [IS LITERATURE AGAINST US?] என்ற அகல்விரிவான கட்டுரையொன்றை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. டாக்டர் கென்னெத் ஜெர்நிகன் என்ற பார்வையற்றவர் இருபது முப்பது வருடங்களுக்கு முன்பு எழுதியிருக்கும் அந்தக் கட்டுரை அழுத்தமான ஆதாரங்களுடன் ‘இலக்கியப் படைப்புகள் பார்வையற்றோரைப் பார்க்கும் ‘அறியாமை நிரம்பிய பாரபட்சப் பார்வையை எடுத்துரைத்திருக்கிறது. பார்வையின்மை என்பது தண்டனையாகவும், தெய்வம் தந்த வரமாகும்படியான தூய பண்பாகவும், பார்வைக்குறைபாடுடையவர் பரிதாபத்திற்குரியவர், கயவர், ஏமாற்றுக்காரர், திருமண வாழ்க்கையில் திருப்திகரமாக ஈடுபட முடியாதவர், தனித்ஹ்டியங்க இயலாதவர் என பலவிதமான எதிர்மறைச் சித்திரிப்புகளாய் காலங்காலமாய் இலக்கியப்படைப்புகளில் தரப்பட்டிருப்பதை எடுத்துக்காட்டியுள்ளார். பார்வையிழப்பிற் குப்பின் ‘பாரடைஸ் லாஸ்ட்’[இழந்த சொர்க்கம்] என்ற அமர காவியத்தை எழுதிய மில்ட்டன்கூட சமூகத்தில் பார்வையற்றோர் குறித்து நிலவும் எதிர்மறைப் பார்வைகளால் ஆக்கிரமிக்கப்பட்டவராய் அத்தகைய எதிர்மறைக் கருத்துகளையே, அதாவது பார்வையின்மை இறப்பைவிடக் கொடியது, பார்வையற்றவர் சபிக்கப்பட்டவர் என்ற ரீதியில்,சொல்லியிருப்பதைச் சுட்டிக்காட்டி யுள்ளார். நம்முடைய உண்மைநிலையை உலகுக்கு எடுத்துச்சொல்ல நாம் உடனடியாகச் செயலில் இறங்க வேண்டும் என்று கூறியுள்ளார். கண்டிப்பாகத் தமிழில் மொழி பெயர்க் கப்படவேண்டிய இந்தக் கட்டுரை நம் கையில் கிடைப்பதற்கே இருபதாண்டுகளுக்குமேல் ஆகிவிட்டது.

கணினி, கைபேசி ஆகிய தொழில்நுட்ப வளர்ச்சிகளின் மூலம் இன்று பார்வைக் குறைபாடுடைய மனிதர்களால் இதுவரை படிக்கக் கிடைக்காமலிருந்த பல புனைவு, அ-புனைவுப் பிரதிகளை அவர்களால் படிக்கமுடிகிறது.

ஆனால், இந்த இருபது, முப்பது ஆண்டுகளில் படைப்பு வெளியில் படைப்பாளிகளாகவும், பாத்திரங்களாகவும் இடம்பெறுதல் அளவிலும் தரத்திலும் [quantity-wise and quality-wise]அதிகமாகியிருக்கிறதா என்றால் இல்லை யென்றே சொல்லவேண்டும்.

காலிழந்தவர் கதாநாயகியாகக்கூடாதா?

முப்பது வருடங்களுக்குமேல் இருக்கும். விபத்தில் தனது ஒரு காலை இழந்து விட்ட பதினாறுவயதுப் பெண் சுதா சந்திரன் தன் விடாமுயற்சியால் நடுவில் நின்று போன நாட்டியப்பயிற்சியை செயற்கைக்காலுடன் நிறைவுசெய்து ‘மயூரி’ படத்தில் நடித்து பரவலாகப் பேசப்பட்டுக்கொண்டிருந்த சமயம். அப்போதைய பிரபல எழுத்தாளர் பாலகுமாரன் ஒருவருடைய தொடர்கதையின் கதாநாயகனுக்கு செயற்கைக்கால். அவன் மூலம் வாசகர்களுக்கு அறிவுரை தருவதாய் அந்த எழுத்தாளர், ‘நம்முடைய உடற்குறையை நாம் மறுதலிக்கலாகாது. இயலாத விஷயத்திற்கு முயற்சி செய்யலாகாது. திரைப்படங்களில் நடித்தால் ஒன்றிரண்டு தடவைகள் பரிதாபத்திற் காய் பார்ப்பார்கள். பிறகு...?’ என்றெல்லாம் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போய் ‘மயூரி ஒரு முட்டாள்’ என்று ‘மனிதநேய’த்தோடு முடித்திருந்தார். அந்த சுதா சந்திரன் இன்றளவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.

மாறாக, ‘டப்பிங்’ அதாவது இரவல் குரல் கொடுத்தல் என்ற, இன்று சின்னத்திரையிலும் வண்ணத்திரையிலும் பெருமளவு பயன்படுத்தபட்டுவரும் உத்தியைப் பயன் படுத்தி காதுகேளாத, வாய்பேசாத பெண்ணொருத்தியைத் தங்கள் படத்தில் இயல்பான கதாநாயகியாக நாடோடி படத்தில் நடிக்கச்செய்த முயற்சி பாராட்டிற்குரியது. இதுபோன்ற முயற்சிகள் ஒளி-ஒலி ஊடகங்களில் அதிகம் இடம்பெறவேண்டியது அவசியம். அதற்கு, சமூகத்திலும், குறிப்பாக படைப்பாளிகளிடம் மாற்றுத் திறனாளிகள் குறித்தபுரிதலும், அவர்களாலும் இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ள இயலும் என்ற புரிதலும் அதிகமாக வேண்டும்.

வேண்டுவது அனுதாபமல்ல: அங்கீகாரமே

பெண்கவிஞர் என்ற ஒற்றைச் சொற்பிரயோகத்தில் இலக்கியம் தெரிந்த தெரியாத, கவிதை தெரிந்த தெரியாத, நவீன கவிதை தெரிந்த தெரியாத ஆண்களெல்லோருமே படைப்புத்துறையில் ஈடுபட்டுள்ள பெண்களை மதிப்பாய்வு செய்யும் தகுதியுடையவர் களாகிவிடுவதுபோல், வெகு சுலபமாய் தங்களை புரவலர் நிலையில் ஆலோசகர் நிலையில் மேலடுக்கில் நிலைபெறச்செய்து கொண்டு விடுவது போலவே உடற் குறையுடையவர்கள் – அவர்கள் எழுத் தாளர்களோ, வாசகர்களோ – உடற்குறையுள்ள படைப்பாளிகளை அனுதாபத் தோடு பார்ப்பதும், அவர்களுக்கு அறிவுரை கூற முற்படுவதும் தொடர்ந்து நடந்துவரும் ஒன்று.

ஏதேனும் உடற்குறையுடையவர்கள் படைபாக்கத்தில் ஈடுபட்டால் உடனே அவருக்கு ஆலோசனை கூறவும் அறிவுரை தரவும் பலர் முன்வந்துவிடுகிறார்கள். ‘பார்வைக்குறை உடையவர்கள் பார்வையின்மை, அது சார்ந்த பிரச்னைகளையே முன்னுரிமைப்படுத்தி எழுத வேண்டும். ஏனெனில், அவற்றையெல்லாம் அத்தனை நம்பகத்தன்மையோடு மற்றவர்களால் எழுத இயலாதல் லவா?” என்று தங்கள் ஆலோசனைகளுக்கு நியாயம் கற்பிப்பார்கள். பார்க்கமுடியாது, பேச முடியாது, கேட்க முடியாது என்ற நிலையிலும் கல்வி கற்று தேர்ச்சி பெற்று பார்வையற் றவர்களின் நலவாழ்வுக்காகப் பெரும்பங்காற்றிய ஹெலன் கெல்லருக்கும் இந்த அனுபவம் உண்டு. அவர் தன்னுடைய சுயசரிதையை, தான் பட்ட துன்பங்களை எழுதியபோது அவருடைய எழுத்தைக் கொண்டாடிய சமூகம், சமூகத்தின் ஓர் அங்கத்தினராய் அவர் சமூக அவலங்கள் குறித்து எழுதியபோது, அவை குறித்த தனது அக்கறையான பார்வைகளை, கருத்துகளை முன்வைத்தபோது அந்த முயற்சியை எளிதாகப் புறந்தள்ளிவிட்டதாம். REBEL LIVES என்ற வரிசையில் வெளியிடப்பட்டுள்ள ‘ஹெலென் கெல்லர் நூல் இதை விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது என்று விவரம் கிடைத்தது.

பார்வையின்மையும் படைப்பாக்கமும்

சில வருடங்களுக்கு முன் எங்கள் அமைப்பின் சார்பாக ‘பார்வைக்குறைபாடுடைய கவிஞரொருவரின் கவிதைகளைத் தொகுப்பாகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டபோது கவிஞரின் பார்வைக்குறையைக் குறிப்பிடுவதா, வேண்டாமா என்ற ஒரு கேள்வியெழுந்தது. அது வேண்டுமா, வேண்டாமா என்பதைவிட,  தேவையா தேவையில்லையா? ஆனால், பாடபுத்தகங்களை வாசித்துக்காட்டவே ஆளில்லாமல் பார்வையற்ற மாணவர்கள் சிரமப் படுவதைக் கருத்தில்கொண்டு பார்க்கும்போது அதைத்தாண்டி இலக்கிய ஆர்வத்தையும், பரிச்சயத்தையும் வளர்த்துக்கொண்டு படைப்பாளியாகவும் உருப்பெறுவதிலுள்ள  கூடுதல் உழைப்பை, முனைப்பை, அக்கறையை, ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்ட அவருடைய பார்வையின்மையை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியம் என்று தோன்றியது. தர்மபுரி அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி  புரிந்துவரும் கவிஞர் கோ.கண்ணனின் முதல் கவிதைத்தொகுப்பான ‘ஓசைகளின் நிறமாலை’ , அதைத் தொடர்ந்து நவீன விருட்சம் வெளியீடாக பிரசுரம் கண்ட ‘மழைக்குடை நாட்கள்’ ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளுமே குறிப்பிடத்தக்க கவிதைகளைக் கொண்டவை.

தனது கவிதையொன்றில் காலங்காலமாய் பார்வையற்றவர்கள் எத்தனையோ சாதித்து வருகின்றனர். இருந்தும், காசி படத்தில் வருவதுபோல் இரக்கத்திற்குரிய பிச்சைக்காரனாகவே பார்வையற்றோர் ஊடகங்களில் தொடர்ந்து சித்திரிக்கப்பட்டு வருகிறார்கள் என்று வேதனையோடு சாடியிருப்பார் கவிஞர்.

சமூகமும் மாற்றுத்திறனாளிகளும்

சமூகத்தில் இன்று பார்வையற்றோர் பிச்சைக்காரர்களாக வலம் வருவதேயில்லையா என்று எதிர்வாதம் செய்யலாம். ஆம், உடற்குறை உள்ளவர்களும், உடற்குறையற்றவர்களுமாய் எண்ணிறந்த பிச்சைக்காரர்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். பிச்சைக்காரர்கள் வங்கிகளில் கொள்ளைகொள்ளையாகச் சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்று நகைச்சுவையாகப் பேசி, வெடிச்சிரிப்பு சிரிப்பதோடு நம் சமூகப்பிரக்ஞை முடிந்து விடுமானால் அது எத்தனை அவலம். இந்தப் பிச்சைக்காரர்கள் எப்படி உருவாகிறார்கள், இவர்களைப் பிச்சைக்காரர் களாகவே இருக்கச்செய்வதன் மூலம் எத்தனை அதிகமான மனிதவளத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறோம், இவர்களுக்கான மறுவாழ்வில்லம் உண்மை யிலேயே இவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் விதத்தில் இயங்குகின்றனவா?  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில்தேட என்று நாம் முழுமனதோடு முயற்சிசெய்யப் போகிறோம்?

சமூகம் என்பது எல்லாவகையான மனிதர்களின் அக புற வளர்ச்சிக்கு இடமளிப்பதாக, வழிவகுப்பதாக இருக்க வேண்டும். உடற்குறையுள்ளவர்களை அந்நியமாகப் பார்க்கும் போக்கு மாறவேண்டும். சிறுவயதிலிருந்தே மாற்றுத்திறனாளிகள் பற்றிய புரிதலை வளர்க்க வேண்டியது அவசியம். அதற்கேற்றார்ப்போல் கல்வித் திட்டம் உருவாக்கப்படவேண்டும். உடற்குறை என்பது மனிதருக்குச் சிறுமை சேர்ப்பதல்ல, அவரை அரைமனிதராக்குவது அல்ல என்ற உண்மை மனிதர்கள் மனங்களில் பதியவேண்டும். எத்தனை ஆரோக்கியமான உடல் இருந்தாலும், ஒருவருக்குத் தேவையான எல்லாவற்றையும் அவராலேயே செய்து கொண்டுவிட முடிகிறதா என்ன? எடுத்துக்காட்டாக, இரண்டு கால்களும் உறுதியாக இருப்பதாலேயே ஒருவர் தினமும் நாற்பது மைல்கள் நடந்துபோகிறாரா என்ன? யாரோ ஒருவர் இயக்கும் பேருந்தில்தானே போகிறார்? யாரோ அமைத்த சாலையில் தானே போகிறார்? அவ்வளவு ஏன், முகமறியாத யாரோ உழுது பயிரிட்டு விளைச்சல் செய்த அரிசியையும், காய்கறிகளையும் உண்டுதானே நாமெல்லோரும் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்! வாழ்க்கையைப் பற்றிய இந்தப் புரிதல் நம் ஒவ்வொருவருக்கும் மிகவும் தேவை.‘ மாற்றுத்திறனாளி’ என்ற சொற்பிரயோகம் இதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மனித நேயத்திற்கே ஆதாரம் இந்தப் புரிதல்தான். இலக்கியம் மனிதவாழ்க்கையின் இத்தகைய அடிப்படைக் கேள்விகளையும், புரிதல்களையும் தன் கதைக்களங்களாக, பின்புலங்களாகக் கொண்டு இயங்கும்போதுதான் அது வாழ்க்கையை அதன் பல்பரிமாணங்களில் பிரதி பலிப்பதாக மேம்படும். அத்தகைய மேம் பாட்டிற்கு ‘படைப்பு வெளி’ மாற்றுத் திறனாளி களையும் எழுதுவோராகவும் வாசிப்போராகவும், கதைக் கருக்களாகவும், முதன்மைப் பாத்திரங்களாகவும் உள்ளடக்கியதாக மாறவேண்டியது மிகவும் அவசியம். அதற்குச் செய்யவேண்டியவை யாவை?

செய்யவேண்டுவன

தமிழைப் பொறுத்தவரை இன்றுவரையான படைப்பு வெளியில் பார்வையற்றவர்கள் உள்ளிட்ட மாற்றுத் திறனாளிகளை முதன்மைப்பாத்திரங்களாக முன்னிறுத்தி வெளியாகியுள்ள படைப்புகள் யாவை, எத்தனை, அவற்றில் மாற்றுத்திறனாளிகள் எவ்விதம் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள், படைப்பு வெளியில் எழுதுவோராக, வாசிப்போராக அவர்கள் பங்கு எத்தகையதாக இருந்து வந்திருக்கிறது போன்ற தரவுகளை சேகரித்துத் தொகுக்க வேண்டியது அவசியம்.

மாற்றுத்திறனாளிகள் என்று கூறுவதாலேயே ‘நாம்’, ‘அவர்கள்’ என்ற இருமுனைப் பிளவை நாம் முதன்மைப் படுத்துவதாகிவிடக்கூடாது. யாரோ மூக்குக்கண்ணாடியைக் கண்டுபிடித்துவிட்ட காரணத்தால்[அவர் என்றும் நன்றிக்குரியவர்] இன்று அதை விதவிதமான வண்ணங்களிலும் வடிவங்களிலும் அணிந்துகொண்டு வலம் வருவோர் நம்மில் எத்தனையெத்தனை பேர்! அப்படித்தான், இங்கே யாருடைய உடலுமே முழுநிறை வானஆரோக்கியத்துடன் இல்லை;இருந்துவிடுவதில்லை. இந்த உண்மை நம் எல்லோருக்கும் புரியவேண்டியது  அவசியம்.

வெகுமக்கள் ஊடகங்களில் மாற்றுத்திறனாளிகளை மதிப்பழிக்கும் சித்திரிப்புகளை, காட்சி யமைப்புகளை, சொற்பிரயோகங்களை சமூகப்பிரக்ஞையோடு வன்மை யாகக் கண்டிக்கவேண்டும். ‘தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு’ என்பார் வள்ளுவர். எனவே, மாற்றுத்திறனாளிகளைக் காயப்படுத் தும் சொற்களைப் பயன்படுத்துவது இயல்பு, அதனால் அன்பு இல்லையென்று ஆகிவிடாது என்ற வாதம் சரியல்ல. இதை நாம் எல்லோரும் உணரவேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் படைப்பாளிகளாக உருவாவதற்கான வழிவகைகளை சமூகம் உருவாக்கித் தரவேண்டும். உதாரணமாக, காதுகேளாத மனிதர் கதையோ கவிதையோ எழுத முனைந்தால் அந்த முயற்சிக்கு அவருடைய குடும்பமோ சக மனிதர்களோ முட்டுக்கட்டை யிடுவதாய் பேசுவதோ செயல்படுவதோ கூடாது.

மாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகள், திறனாற்றல்கள் குறித்த விழிப்புணர்வு சமூகத்தில் பரவலாக்கப்படுதல் எத்தனை அவசியமோ அத்தனை அவசியம் படைப்பு வெளியில் அவர்கள் படைப்பாளிகளாகவும் பாத்திரங்க ளாகவும் இடம்பெறுதல். அவற்றின் மூலம் சமூகத்தில் அவர்களுடைய இடமும் பங்காற்றலும் மேலும் வலுப்பெறும்.

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

உலகம் போற்றும் திருவள்ளுவர் பெண்களைப்பற்றிக் கூறியுள்ள சில கருத்துகள் மிகவும் பிற்போக்கானவை என்றும் அவற்றை அகற்றிவிட்டு இனி திருக்குறள் பிரசுரிக்கப்பட வேண்டும் என்றும் சில வருடங்களுக்கு முன் ஒரு கருத்து பெறப்பட்டது. அது தேவை யில்லை. உரிய மரியாதையோடு திருவள்ளுவரின் சில கருத்துகளை மறுத்துக்கொண்டு மேலே செல்வதுதான் முறை. போரைப் போற்றிப் புகழும் பாடல்களும் கதைகளும் நம்மிடம் எத்தனையெத்தனை!  எனில், சமூகநேயம் மிக்கவர்களால் போரின் தேவையை கேள்விக் குட்படுத்தாது வாளாவிருக்க முடியுமா?

காலங்காலமாக இருந்துவந்த பிழையான போக்குகளை திருத்திக்கொள்ளத்தான் நமக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அதைப்போலவே, மாற்றுத்திறனாளிகள் குறித்த சமூகத்தின் பார்வை யும் அணுகுமுறையும் மாறவேண்டியதும், மேம்பட வேண்டியதும் இன்றியமையாதது.

‘கண்ணுடையர் என்பர் கற்றோர்’ என்று மூன்றே வார்த்தைகளில் ‘பார்வை’க்கு இலக்கணம் வகுத்து விட்டார் வள்ளுவர். ’உள்ளத்து ஊனமே உண்மையில் ஊனம்’ என்று எத்தனையோ பெரியவர்கள் சொல்லிச் சென்றிருக்கிறார்கள். எனவே,உடற்குறையுடையவர்களை ‘படைப்பு வெளி’யில் ஒதுக்கும் போக்கு இனியேனும் மாறவேண்டும். முன்பொரு முறை பார்வைக்குறைபாடு டைய படைப்பாளி, மொழிபெயர்ப்பாளர், பார்க்கும் திறன் கொண்ட படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்கள் சில உதவியாளர்களைக் கொண்ட மொழிபெயர்ப்புப் பட்டறை ஒன்று நடத்தப்பட்டது. இதுபோன்ற கூட்டுமுயற்சிகளும் பரவலாக் கப்படவேண்டும். இன்று கல்லூரிகளில் எத்தனையோ பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாக, ஆங்கிலப் புலமையும், தமிழ்ப்புலமையும், பிற பாடங்களில் சிரந்த தேர்ச்சியுமாக இயங்கிவருகிறார்கள். அவர்களுடைய அறிவாற்றலைப் பயன்படுத்திக்கொள்ள பதிப்பகங்கள் முன்வரவேண்டும்.

சமீபத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கென்று தமிழகஅரசில் ஒரு தனித்துறை ஏற்படுத்தப்பட்டுள்ளதை அறிவோம். இது ஒரு குறிப்பிடத்தக்க முன்முயற்சி. எனில், இன்றளவும் நம்முடைய சட்டமன்றங்கள், நாடாளுமன்றங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகள் வெகுசிலரே இருந்துவந்திருக்கிறார்கள் என்பதும் கவனத்திற்குரியது.

மாற்றுத்திறனாளிகளுக்கென்று தனி படைப்பாக்கப் போட்டிகள் நடத்துவது ஒரு தீர்வாகி விடாது. அதேபோல், கைத்தட்டலுக்காகவும், தனி கவனம் பெறுவதற்காகவும், தரமான, தரமற்ற விருதுகளை ‘வளைத்துப் போடுவதற்காகவும்’ மாற்றுத்திறனாளிகளை முக்கியக் கதாபாத்திரங்களாக்கிக் கதையெழுதுதல் என்றில்லாமல் உண்மையான அக்கறையோடு மாற்றுத்திறனாளிகளை முழுமையான சக மனிதர்களாக பாவித்து எழுதப்படும் படைப்பிலக்கியங்களே நமக்குத் தேவை. அவை பரவலான கவனம் பெறவும், அவை குறித்த விவாதங் களும், பல்குரல் விமர்சனங்களும் திறனாய்வுகளும் முன்வைக்கப்படவும் வழிவகை செய்யப்பட வேண்டும்.

பெண்கள், விளிம்படுத்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் குறித்து எழுதுவதில் படைப்பாளிகள் உணரக்கூடிய ஒரு மனத்தடை, அத்தகைய எழுத்தாக்கங்களுக்கு உரிய பிரிவினரி டமிருந்து எதிர்ப்பு ஏற்படுமோ என்ற கவலை, பயம் காரணமாக உண்டாகக்கூடியது. இத்தகைய எதிர்ப்புக்கு சம்பந்தப்பட்ட பிரதியும் காரணமாகலாம், அல்லது, ஒரு முன்நிபந் தனையோடு அந்தப் பிரதியை அணுகுவதும் காரணமாக வழியுண்டு.  என்றபொதும், தேர்ந்த வாசகருக்கு ஒரு எழுத்தை வாசிக்கும்போதே அதன் மெய்நோக்கமும் மேலோட்டமான நோக்கமும் பிடிபட்டுவிடும். எனவே, மாற்றுத்திறனாளிகளையும் தம் படைப்பில் முழுமை யான கதாபாத்திரங்களாக இடம்பெறச்செய்ய படைப்பாளிகள் முன்வர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் புறமொதுக்கப்படுகிறார்கள் அவர்களுக்கு அடிப்படை வசதிகளும், உரிமைகளும், மனிதமாண்பும்கூட மறுக்கப்படுகிறது என்றுபார்த்தால், உடற்குறையற்ற வேறு எத்தனையோ தனிநபர்களின், குழுவினரின் நிலையும்கூட அதுவே. எனவே, மாற்றுத் திறனாளிகளும் சமூகமே தனக்கு எதிரி என்றவிதமாய் கருதக்கூடாது.

இரு கைகள் தோழமையோடும் நம்பிக்கையோடும் ஒன்றையொன்று நோக்கி நீண்டு சேர்த்துகொண்டால்தான், அது ஆக்கபூர்வமான கரங்குலுக்கல். அதேபோல்தான், பலதரப்பட்ட மனிதர்களையும் உள்ளடக்கியதே சமூகம். எல்லோரும் சரிநிகர் சமானம் என்ற உணர்வு சிறுவயது முதலே நம்மிடம் வேர்கொள்ள வழிவகைகள் முழுமுனைப்போடு மேற்கொள்ளப் பட்டால் அதன் விளைவாய் சமூகத்தின் மனிதவளமும், நலமும் மேம்படும்; உறுதிபெறும். அதற்கான கலந்துரையாடலையும் கருத்துப்பகிர்வையும், விவாதங்களையும், செயல்பாடுக ளையும் வேண்டி விரும்பி இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.