அறிவித்தல்[உரிய நேரத்தில் எமக்குக் கிடைக்காததால் இவ்வறிவித்தல் உரிய நேரத்தில் பிரசுரமாகத்தவறி விட்டது. 'பதிவுகள்' இணைய இதழுக்கு அறிவித்தல்களை அனுப்புவோர் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாக அனுப்பும்படி கேட்டுக்கொள்கின்றோம் உரிய நேரத்தில் இதனைத்தவற விட்டமைக்காக வருந்துகின்றோம். ஒரு பதிவுக்காக இவ்வறிவித்தல் இங்கு பிரசுரமாகின்றது.- பதிவுகள்-]


வவுனியாவில் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம்.

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர், நான்கு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக இலங்கை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோருக்கு கையொப்பமிட்டு அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை இன்று (20.01.2017 வெள்ளிக்கிழமை) அனுப்பி வைத்துள்ளனர். வவுனியாவில் மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக எதிர்வரும் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக குறித்த சங்கத்தின் வவுனியா மாவட்டத்தலைவி திருமதி ஜெயவனிதா காசிப்பிள்ளை அறிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தின் முழுவிவரமும் வருமாறு:

21.01.2017
சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ள எமது இறுதி முடிவை தங்களுக்கு அறியப்படுத்தல் தொடர்பாக,

தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினராகிய நாங்கள், சிறீலங்கா அரச படைகள் மற்றும் அரச துணை ஆயுதகுழுக்களால் எமது உறவுகள் கடத்திச்செல்லப்பட்டமையை கண்கண்ட சாட்சிகளாக உள்ளோம்.

அரசினால் நியமிக்கப்பட்ட பலதரப்பட்ட ஆணைகுழுக்கள், உள்@ர் மற்றும் சர்வதே மனித உரிமை அமைப்புகள், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர், தமிழ் மக்களின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு, சர்வதேச சமுகம் என்று சகல தரப்புகளிடமும் முறையிட்டும், வருடங்கள் பல கடந்த நிலையிலும் எமது உறவினர்கள் விடுவிக்கப்படவில்லை.

இந்தநிலையில், சாத்வீக ரீதியாக சகல கவனவீர்ப்பு மற்றும் அழுத்த போராட்டங்களை நடத்தியும், எமது உறவினர்கள் தொடர்பில் உரிய தீர்வு எமக்கு வழங்கப்படவில்லை. ஆகவே வேறுவழியின்றி பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 23.01.2017 திங்கள்கிழமை அன்று காலை 8.00 மணியிலிருந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுப்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

01.    எமது உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா?
02.    உயிருடன் இருந்தால், அவர்கள் எந்த இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்?
03.    உயிருடன் இல்லாவிட்டால், அவர்களுக்கு என்ன நடந்தது? யாரால்? எப்படி? கொலைசெய்யப்பட்டு, எங்கே புதைக்கப்பட்டுள்ளார்கள்? என்பவற்றை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.
04.    கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள எமது உறவுகள் உயிரோடு இருப்பின், அவர்கள் தத்தமது குடும்பத்தினரோடு இணைந்து வாழ்வதற்கு உடனடியாக வழி விடுவதோடு, சகல அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.

குறித்த எமது கோரிக்கைகள் அனைத்தும் நிபந்தனைகள் ஏதுமின்றி தங்களால் நிறைவேற்றப்படும் வரை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். நாங்கள் உயிர் இழந்தால் அதற்குரிய முழுப்பொறுப்பையும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகியோரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.

இப்படிக்கு,
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தின் தலைமைக்குழு மற்றும் உறுப்பினர்கள்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.