நிகழ்வுகள்: மாபெரும் தமிழினப்படுகொலை நாள் மே 18 அன்று பூரண ஹர்த்தால்! வர்த்தக சங்கங்கள் அறிவிப்பு!

இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நினைவுகூர்ந்து ‘தமிழர் தேசியப்பெருந்துயரை உலகுக்கு பறைசாற்றுவதற்காக மே 18 புதன்கிழமை அன்று வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று வர்த்தக சங்கங்கள் அறிவித்துள்ளன.

இதுதொடர்பில் முல்லைத்தீவு - கிளிநொச்சி மாவட்டங்களின் வர்த்தக சங்கங்கள் கூட்டாக விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சிறீலங்கா அரசின் மாபெரும் தமிழினப்படுகொலைக்;கு நேரடியாக இரையாக்கப்பட்ட இவ்விரு மாவட்டங்களின் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற உணர்வு ரீதியாகவும்,

வன்முறைகள் - படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த எமது உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை எமது தேசியக்கடமையாகக்கொண்டும்,

வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவினர், முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் உரிமைக்கான அமையத்தினர், தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம் (Forum for Searching, Handed, Kidnapped and Forcibly Disappeared Relatives - Tamil Homeland) ஆகியன எம்மிடம் கடிதம் மூலமும் - நேரில் சந்தித்தும் விடுத்த தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலுக்கு உளத்தூய்மையுடன் ஆதரவு தெரிவித்தும், மே 18 புதன்கிழமை அன்று முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும்.

இறுதி யுத்தத்தில் சிறீலங்கா அரசால் படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை நினைவுகூர்ந்தும், எமது உறவுகளின் ஆத்ம இழப்புகளுக்கு சர்வதேச நீதி வேண்டியும், எமது வர்த்தக சங்கங்களின் உறுப்பினர்கள் அனைவரையும் மே 18 அன்று, தத்தமது வர்த்தக நிலையங்களை மூடி, முடிந்தவரை தத்தமது வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக கறுப்புக்கொடிகளை பறக்கவிட்டும், ‘தமிழர் தேசியப்பெருந்துயரை’ உலகுக்கு பறைசாற்றுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

கூடவே, மே 18 புதன்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் மண்ணில், வரலாற்றுத்திருப்பத்தை நிகழ்த்திய இடத்தில், நீதி கேட்கும் பொறிமுறை நினைவேந்தல் எழுச்சி நிகழ்ச்சியாக இடம்பெறவுள்ள ‘முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை ஏழாம் வருட நினைவேந்தல்’ நிகழ்ச்சியில் பெரும் மக்கள் கூட்டமாக கலந்துகொண்டு ‘தமிழ்த்தேசிய இனத்தின் ஒன்றுகூடலுக்கு பலம் சேர்க்குமாறும்,

தவிர்த்துக்கொள்ள முடியாத சூழ்நிலைகள் காரணமாக கலந்துகொள்ள முடியாதவர்கள் தத்தமது இல்லங்களில் நெய்விளக்கேற்றி போரில் உயிர்நீத்த எமது உறவுகளை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். | இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

நன்றி: முள்ளிவாய்க்கால் ஓவியம் -  ஓவியர் புகழேந்தி