சென்ற வாரம் ரொறன்ரோவில் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தின் கவிச்சரம் என்ற இதழ் வெளியிடப்பட்டது.  சிறப்புப் பிரதி பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற, கவிஞர் கழகத்தின் தற்போதைய தலைவர் நண்பர் மாவிலி மைந்தன் சி. சண்முகராஜா அவர்களின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தேன். மலர் வெளியீட்டுக் குழுவில் பெரும்புலவர் முஹமத் ஹன்ஸீர், அருட்கவி தம்பிஐயா ஞானகணேசன், கனி விமலநாதன், இராஜ்மீரா இராசையா, அகணி சுரேஸ், பவானி தர்மகுலசிங்கம் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பொங்கல் விழாவுடன் சேர்த்து நூல் வெளியிடப்பட்டதால் எல்லோருக்கும் பொங்கல் பரிமாறினார்கள். தமிழ் மரபுத் திங்கள் என்பதால் தைமாதம் முழவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா ரொறன்ரோவின் பல இடங்களிலும் கொண்டாடப்பட்டது.

பல கவிஞர்களின் மரபுக் கவிதைகள் இந்த இதழில் இடம் பெற்றிருந்தன. கனடாவில் மரபுக் கவிதையை வளர்த்து எடுக்க வேண்டும் என்ற எண்ணம் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் செயலாளராக நான் இருந்த போது எனக்குள் அந்த ஆர்வம் ஏற்பட்டது. ஆர்வத்தை விதைத்தவர் எனது தொடக்க காலத்தில் தலைவராக இருந்த கவிஞர் கந்தவனமாகும். இதைப்பற்றி நான் அதிபர் பொ. கனகசபாபதி அவர்ளுடன் கதைத்த போது பண்டிதர் ம.செ. அலக்ஸாந்தர் அவர்களும் மரபுக்கவிதையில் சிறந்தவர் என்ற பரிந்துரையைத் தந்தார். எனது தேடலில் வள்ளிநாயகி இராமலிங்கத்தின் பெயர் இடம் பெற்றாலும் போக்குவரத்து வசதியீனம் காரணமாக அதைத் தவிர்த்திருந்தேன். எனவே ஒரு நாள் அதிபரின் வீட்டில சந்திப்பு ஒன்றை ஏற்படுத்தினேன். அந்த சந்திப்பு பற்றி கவிச்சரம் என்ற இதழில் அவர் அதைக் குறிப்பிட்டிருப்பதைப் பார்த்த போது இதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. இதோ கவிச்சரம் இதழில் உள்ள பண்டிதர் ம. செ. அலெக்ஸாந்தரின் குறிப்பில் இருந்து:

அந்த வகுப்பு இங்குள்ள கல்விமான்களும், தமிழார்வலர்களும், கவிஞர்களும், புதுக்கவிதைக் கவிஞர்களும் சேர்ந்த வகுப்பாக அமையவேண்டுமென மகாஜனக்கல்லூரி முன்னைநாள் அதிபர் பொன். கனகசபாபதி அவர்களின் வீட்டிலே அப்போதைய கனடா தமிழ் எழுத்தாளர் இணையச் செயலாளர் குரு அரவிந்தன் (2004) என்னைக் கேட்டார். அப்போதைய தலைவர் திருவாளர் சின்னையா சிவநேசன், கல்வியாளர் அ.பொ. செல்லையா, கவிஞர் இராசேந்திரம், திரு. சிவபாலு ஆசிரியர், பகிரதன், சண்முகராஜா போன்றோரும் கவிஞர் கந்தவனத்தையும், என்னையும் அழைத்துக் கேட்டதற்கிணங்க ஸ்காபுரோ சிவிக் சென்ரறில் கலந்துரையாடல் வகுப்பாகத் தொடங்கியது.’

தொடக்கத்தில் 'சிவிக் சென்ர'றிலும் அதன் பின் செந்தியின் உதவியுடன் அவரது நண்பர் கரு கந்தையாவின் கெனடி வீதியில் உள்ள ஸ்தாபனத்திலும் இந்த ஆறுமாதப் பயிற்சிப்பட்டறை வகுப்புகள் தொடர்ந்தன. 2004 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கம் 2005 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையும் நடந்த இந்த முதற் பயிற்சிப் பட்டறையில்  தலைவர் சின்னையா சிவநேசன், அ.பொ. செல்லையா, செயலாளர் குரு அரவிந்தன், அனலை இராசேந்திரம், சிவபாலு மாஸ்டர், சி. சண்முகராஜா, பகீரதன், இராஜலிங்கம், பவானி தர்மகுலசிங்கம், இராஜ்மீரா விமலநாதன், தமிழ், புஸ்பா கிறிஸ்டி ஆகிய 12 மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர். இதில் புஸ்பா கிறிஸ்டியும், தமிழும் போக்குவரத்து வசதியீனம் காரணமாகத் தொடர்ந்து வரமுடியாமற் போய்விட்டது. தொடர்ந்து பங்கு பற்றிய ஏனையோருக்கு பயிற்சிப் பட்டறை முடிவில் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் 26-03-2005 ஆண்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. 2005 ஜனவரி மாதம் இரண்டாவது வாரம் நாங்கள் எழுதிய மரபுக்கவிதை 2004 மார்கழியில் தாய்மண்ணில் பேரழிவை ஏற்படுத்திய ஆழிப்பேரலையைக் கருப் பொருளாகக் கொண்டதாக இருந்தது. சொல்லொணாத் துயரத்தை மரபுக்கவிதையில் வடித்திருந்ததை இன்றும் மறக்க முடியாது.

புலம் பெயர்ந்த மண்ணிலும் மரபுக் கவிதையில் புலமை மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதையும், அடுத்த தலை முறைக்கும் இதைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடும் இப்பயிற்சிப் பட்டறை ஆரம்பிக்கப்பட்டதால், இன்று கனடா தமிழ்க் கவிஞர் கழகத்தின் கவிச்சரத்தில் பலரின் கவிதைகள் வெளி வந்திருப்பதைப் பார்க்கும் போது எங்கள் முயற்சி நற்பலனைக் கொடுத்திருக்கிறது என்பது புலனாகின்றது. தொடர்ந்து நடந்த பயிற்சிப் பட்டறைகளில் பயின்றவர்களும் ஒன்று சேர்ந்து 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கனடாத் தமிழ்க் கவிஞர் கழகத்தை உருவாக்கியிருந்தார்கள். அதேசமயம் சமீபத்தில் நடந்த எனது 25 வருடகால கனடிய இலக்கிய சேவையைப் பாராட்டிக் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் வெளி வந்த ‘கனடா தமிழர் இலக்கியம் - குரு அரவிந்தனின் பங்களிப்பு’ என்ற நூலில் இடம் பெற்ற வாழ்த்துச் செய்திகளில் அனேகமானவை மரபுக்கவிதையில் எழுதப் பட்டிருந்ததை எண்ணி மகிழ்ச்சியாகவும் இருக்கின்றது. நினைவு நல்லது வேண்டும், மண் பயனுற வேண்டும்!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.