நிகழ்வுகள்!இலங்கை - இந்தியா - பாக்கிஸ்தான் - பங்களாதேஷ் - நேபாளம் - பூட்டான் - மாலைதீவு - ஆப்கானிஸ்தான் முதலான எட்டு நாடுகளின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கும் SAPAC (South Asian Public Affairs) என்னும் தென்னாசிய விவகாரங்களுக்hகன அமைப்பு கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மெல்பனில் தொடங்கியது.

பல்லின கலாசார நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் இதுபோன்ற பல தேசிய அமைப்புகள் இயங்குகின்றன. பொருளாதாரம் - விளையாட்டு - வர்த்தகம் - அயலுறவு - ஒருமைப்பாடு - கல்வி - வர்த்தகம் - கலாசாரம் முதலான துறைகளில் மேற்குறித்த எட்டு தென்னாசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் பரஸ்பரம் கலந்துரையாடுவதற்கும் ஒன்றிணைந்து கருத்தரங்கு தகவல் அமர்வுகள் நடத்துவதற்காகவும் தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. இந்நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு குடியேறியிருப்பவர்கள் மத்தியில் இருக்கும் கலை இலக்கிய ஊடகத்துறை ஈடுபாடு மிக்கவர்களுக்காக முதல்தடவையாக ஒன்றுகூடலை நடத்த முன்வந்துள்ளது. 

அவுஸ்திரேலியாவில் எதுவித இலாபநோக்கமுமமற்ற அமைப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள தென்னாசிய விவகாரங்களுக்கான இந்த அமைப்பு, எதிர்வரும் 27 ஆம் திகதி (27-02-2016) சனிக்கிழமை மெல்பனில்; இலக்கிய நிகழ்ச்சியை ஒழுங்குசெய்துள்ளது.

மெல்பனில்  -  Stirling theological college   மண்டபத்தில் (40-60 Jackson  Road,  Mulgrave 3150 ) மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சி, நூல்களின் கண்காட்சியுடன் தொடங்கி கவிதா நிகழ்வுடன் இரவு 9.00 மணிக்கு  நிறைவுபெறும். குறிப்பிட்ட எட்டுநாடுகளுக்கும் கலை இலக்கிய கவிதைப்பாரம்பரியம் இருக்கிறது. தமிழ் மக்கள் ஏனைய நாடுகளின் கவிதை முயற்சிகளை அறிந்துகொள்வதற்கும் அந்த நாடுகளைச்சேர்ந்தவர்கள் தமிழர்களின் கவிபுனையும் ஆற்றலை அறிந்துகொள்வதற்கும் ஏற்றவாறு நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்திந்திய மொழிக்கவிஞர்களுடன் பாக்கிஸ்தான் - பங்களாதேஷ் - நேபாளம் - பூட்டான் - மாலைதீவு - ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கையைச்சேர்ந்த தமிழ் சிங்கள கவிஞர்களும் தமது கவியாற்றலை ஓரிடத்தில் அறிமுகப்படுத்தும் வித்தியாசமான இலக்கியக் களமாக இந்தக்கவிதா நிகழ்வு நடைபெறவுள்ளது.

அத்துடன் இந்நாடுகளைச்சேர்ந்தவர்கள் அவுஸ்திரேலியாவில் குடியேறியதன்பின்னர் வெளியிட்ட நூல்களின் கண்காட்சியும் இடம்பெறவுள்ளமையால் - பரஸ்பரம் தென்னாசிய நாட்டவர் மத்தியில் கலை இலக்கிய ரீதியில் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு இந்தச் சங்கமம் வழிகோலும். கலை இலக்கிய ஆர்வலர்களையும் கவிஞர்களையும் SAPAC அமைப்பு அன்புடன் அழைக்கிறது. அனுமதி இலவசம்.