Latha Ramakrishnan 

1
யார் எத்தனை கேலி செய்தாலென்ன…? ஜோல்னாப் பையின் அழகே தனி தான்!
என்னவொரு உறுதி! என்னவொரு நளினம்!
எத்தனை புத்தகங்களை வேண்டுமானாலும் அதில்அடுக்கிவிட முடியும்;  அடைத்துவிட முடியும்.
தோளில் மாட்டித் தூக்கிசென்றால் பாரந் தாங்கலாகாமல்
கையுங் கழுத்தும் இற்றுவிழக் கூடுமே தவிர
‘பை’யின் பிடி யறுந்துபோகாது.
‘ஆள் பாதி; ஜோல்னாப் பை மீதி’ என்பதும்
அர்த்தமுள்ள பொன்மொழிதான்!

2
ஆனால் ஒன்று _ சமீபகாலமாக ஜோல்னாப் பைக்குள்
புத்தகங்கள் குறைந்து தராசுத்தட்டுகள் நிறையவாகிவருகின்றன.
விதவிதமான அளவுகளில் துலாக்கோல்கள் இருக்கமுடியும்.
ஆனால், எடைக்கற்கள் கூடவா?
அதாவது, ஒரே எடையளவை ஒவ்வொருவருக்கும், இல்லை, வேண்டும்போதெல்லாம், வெவ்வேறு எடையாக்கிக் காட்டுபவை!

 

3
தராசுத்தட்டின் அடியில் புளியை அழுத்தி ஒட்டவைத்தல் _
தாங்கிப்பிடிக்கும்போது சற்றே ஒரு புறமாய் சரியச் செய்தல்
இன்னபிற உத்திகள் பத்தாம்பசலித்தனமானவை.
இப்பொதெல்லாம் கைகளே துலாக்கோல்களாக
ஒரு கை காட்டும் எடை மறு கை மாற்ற
முடையில்லா கடைவீதிகள்
நீண்டகன்று நாற்புறமும் விரிந்தேகத் தடையில்லை.

4
ஆயிரமாயிரம் கோப்புகள் ஒரு கணிணிக்குள் அடங்கும் காலமிது.
அந்தக்கால எடைக்கற்கள் யாருக்கு வேண்டும்?
இன்று வரிகளிலும், வார்த்தைகளிலும், வாக்கியங்களிலும் _
அட, ஒற்றைச் சொல்லிலும் கூட உண்டு _
துலாக்கோல்களும் எடைக்கற்களும்.
அதேசமயம், வண்டிவண்டியாய்ப் பக்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல!

5
‘நலம், நலம் அறிய ஆவல்’ போய்
‘நாசமாய்ப் போவாய்’ என்றே மலரும் திருவாயின்
சொத்தைப் பற்களும் கூடத் தம்மை
தராசெனக் கற்பிதம் செய்துகொள்ளும்.
இதழ்க்கடையோர இளக்கார முறுவலில் வெளிப்படும்
துருப்பிடித்த தராசுத்தட்டுகள்.

6
ஆளுக்கொரு துலாக்கோலைக் 
கக்கத்திலிடுக்கிக்கொண்டுபோகும் சிலர்_
கையில் பிடித்தாட்டிக்கொண்டேகும் சிலர்_
ஆளுக்குத் தக்கபடி எடையைக் கூட்டிக்குறைக்கும் சிலர்_
‘கடவுள் நான்; அவர் செய்வதும் இதுதான்’ என்று வக்கணை பேசி
தம் துக்கிரித்தனத்திற்கு நியாயம் சேர்க்கும் சிலர்_
கத்தியைத் துலாக்கோலாக்கும் சிலர்_
கத்திக் கத்தித் தம் குரலையே தராசாக்கிக்கொள்ளும் சிலர்_
கழிவிரக்கத்தால் தம் எடை கூட்டிக்கொள்ளும் சிலர்_
கல்பகால சோகங்களுக்கு ஏகபோக உரிமைபாராட்டி
தம் துலாக்கோலை கவனமாய் ஒரு பக்கமாய் சாய்த்தபடியே சிலர்….
சுருங்கச் சொன்னால், இந்நாள்
இல்லாத கையிலு மிருக்கும் தராசுகள் சில பல!

7
அதோ, தனித்தன்மை வாய்ந்ததாய் தன்னைத் தானே அன்றாடம்
துண்டுபோட்டுத் தாண்டாத குறையாய் கொண்டாடிக்கொள்ளுகின்ற
கடல் தாண்டிப் போயிருக்கும் தராசின் தட்டொன்றில்
மனிதர்கள் தூசின் மொந்தைகளாக்கப்பட்டு
மற்றதில் அத்தனை எடைக்கற்களும் அதிகாரத்தின் குறியீடாய்
பிடித்துக்கொண்டிருக்கிற தொரு மண்ணாந்தைக் கை.

8
எத்தனையெத்தனை வடிவங்களில் எடைக்கற்கள்!
மண்டையோடுகள்; ரத்தம் சொட்டும் மனிதத் தலைகள்;
ஆள்காட்டி விரலும், கட்டைவிரலும் சேரும் நுனியில்
‘இங்க்’, ‘பால் பாயிண்ட்’, ‘ஜெல்’ பேனாக்கள்.
பல்லெல்லாம் வெளியே தெரியும் வாய்கள்.
கனியிருப்பக் கவர்ந்த காய்கள்.
முனிப்பேய்கள்; பனிப்போர்கள்
நார்நாராய்க் கிழிக்கக் காத்திருக்கும் கூர்நகங்கள்
காரிருளார்ந்த அகங்கள், கனம் பிடித்த சிரசுகள்,
பிறவேறும் இதுபோலும்….

9
எத்தனையெத்தனை வண்ணங்களில் துலாக்கோல்கள்1
நிறம் மங்கியவை; நிறம் மாறாதவை.
நிறமற்ற நீரனைய தூய்மையாகசும் தூசிகளோடு,
கொள்கலத்திற்கேற்ப எடைகாட்டக் கூடியவை.
ஏட்டில் மட்டுமே இடம்பெற்றிருப்பவை.
எந்நேரமும் ஊசலாடிக்கொண்டிருப்பவை.
கச்சிதமாய் எடையைக் கூட்டிக்குறைத்து
வருமானம் பெருக்கி வெற்றிவாகைப்
பிச்சிப்பூ அணிந்திருப்பவை.
பச்சோந்தி நிறத்தில் இறுமாந்திருப்பவை….

10
எத்தனை சிரமங்களுக்கிடையில் தராசுகள் தயாராகின்றன தெரியுமா!
நைச்சியமா யொரு ராஜாளிப்பறவையைக் காக்காய் பிடித்து
வளிமண்டலத்தில் நிரம்பியிருக்கும் கரியமிலவாயுவை
கடத்திக்கொண்டுவந்து சிலர் உருவாக்க,
வேறு சிலர் நீமூழ்கிக்கப்பலுக்குள் பதுங்கிக்கொண்டு
கடலடிக்கு ‘விர்ரெ’ன்று சென்று
திமிங்கலம் சுறாமீன்களூடாய் சீறிப்பாய்ந்து
பவழப்பாறைகளுக்கப்பாலோ எங்கோவான
எழவெடுத்த பள்ளத்திலிருந்து
அள்ளிக் கொண்டு வருகிறார்கள்.

11
மூச்சை யடக்கித் தன் உளச்சான்றைக் கொன்று முடித்து
ஒரே வீச்சில் தராசை வென்றெடுப்பது எத்தனை கடினம் தெரியுமா?
கண்டு விண்டிட வியலா வேதனையில்
காற்றிலொரு துலாக்கோலைக் கட்டமைத்து
குமிழ் எடைக்கற்களால்
நம் வாழ்வின் சாரங்களையும் பாரங்களையும் நாளும்
அளக்கும் ஆதிபகவன் கைத் துலாக்கோல் கலகலத்து
இற்றுவீழ்ந்துவிடுவது முண்டு!

12
துலாக்கோலும் தராசும் ஒன்றுதானா…? முதலில் அது தெரியுமா…?
என்று பேச்சை மாற்றுகிறாய்.
இது மொழிப்பிரச்னை யல்ல; வழிப்பிரச்னை. புரிந்துகொள்ளேன்.
ஒருவகையில் சந்து வீதி சாலை எல்லாம் ஒன்று தான்; எனில், தனித்தனியும் கூட.
ஆனால் நீயோ துலாக்கோல்களோடே போய்க்கொண்டிருக்கிறாய்
வழியெங்கும் எடைக்கற்களைக் குறிபார்த்து வீசியெறிந்தபடி.
சேருமிடம் வந்துவிட்டால் எதுவும் சரிதான் என்பாய்.
செல்வழியெங்குமுள சுவடுகளைக் காலக்கண்கள் அளவெடுத்தபடியே…

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R