- 'பதிவுகளி'ன் ஆரம்ப கால இதழ்களில்  வெளிவந்த ஆக்கங்கள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள்பிரசுரம் செய்யப்படும். -- ஆசிரியர் -

'பதிவுகளி'ல்  அன்று: 'பறத்தல் அதன் சுதந்திரம்' -  இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப்  பெண்  கவிதைகளின் தொகுப்பு ஓர் அறிமுகம்! தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துக்கள் அண்மைக்காலங்களில் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் 1986 இல் வெளிவந்த ஈழத்துப் பெண் கவிஞர்களின் தொகுப்பான 'சொல்லாதசேதிகள்'  என்னும் கவிதைப் தொகுப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். அதேபோல் புலம்பெயர் பெண்களால் வெளியிடப்பட்ட 'மறையாத  மறுபாதியும்'  இதற்குள் அடங்கும். 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் காவ்யா பதிப்பகத்தினால் வெளியிடப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பெண் கவிதைகள் ’’பறத்தல் அதன் சுதந்திரம்’’ என்னும் கவிதைத்தொகுப்பு வெளிவந்துள்ளது. இந்நூலை அண்மையில் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.  இத் தொகுப்பில் 52 பெண் கவிஞர்களின் கவிதைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இக் கவிதைத் தொகுப்பை மாலதி மைத்ரியின் உதவியுடன் க்ருஷாங்கினி தொகுத்துள்ளார். இதற்கு வ.கீதா முன்னுரை எழுதியுள்ளார்.  அத்துடன் 11 பெண் ஓவியர்கள் தம் ஓவியங்களால் இத்தொகுப்புக்கு கனம் சேர்த்துள்ளனர். பெண்களது சுயாதீனம், தனித்துவம், சுய இயல்பு, அவர்களின் அடையாளம் மற்றும் கலாச்சாரம், பாலியல், குடும்பம் ஆகியவை பற்றிய சிந்தனைகள் இன்று கட்டுரைகள், கவிதைகள் (ஹைக்கூ உட்பட),  விமர்சனங்கள் நாடகங்கள், ஒவியங்கள் என தமிழ்ச் சூழலில் இன்று பெண்களின் எழுத்துத்துறை வளர்ச்சிப் பாதையில் செல்வதை நாம் காண்கின்றோம். அந்தவகையில் இத் தொகுப்பில் வெளிவந்த அனைத்துக் கவிதைகளும் சஞ்சிகைகளிலோ அல்லது பத்திரிகைகளிலோ, தொகுப்புகளாகவோ வெளி வந்துள்ளன. அவையெல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தொகுப்பாக ”பறத்தல் அதன் சுதந்திரம்” வெளிவந்துள்ளது. 

”தனிப் பெண் அடையாளம் விரும்பாத சில பெண் கவிஞர்கள் தங்கள் கவிதைகளை இத்தொகுப்பில் சேர்க்க விருப்பம் தெரிவிக்கவில்லை. அவர்களின் கவிதைகள் இதில் இடம்பெறாது போனது மனதிற்குள் சற்று வருத்தம் தான். ஈழப் பெண்கவிஞர்கள் பற்றிய குறிப்புகளுக்காக ஈழ மற்றும் புலம்பெயர்ந்த நண்பர்களை பலமுறை தொடர்பு கொண்டும் சா¢யான தகவல்கள் பெற முடியவில்லை. அதனால் பல கவிஞர்களின் குறிப்புகள் விடுபட்டுள்ளன” என தொகுப்பாளர்கள்  கூறியுள்ளனர். 

இளவயதிலேயே தற்கொலை செய்துகொண்ட சிவரமணி, இயக்கத்தால் கடத்தி கொல்லப்பட்ட செல்வி உட்பட ஈழத்து மற்றும் புலம்பெயர் கவிஞர்களான ஆழியாள், ஊர்வசி, ரேவதி, ஒளவை, சங்கரி (சித்திரலேகா), சன்மார்க்கா, சுமதிரூபன், கலைவாணி, றஞ்சினி (பிராங்போர்ட்) , ¦ஐபா, துர்கா போன்றோரும் இந்திய பெண்கவிஞர்களில் அமரந்தா, மாலதிமைத்ரி, சல்மா, குட்டிரேவதி, க்ருஷாங்கினி, கனிமொழி, மொனிக்கா இளம்பிறை, வெண்ணிலா போன்ற இன்னும் பலரும் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளனர். இந்திய கவிஞர்களின் கவிதைகள் பலவற்றை நான் இத்தொகுப்பிலேயே வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.  ஆனால் மாலதி மைத்ரி, சல்மா, குட்டிரேவதி, கனிமொழி, அமரந்தா ஆகியோரின் கவிதைகள் ஏற்கனவே சஞ்சிகைகளிலும் தொகுப்புகளாகவும்  வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண் உடல் மீதான மோகத்தை அதிகமாக வளர்த்தெடுக்கும் இச்சமூகம் பெண்ணின் இருப்பை, சுயதனி இருப்பை வெறுக்கும் மனோநிலையை ஸ்தூலமான அடித்தளமாக வைத்துக்கொண்டு இயங்கி வருகிறது. இந்த வெறுப்பு எல்லாத் தளங்களிலும் ஆழ்மனநிலையில் சுரந்து உடல் மனம் இரண்டையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. இதுவே பெண்களின் எழுத்தின் மீதும் வெறுப்பான பார்வையை உருவாக்குகிறது. வெறுப்பு வேறு தளங்களில் வேறு வார்த்தைகளில் வெளிப்படுகிறது. அதன் மாற்று வடிவங்களாக தரம், வடிவம், அழகியல் போன்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதன்மூலம் பெண்ணின் எழுத்தியக்கத்தைக் கட்டுப்படுத்தவும் அதற்கான இடத்தை மறுத்தும் ஊடகங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தன் இருப்பு சார்ந்த கேள்விகளுடனும் முரண்களுடனும் இயங்கும் பெண், தன்னை முற்றிலுமாக இச் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ள முடியாமல், தன்னை அமைப்பின் குரலாகவும் அதே சமயம் அதற்கு எதிரான குரலாகவும் வைத்துக் கொள்ள நேர்கிறது. இங்கு கவிதைகள் அழுகையாகவும், கதறலாகவும், ஒப்பாரியாகவும், கூக்குரலாகவும், காதலாகவும், புலம்பலாகவும், வலியாகவும்,  ஆற்றாமையாகவும், துயரமாகவும், ஏமாற்றமாகவும், கொண்டாட்டமாகவும், கனவாகவும் தொகுப்பாகியுள்ளன. சமீபகாலமாக பெண் கவிஞர்களை நோக்கி வரலாற்று மறுப்பு பார்வைகள் ஆண் கவிஞர்களால் முன்வைக்கப்படுகின்றன. இம் மறுப்புப் பார்வைகளை வைப்பவர்களுக்கு வரலாறும் தெரியவில்லை கவிதையும் தெரியவில்லை பெண்ணையும் தெரியவில்லை என்கிறார் மாலதிமைத்ரி.

ஓளவையார் பற்றி இப்படி குறிப்பிடுகிறார். ஒளவை என்ற உருவகத்தின் அரசியல் சங்க காலத்தில் மட்டுமல்ல இந்த பின்நவீன காலத்திற்கும் பொருந்தும். ’வரப்புயர நீர் உயரும்’ என்ற அடியும் தமிழின் இப்பாடலின் மூலம் உலகின் முதல் சோசலிச பெண் கவியாகவும் பெண் அரசியல் கவியாகவும் ஒளவையாரே தெரிகிறார். தமிழ்க் கவிதை வரலாற்றின் மூன்று மாபெரும் உருவகங்களாக பெண்களே இருக்கிறார்கள். அவர்கள் ஒளவையார், காரைக்கால் அம்மையார், ஆண்டாள்  என தனது முன்னுரையில் மாலதிமைத்ரி கூறுகிறார். 

ஒளவையாரின் எழுத்துத் திறனை எளிதாக மதிப்பிட்டு விடமுடியாதுதான். ஆனால் ஒளவையார் தான் வாழ்ந்த காலத்துப் பெண்களின் உண்மையான நிலைமையைப் புறக்கணித்ததாக விமர்சிக்கப்படுகிறார். பெரும்பாலான புலவர்களைப் போல அவரும் பெண்களுக்கு முத்திரை சேர்த்துள்ளார். வஞ்சகமாகப் பேசும் பெண், மென்மையான நற்பண்புகள் அமைந்த பெண், காமமூட்டும் மைதீட்டிய பெண், கணவன் சொல்லைத் தட்டாத பெண1 கற்பைக் காப்பாற்றிக் கொள்ளும் பெண், கணவனுக்குத் தொண்டுசெய்யும் பெண் என்று  பெண்களை ஒளவையார் கூறியுள்ளார்.  அதே போல் ஒளவையார் தன்னுடைய பாடல்களில் பெண்களைச் சித்திரிக்கும்போது,

அவரின் ஆத்திசூடியில் 
தையல் சொற்கேளேல்
  ஆசூ 63

வஞ்சகமாகப் பேசும் பெண்ணின் சொற்கேட்டு நடவாதே.
மெல்லின் வல்லாள் தோள் சேர்
  ஆசூ 93

மென்மையான நற்பண்புகள் அமைந்தவளை மனையாளகப் பெற்று இல்லறம் நடத்து
மைவிழியார் மனையகல
ஆசூ 96

காமகூட்டும் மை தீட்டிய விழிகளுடைய பெண்களது வீட்டை நெருங்காதே. 
என்கிறார்.

கொன்றைவேந்தனில்,  கற்பு எனப்படுவது சொற்திறம்பாம்மை  கொ.வே.14

கணவனின் சொல்லைத்தட்டாமல் நடப்பதே கற்பு ஆகும் 

துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு கொ.வே 41

கணவனுக்கு செய்யவேண்டியவற்றை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இல்லாத மனைவி மடியிலே கட்டிக் கொண்ட நெருப்புக்குச்சமமாவாள் (நன்றி சக்தி)

இப்படி ஆத்திசூடி, கொன்றை வேந்தன்,  நல்வழி வெண்பாவிலும் ஒளவையார் பெண்களை வியாக்கியானப்படுத்துகிறார். மனது பற்றியும் துறவு, தானம், தர்மம், கல்வி என்று பல நல்ல விடயங்களை கூறும் ஒளவையார் பெண்களை அவர் எவ்வாறு தனது பாடல்களில் சித்தா¢த்துள்ளார் என்று நோக்கும் போது பல கேள்விகள் எழும்புகின்றன. ஏனினும் இதை விட்டுவிடுவோம் ஏனெனில் இது இன்னுமொரு தலையங்கத்தின் கீழ் விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். மாலதிமைத்ரியின்  ’ஒளவையிலிருந்து ஒளவை’ வரை என்ற தலையங்கம் இதை எழுதத் தூண்டியது. 

இத் தொகுப்பில் இடம் பெற்ற சில கவிதைகள்

என் நாக்கு 
எனக்காக மட்டும்
பேசமுடியாதபடி
கட்டுப்பட்டுள்ளதால்
ஏன் அலறல்கள்
ஏனக்குள்ளேயே
அடங்கிப்போகின்றன.

என்று தனது 'மெளனக்கூடு'  எனும் கவிதையில் விளிக்கறார் இளம்பிறை.

கல்பனாவின் 'பறத்தல் அதன் சுதந்திரம்' என்ற கவிதை,

சிறகை 
அசைத்துப் பார்த்து
பறத்தலுக்கான
கடைசி முயற்சியாய்
விட்டுவிட்டேன்
அதே பூவருகே 

என அற்புதமாகச் சொல்கிறது.

பூட்டின தனிமையைத் 
தினமும்
தாழ் திறக்கிறேன்
இருளின் தனிமைக்கு 
மரணத்தின் சாயல்
முன்னெப்போதுமில்லாத
குளிர்மை நடுக்க
துக்கம் பிதுங்கின விழிகளோடு
ஏன் பொழுதுகள்-
பூமியுள் புதைந்தழ வேண்டும்
ஏன்னை மரணியுங்கள் 

என்று கதறுகிறார் பிருந்தா,

”மேலும் சில மரணக்குறிப்புகள்” என்ற கவிதையில் பிரியத்தின் இரண்டு கடிதங்கள் என்ற கவிதை உணர்வுகளில் ஆழமாக ஊடுருவுகின்றன இப்படி,

இறுகியிருக்கும் மெளனங்களில் துன்ச்ச நாவுகள்
துழாவி சுவைக்கின்றன அந்தரங்கத்தின்
உட்சுவர்கள் மீது
கசிந்து தம்மின் துயரங்களையோ
ஆட்கொள்ளவியலாத ஆன்மாவின்
து¡ய்மையையோ அறிவதில்லை
கோணலாகிப் போன
உறவின் நேர்கோட்டுப் பாதை
விதியென்பதை விட்டுக் கொடுக்காததை
எவரிடமோ பெறும் மர்ம உறவு,
சந்தேகத்தின் சூல்  ஒன்றை உடலுக்குள்
நிச்சயமாய் ஏற்றுக் கொள்ளவியலாது.
போன திசைகளின் சுவடுகளை
நினைத்துப் பார்க்கிறேன்.
வெறிகொண்ட உடற் கசிவுகளைத்
துடைத்துக் கொள்ள ஒரு கைக்குட்டை
போதுமென்கிறாய்
அந்தரங்க சுத்தியின் மீது ஆணையிட
தயாரில்லை அருவருப்பான சத்தியத்தின் 
மீதும் கரிச்சாயம் பூசி விடுகிறேன்.
ஏங்கோ நடுநிசியில் எல்லைகளைக்
கடந்து பெயரறியாத ஒருத்தியின்
உடலைச் சுவைக்கின்றாய்
நான்கு டாலருக்கு 

இப்படி பல பெண்கவிஞர்களின் கவிதைகள் இத் தொகுப்பில் ஆழ வேரோடி விருட்சமாகியிருக்கிறது.

உண்மையிலேயே ஒரு நூலை அல்லது தொகுப்பு ஒன்றை வெளியிடும் போது அதில் ஏற்படும் சிக்கல்கள் பொருளாதாரப் பிரச்சினைகள் ஆக்கங்களை சேகரிப்பதில் உள்ள தடங்கல்கள் என பலவிதமான பிரச்சினைகள், தொழில்நுட்பக் குறைபாடுகள்  இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் நாம் ஒரு தொகுப்பை வெளியிடும் போது அதில் தவறுகள் ஏற்படாமல் மிகக் கவனமாக செயற்பட வேண்டியே உள்ளது. கட்டுரைகளில் வசனங்கள் விடுபடுவது அல்லது எழுத்துப்பிழை நேருவது சிலவேளைகளில் நிகழ்த்தும் அனர்த்தத்தைவிட சொல்லிறுக்கங்கள் கொண்ட கவிதைகளில் இது அதிகமாகவே பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இத் தொகுப்பில்  இடம்பெற்றுள்ள கவிஞர்களான ஆழியாள், செல்வி, சிவரமணி, சங்கரி, ஊர்வசி, ஒளவை ஆகியோரின் கவிதைகளில் வசனங்கள் விடுபட்டும் எழுத்துப்பிழைகளும் உள்ளன. இது கவலைக்குரிய விடயமாகும். இக் குறைபாட்டை சுட்டிக்காட்டுவதென்பது தொகுப்பாளர்களின் உழைப்பை குறைத்து மதிப்பிடுவது என்பதாகாது. அதேபோல் கவிதைகளின் பிரசவமென்பதும் இலகுவில் நடப்பதில்லை என்ற புரிதலோடு நாம் கவிஞர்களின் தரப்பில் நின்று சிந்திக்கவேண்டியுமுள்ளது. பலவேறு காரணங்களால் கடின உழைப்பையும்மீறி நிகழ்ந்துவிடும் இவ்வகை தவறுகள் தவிர்க்கப்ட்டே ஆக வேண்டும் என்பதில் முரண்பட ஏதுமில்லை.

உதாரணமாக, சிவரமணியின் கவிதை ஒன்றில் 

இனியும் என்ன 
தூக்கியெறியப்பட முடியாத கேள்வியாய்...  என்ற வரி இத் தொகுப்பில் துக்கி எறியப்படாத கேள்விகளாய் என வந்துள்ளது.  அதேபோல் வையகத்தை வெற்றி கொள்ள என்ற சிவரமணியின் கவிதையை பிரசுரித்துவிட்டு எழுதியவர் சன்மார்க்கா என்றும், இவர் ஈழப் பெண் கவிஞர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (சிவரமணி,செல்வி கவிதைகளின் தொகுப்பு தாமரைச் செல்வி பதிப்பகத்தினால் 1996ம் ஆண்டு வெளிடப்பட்டது. அப் புத்தகத்தில் சிவரமணியின் ”வையகத்தை வெற்றி கொள்ள” கவிதை பக்கம் 52 இல் இடம்பெற்றுள்ளது.)

அதே போல் ஆழியாளின் கவிதையான மன்னம்பேரிகள் என்ற கவிதையின் தலைப்பில் மன்ன போரிகள் என்று அச்சாகியுள்ளது. 

சங்கரியின் கவிதையில் வசனங்களே விடுபட்டுள்ளன. 

பாட்டின் தாளத்தில்
விண்மீன் அசையும்
மேகங்கள் நெட்டுயிர்க்கும்
ககனமெல்லாம்
இசை நிறையும்

என இத் தொகுப்பில் அச்சாகியுள்ளது

ஆனால் 
பாட்டின் தாளத்தில் 
விண்மீன் அசையும்
மேகங்கள் நடனமிடும்
காற்று நெட்டுயிர்க்கும்
கானமெல்லாம்
இசை நிறையும்  
  

என வரவேண்டும். 

இப்படி சில கவிதைகளில்  எழுத்துப் பிழைகளும் வசனங்கள் விடுபட்டும் பெயர்கள் மாறியும் உள்ளன.  மற்றபடி இதைத் தொகுத்த தோழிகளின் உழைப்பும் பெண்ணியத்தின் பாலான அவர்களின் அக்கறையும் செயற்பாடும் பாராட்டத்க்கத்தக்கவை. பெண்ணிய எழுத்துக்களின் ஒரு பதிவாக 'பறத்தல் அதன் சுதந்திரம்' தொகுப்பு வெளிவந்துள்ளது எனலாம். இந்நு¡லின் தொகுப்பாளர்: க்ருசாங்கினி. 98 சிட்லபாக்கம் 2வது பிரதான சாலை. தாம்பரம் சானடோரியம் கிழக்கு, சென்னை 47

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

நன்றி: பதிவுகள் மார்ச் 2004 இதழ் 51


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R