முல்லை அமுதன் , 'காற்றுவெளி' ஆசிரியர்இன முரண்பாடுகளின் அறுவடையாக மக்கள் புலபெயர்நாடுகளில் வாழும் நிலை ஏற்பட தங்களின் இலக்கியம் மீதான தாகத்தை படைப்பிலக்கியம் மூலம் வெளிபடுத்தினர்.அவ் விலக்கியத்தை பத்திரிகை,வானொலி,இணையம் என பல்வகை ஊடகங்களின் மூலம் வாசகர் பார்வைக்கு வைக்கையில் பலரின் கவனிப்புக்கும் உள்ளாகினர்.அவர்கள் பின்னர் தனித்தும்,கூட்டாகவும் நூல்களை வெளியிட்டு இன்னும் பலம் பெற்றனர்.நண்பர்களின் தொடர்பு,பிற இலக்கியங்களில் தேர்ச்சி என்பன அவர்களை இன்னும் இலக்கியத்தினை ஆழமாக சிந்திக்கவும் உதவின.. இந் நிலையில் நவீன தொழில்நுட்ப சாதன பயில்முறை இலகுவாகவே கைகளுக்குள் வர எழுத்து திருத்தங்களுடன் வரவும்,பதிப்பின் இலகுத்தன்மையும் சாத்தியமாகின. பலர் படைப்பாளர்களாக அடையாளப்படுத்தி நின்றார்கள். ஒரு புறம் எழுத்தில் ஆழமாக சிந்தித்து எழுதியவர்களிடையேயும் சிலர் வசதி வாய்ப்பு கிடைத்த மாத்திரத்தில் எழுத்தாளர்களாயினர்.அதிலும் சிலர் ஒரு நூலை வெளியிட்டதுமே உலக இலக்கியம் தன் கைகளுக்குள் என்கிற தொனியில் பேசவும் செய்கின்றையும் காணக்கிடைக்கின்றன. இவர்களின் பலம் அதிகமானால் ஆபத்தும் உண்டு என்பதை மறுக்கமுடியாது. இங்கு புலம் பெயர் சூழலில் ஆங்காங்கே இலக்கிய அமைப்புக்கள், ஒன்றியங்கள், சங்கங்கள் தோன்றியும் உள்ளன. சில தொடர்ச்சியான செயல்பாட்டிலும் உள்ளன..  அவ் அமைப்புக்களுடாக பலரின் படைப்புக்களை உள்ளடக்கி நூலாகவும் கொண்டுவருகின்றமை பாராட்டக்கூடியதாகும். கனடாவில் இருந்து எனக்குக் கிடைத்த 'கூர்,யாதும், லண்டனிலிருந்து திரு.பத்மநாப ஐயர் தொகுத்த உகம் மாறும்,கண்ணில் தெரியுது வானம் போன்ற தொகுப்புக்களும் அடங்கும்.இன்னும் வந்திருக்கலாம்.

இங்கு லண்டனில் வாசகர் வட்டம்,இலக்கிய அமைப்புகள் மாதாந்த கூட்டங்களை நடத்தி வருகின்றன.சில இலக்கியம் சார்ந்தும்,சில அரசியல் சார்ந்தும் நின்று ஆரோக்கியமான சூழல் எற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. லண்டனில் பல காலமாக இயங்கிவரும் 'பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம்' காத்திரமான பணியைச் செய்யும் இலக்கிய அமைப்புக்களுள் ஒன்றாகும். இவர்கள் வாராந்தம் அல்லது மாதாந்தம் கூடி இலக்கியம் பற்றிய செய்திகளை கலந்துரையாடுவதும்,உள்வாங்கப்பட்ட விடயங்களை படைப்பாளர்களின் ஆளுமை வெளிப்பாட்டுடன் படைப்புக்களை கோருவதும்,தேர்ந்த படைப்புக்களை அவர்களின் வருடாந்த மலரில் தொகுத்து வெளியிடுவதும் இவர்களது தலையாய பணியாகும். இந்த வகையில் முன்னர் போன்றே'பூந்துணர்- 2012 தொகுப்பு நூல் நமக்குக் கிடைத்திருக்கிறது.

மலர்க்கற்றைகளுடன் கூடிய செடிகளின் புகைப்படக் காட்சி அட்டையை அலங்கரிக்க பிரகாசம் தருகிறது.எதுவித சஞ்சலங்களையும் ஏற்படுத்தாத வகையில் அர்த்தபுஷ்டியாய் அமைந்துள்ளமை பாராட்டத் தக்கது.இது ஒரு கூட்டுமுயற்சியின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. 240 பக்கங்களில் பல கட்டுரைகள்,கவிதைகள்,ஆய்வுகள்,விமர்சனங்களாய் நூல் முத்துக்களாய் மலர்ந்திருப்பது காலம் நமக்குத் தந்த வரப்பிரசாதம் ஆகும்.ஆங்கிலத்திலும்,தமிழிலும் படைப்புக்கள் இருப்பது -சமகால,எதிர்கால வாசகர்களை முன்னிருத்தி எழுதப்பட்டிருப்பாதாக  நினைத்தாலும் நூலினை முகரும் தமிழ் வாசகர்கள் ஒரு நெருடலை உள்வாங்கவே செய்வர். முதலில் கல்விக்காகவும் பின்னர் இன நெருக்கடி காரணமாகவும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களில் பலர் கல்விமான்களாகவும், படைப்பாளர்களாகவும் மிளிர்ந்தனர். இன்றும் அப்படியே. தேர்ந்த படைப்பாளர்களின் கூட்டமைப்பான பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் தேர்ந்த படைப்புக்களை தொகுத்தவர்களின் முயற்சி பாராட்டக்கூடியதாகும். பெண்கள் பற்றி,இல்லங்கள் பற்றி,தமிழர்களின் வாழ்வு முறை, மூடநம்பிக்கைகள், பற்சுகாதாரம், சங்க இலக்கியம்,பழந் தமிழறிஞர்,.தமிழர் திருமணங்கள்,தமிழர் வரலாறு போன்ற விடயங்களுடன் பலவற்றை ஆய்ந்துணர்ந்து எழுதியதை படைப்பாலர்களின் அனுபவ முதிர்ச்சியினையும்,அவர்களின் ஆற்றலையும் புலப்படுத்தி நிற்கின்றன. இன்னது எழுத இவரால்தான் முடியும் என்பதைவிட்டு எவராலும் எழுதமுடியும் என்பதை அவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்கள் ஒரு பட்டறை போலவே பார்க்கமுடிகிறது.

கட்டுரைகளை எழுதிய வைத்தியை.திருமதி.சீதாதேவி, வைத்தியகலாநிதி.சிவ.தியாகராஜா, நுணாவிலூர்.கா.விஜயரத்தினம், பேராசிரியர்.கோபன்மகாதேவா போன்றோரின் படைப்புக்களுடன், திருமதி.உஷா நாகசாமி, திரு,ஜீவகுமாரன், திரு,என்.செல்வராஜா  போன்றோர்களின் முன்னுரையுடன் கூடிய  கட்டுரை, விமர்சனங்களும்  நூலை  அலங்கரிப்பது வியப்பைத் தருகிறது. நீண்டகாலத் தயாரிப்பாகத் தெரிகிறது. கவனம் அதிகம் செலுத்தி தொகுக்கப்பட்டிருப்பது தெரிகிறது.

படைப்பாளர்கள் பற்றி:

உஷா நாகசாமி:
தமிழிலும் ஆங்கிலத்திலும் சுதந்திரமாக எழுதும் எழுத்தாளர்.தமிழகத்தில் பிறந்து புலம்பெயர்ந்து இங்கு வாழும் இவர்சிறந்த வாசிப்பாளர்.கல்வியாளர். இவர் NEWTEC Project Co-ordinator (IDCF and ILM)ஆகவும் கடமையாற்றியுள்ளார்

திருமதி.சீதாதேவி மகாதேவா:
தமிழின் மீதான அதீத பற்றால் ஈழவர் இலக்கியசங்கத்தின் ஒரு தூணாக நின்று உழைத்தவர்.தமிழிலும்,ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதியவர். ஆங்கில நூலான’SEETHA’S TAMIL RECIPES , COMPILED & ILLUSTRATED BY UMA MAHADEV ‘என்னும் நூலை 2012 ஆம் ஆண்டு எழுதி   வெளியிட்டார்.அண்மையில்(08/06/2013) இயற்கை எய்தினார் இந் நூலில் பெண்ணுரிமைகளும் வெல்வழி வரலாறும், இலட்சிய இல்லம் என்பது யாது?, வாழ ஒரு வழி வகுப்போம், நவீன உலகின் 10 விஞ்ஞானத் தூண்கள், 20ஆம் நூற்றாண்டின் வைத்திய வரலாறு, The Changing British Family, பெயரும் புகழும் பெற்ற பிரித்தானியா மூடநம்பிக்கைகளின் சமூக விளைவுகள், 2004 மார்கழி 26:சுனாமி அனர்த்தம், சுனாமி தவிர்ந்த இயற்கை அனர்த்தங்கள், Year-Ending and New Year Festivities தற்காலத்துக்கு உகந்த உணவுகள் எமது பற்களின் சுகாதாரம், மறக்காத சில வாழ்க்கைச் சம்பவங்கள், 'றோடா'புஷ்பத்தின் விசித்திரக் கதை, 20 Interesting Facts&Statistics Relating to the UK போன்ற கட்டுரைகளை எழுதியுள்ளார்.
  
வைத்தியக் கலாநிதி.சிவ.தியாகராஜா 
மருத்துவ,உளவியல்,தொல்லியல் சார் கட்டுரைகளை ஆய்வு ரீதியாக எழுதிவரும் இவர் யாழ்ப்பாணம் கட்டுவனைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.மருத்துவப் பட்டதாரியான இவர் ஆங்கிலத்திலும்,தமிழிலும் கட்டுரைகள் எழுதிவருகிறார்.சிறுகதை,நாவல்களையும் எழுதியுள்ளார். லைலா மஜ்னு,கில்கமேஷ் காவியம்,நீ சாகமாட்டாய் ராதா,எம்.ஜி.ஆர்,ஜெமினி,சிவாஜி-சில இனிய நினைவுகள்,தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்,மருத்துவக் களஞ்சியம்,The King of The Hearts,Peoples And cultures Of early Srilanka A Review of Ectopic Pregnancy, Siva Temples of Early Sri Lanka ,ஈழத் தமிழரின் ஆதிச் சுவடுகள்போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய 'தமிழ் மக்களும் தழுவிய மதங்களும்' நூலுக்கு கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை விருது கிடைத்துள்ளது. இந்த பூந்துணர் நூலில், Thiruthambaleswaram(Naguleswaram), Thirukkoneswaram, Chandramouleswaram(The Devanturai Thondar Ishwaram), Munneswaram,  Thirukketheeswaram, Ananda Coomaraswamy:The Greatest Tamil Scolar of All Time, The Dance of Siva by Ananda Coomaraswamy He People of Jaffna During the Portugese and Dutch times. A Traditional Hindu Wedding
 
நுணாவிலூர் கா.விசயரத்தினம்:
பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர் பலைய இலக்கிய,விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.ச்கவகச்சேரி நுணாவிலை பிறப்பிடமாகக் கொண்டவர்.Essential  of English Grammer,கணினியை விஞ்சும் மனித மூளை,தொல்காப்பியத் தேன் துளிகள்,இலக்கிய,அறிவியல் நுகர்வுகள்,பண்டைத் தமிழரும் சமுதாயச் சீர்கேடும், வியக்க வைக்கும் பிரபஞ்சம், போன்ற நூல்களை வெளியிட்டுள்ளதுடன்,வீரகேசரி,லண்டன் தமிழர் தகவல்,காற்றுவெளி,சுடரொளி,லண்டன் சை மகாநாட்டு மலர்,பதிவுகள் போன்ற ஊடகங்களில் எழுதியும் வருகிறார்.மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் 'தமிழியல்'விருதையும் பெற்றுள்ளார். கணக்கியல் பட்டதாரியான இவர் கணக்கியலாய்வாளாராகவும் பணிபுரிந்துள்ளார். பூந்துணர் இதழில் எழுதியுள்ள கட்டுரைகளாக பண்டைத் தமிழரின் பழம் இலக்கியங்கள், சங்க கால இலக்கியக் காதலும் பிற்காலப் பக்திக் காதலும், பண்டைத் தமிழரின் திருமணங்கள், தொல்காப்பியர் காட்டிய ஆறறிவு உயிர்கள், அறிவை மழுங்குவிக்கும் மூடநம்பிக்கைகள் எம் உலகின் மகிமையும் வாசனையும்,  சந்தேகித்தால் சந்தோசமில்லை, கற்றோர் மனத்தில் எழும் கற்பனைகள், பேரும்புகழும் நாடித் தேடி ஓடும் மனிதன்,  இயற்கைப் பேரழிவுகள்,  இலட்சிய இல்லம் நாட்டின் செல்வம், பெருமையும் பேரழிவும், பரப்பளவில் சுருங்கிவரும் பூவுலக நிலா, ஈழத்தில் ஒரு தாய்:சிறுகதை விமர்சனம், போன்றன சிறப்பைத் தருகின்றன. 
 
பேராசிரியர்.கோபன்.மகாதேவா:
வட தமிழீழத்தின் நுணாவில்/சாவகச்சேரியில் 05/01/1934 பிறந்தவர்.சாவகச்சேரி டிறிபேக் கல்லூரி,சாவகச்சேரி இந்துக்கல்லூரி, யாழ்/மத்திய கல்லூரி, இலங்கைப் பல்கலைக் கழகம்,பேர்மிங்காம் பல்கலைக் கழகம் ஆகிய கல்வி நிறுவனங்களில் கல்வி கற்று,பேராசிரியராகவும்,தொழில் ஆலோசகராகவும்,பட்டயம் பெற்ற எந்திரிகராகவும்,பட்டயம் பெற்ற பரிபாலகராகவும் கடமை புரிந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தொடர்ந்து எழுதவும்,நூல் விமரச்னம்,ஆய்வுகளை மேற்கொள்ளவும் தன்னை அர்பணித்து வாழ்கிறார்.சிறுகதை,கவிதை,கட்டுரை,நூல்வெளியீடு,திரைப்படம்,நடிப்பு என பல்துறை வித்தகராகவும் திகழ்கிறார்.இவர் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கத்தின்  நிறுவனராகவும்,ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.இவரின் The Pearly Island&Other Poems, New Stories From Srilanka, Tamil Poems, Vying For Greatness &Later Poems, Who’s Who:IATR Conference in Jaffna(1974), A Plan For Peace in Ealam Life In Nutshels,  Short Stories& Poems நூல்கள் இலக்கிய உலகில் பேசப்படுவனவாகும். ஆங்கிலத்திலும், தமிழிலும்,  ஆங்கிலத்திலும் சரளமாக எழுதுவதனால் பன் மொழி புலமையாளர்களின் அன்பைப்பெற்றுள்ளார்.யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராச்சி மகாநாட்டுக்குழுவின் செயலாளராகவும்,மைட் ஸ்தாபனத்தின் நிறுவனராகவும் கடமையாற்றியுள்ளதுடன்,பல நூல்களின் தொகுப்பாளராகவும் பணியாற்றிவருவது குறிப்பிடத் தக்கது.

இத் தொகுப்பில் அமுதுவின் இலக்கியத் தொண்டுகள்., புலவர்மணி அமுது எழுதிய வாழ்த்துக் கவிதை., வாழும் வழி. பேரும் புகழும்:ஒரு பார்-பரந்த பார்வை.,  நான் கண்ட சிங்கப்பூர். பெருமையும் பேரழிவும்., இன்றைய என் இலட்சிய இல்லம்(கவிதை) Family-Based Unity For World Peace., வயோதிபருக்கு இலட்சிய வாழ்க்கை 05.01.2012:எழுபத்தெட்டு ஆகிவிட்டேன்!(கவிதை), குறை காணுதல். காதலுக்கு ஒரு கனிந்த விளக்கம். Literature And Science, அழைப்புக்குக் காத்க்டிருத்தல்., புத்தாண்டு தினப் படபடப்புகள் ஏனோ?(கவிதை), சந்ததிப் பிணக்குகள்:Generation Gaps, மூடநம்பிக்கைகளும் பகுத்தறிவும், Review of A Short Story by Guy De Maupassant. கண்பார்வை தந்த கடவுளர்க (கவிதை),   எனக்கு வேண்டாம்,கலியானம்!(கவிதை),  உலகின் அனர்த்தங்களும்,அழிவுகளும்(கவிதை) நான் சுவைத்த போட்டிக் கவிதை(கவிதை), கவிதைகளாகவும்,கட்டுரைகளாகவும்,விமர்சனங்களாகவும் இடம்பெற்றுள்ளன.

வி.ஜீவகுமாரன்
வட இலங்கை சங்கானையைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு.வி.ஜீவகுமாரன் டென்மார்க் அரசாங்க நூலக தமிழ்ப் பகுதிப் பொறுப்பாளராகக் கடமைபுரிகிறார்.சிறுகதை,நாவல்,குறுநாவல்,கட்டுரை,மொழி பெயர்ப்பு  என பல்துறைகளிலும் காலூன்றியுள்ள இவரின் முகங்கள் எனும் தொகுப்பு நூல் பலரையும் பேசவைத்துள்ளது.மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்புமையம் வழங்கும்'தமிழியல் விருதையும்,தன் படைப்புக்களுக்காக பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.யாவும் கற்பனை அல்ல,சங்கானைச் சண்டியன்,இப்படிக்கு அன்புள்ள அம்மா,மக்கள் மக்களால் மக்களுக்காக,மெல்லத் தமிழ் இனி துளிர்க்கும் போன்ற நூல்களை வெளியிட்டுள்ள இவருக்கு கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருதும் கிடைத்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது. இவரின் பூந்துணர் 2010இற்குரிய விமர்சனத்தை எழுதி நூலைச் சிறப்பிக்கிறார்.

என்.செல்வராஜா:
ஈழத்தவர் நூல்களைப் பட்டியலிட்டு 'நூல்தேட்டம்' எனும் பெயரில் தொடராக தொகுதிகளை வெளியிட்டுள்ளதுடன்,மலேசிய,சிங்கப்பூர் நூல்களின் பட்டியலையும் தொகுத்து வருகிறார்.புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் இவரின் கட்டுரைகள் வல்லினம், தேசம், காலைக்கதிர், மீட்சி, சுடரொளி, புதினம், வீரகேசரி, தினக்குரல், ஞானம், ஜீவநதி, செங்கதிர், மண், பூவரசு, தமிழர் தகவல், பதிவுகள் போன்ற பல ஊடகங்களில் எழுதிவருவதுடன்,புலம்பெயர் வானொலிகளின் மூலம் இலக்கியத் தகவல் திரட்டாக பல இலக்கியத் தகவல்களை வழங்கிவருகிறார்.யாழ்ப்பாண நூலகத்தின் மீதான வன்கொடுமையையினை ஆவணப்படுத்தி நூலாகவும் தந்திருக்கிறார். பேராசிரியர்.கோபன்.மகாதேவா அவர்களின் எழுத்துக்கள்,அவரின் நூல்பதிப்புக்கள் பற்றி இந் நூலில் எழுதியுள்ளார். இன்றைய படைப்பாளியின் கடமை தான் சமூகம் சார்ந்தவன் என்பதை உணரவேண்டும்.அப்போதுதான் அவன் தரும் படைப்புக்கள் யாவும் சமூக சிந்தனை உடையதாய் அமையும். கவிதைகளாகட்டும், கதைகளாகட்டும்,கட்டுரைகளாகட்டும் அவ்வாறு அமையுமாயின் காலம்கடந்து நிற்கும். புதுமைப்பித்தன்,மௌனி,பாரதியார்,தாகூர் உதாரணங்களாகும்.சக மனிதன் பற்றிஅய அக்கறை அதிகமாகும் பட்சத்தில் அவன் மீதான கரிசனை அதிகமாக அவனுள் இவனும் உள்வாங்கப்படுகிறான்.இங்கு தான் வாழ்ந்தகாலத்து மனிதர்களையும்,அவர்களினால் படைக்கப்பட்ட படைப்புக்களையும்,அவர்கள் சமூகத்திற்கு அல்லது நாட்டிற்கு செய்த பங்களிப்பு பற்றியும் உணர்ந்ததின் வெளிப்பாடாகவும் தர்க்கத்திற்கு இடமின்றி எழுத்தில் வாழ்வாங்கு வாழவைக்கின்ற மன உணர்வும் இன்னொரு படைப்பாளிக்கு அவசியமாகின்றது. அந்தவகையில் தான் இங்கு பல கட்டுரைகள் அவர்கள் பற்றியும் பேசுகின்றன எனலாம்.அந்த வகையில் கலாயோகி.ஆனந்த குமாரசாமி அவர்கள் பற்றியும்,அமுதுப்புலவர் பற்றியும்  கட்டுரைகள் பேசுகின்றன.ஆழமாகவே சிந்திது எழுதப்பட்டுள்ளன.எப்போதும் சொல்லப்படவேண்டியவர்கள்.காலத்தால் மறந்துவிடக்கூடாதவர்கள்.

பெண்களின் கல்வி,வாக்குரிமை,பாலியல் சமத்துவம் இன்னோரன்ன பிற பெண்களின் வாழ்நிலை சார்ந்து சிந்தித்து எழுதப்பட்ட கட்டுரை 'பெண்ணுரிமைகளும், வெல்வழி வரலாறும்' சொலுகிறது.சர்வதேச பெண்கள் தினம் பற்றியும்,அது ஏன் கொண்டாடப்படுகிறது என்பதை அலசும் கட்டுரை பல விடயங்களைச் சொல்லுகிறது.பெண்களின் இன,மொழி,சமய,பாலின,வயது, போன்றபிரச்சினைகளுக்காக போராடுகிற அமைப்புக்கள் பற்றியும் கூறுகிறது.

குடும்ப உறவு நிலை பற்றியும்,இலட்சிய இல்லம் எவ்வாறு அமையவேண்டும்,கணவன்/மனைவி உறவு,பிள்ளைகளின் கல்வி,சுகாதாரம்,உழைப்பு இன்னும் பலவற்றைச் சொல்லி கட்டுரையை அழகு சேர்க்கிறது.'இலட்சிய இல்லம் என்பது யாது?,வாழ ஒரு வழி வகுப்போம் இரு கட்டுரைகளும்  அழகாக எழுதப்பட்டிருக்கிறது.குடும்பங்களின் வருமானம்,தொழில்,சேமிப்பு பற்றியும் நாடுகளிடையே பேணப்படும் முறை பற்றியும் சொல்லுகிறது.நன்றாக ஆய்ந்து எழுதப்பட்டிருப்பதை உணரமுடிகிறது.கற்பத் தடுப்பு மாத்திரைகள்,மின்மத் துகள்கள்,காந்தசக்தி ஒலி அலை எதிர்வு மினொலிச் சல்லடைகள்,லேசர் கதிர்கள்,மனிதப் பழக்க வழக்கங்களை ஆராயும் உயிர்நூற் பிரிவு,உலக-மின்னணு-வலை,விண்மண்டல விஞ்ஞான ஆராய்ச்சி,இணை-மரபுக் கீற்று ஆராய்ச்சி,மரபுக்கால் வழிக்கொடி ஆராய்ச்சி,செயற்கையான கருக்களிலிருந்து பிள்ளைப்பேறு எனும் சிறு தலைப்புக்களில் விஞ்ஞானம் பற்றி எழுதப்பட்ட கட்டுரை நமக்கு பல செய்திகளைச் சொல்கிறது.இந்த நூற்றாண்டின் வைத்திய வரலாறு பற்றிய கட்டுரையில் தனது வைத்தியராக இருந்த அனுபவத்தின் மூலம் பெறப்பட்ட தகவல்கள்.கல்வி,வாசிப்பு அவரது செழுமை வெளிப்படுகிறது.அதே போல் தான் பற்களின் சுகாதாரம் பற்றியும்,சுனாமி அனர்த்தங்கள் பற்றியும் புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களிடையே அறியவேண்டிய தகவல்களை வைத்தியராக,நண்பராக,படைப்பாளராக எழுதுவதின் பயிற்சி தெரிகிறது.பலநாட்தேடலின் வெளிப்பாடு என கூறமுடியும். எமது உணவு முறைகள்,பழக்க வழக்கங்கள் பற்றிய தன் அனுபவ வெளிப்பாடுகளை திறமையாக வெளிப்படுத்தியுள்ளார்.சமையல் குறிப்புக்கள் அடங்கிய திருமதி.சீதா அவர்களின் தனி நூலின் மூலமும் காணலாம்.இவரின் அனுபவம் வைத்தியராய் இருந்ததும்,குடும்பத் தலைவியாய் வாழ்ந்ததும் காரணமாய் இருப்பினும் ஈழவர் இலக்கியச் சங்கம் இவரை செதுக்கிய விதமுமே  எமக்கு நல்ல கட்டுரையை வாசிக்கத் தந்தது எனலாம்.பிரித்தானிய கல்வி,நட்பு,வாழ்வியல் முறைகளில் நம்மவர்களின் இயல்பான ஈடுபாடு அவர்களும் இதற்கு இயைவாக வாழ முற்படுவதும் சிலசமயங்களின் முரண்பாடுகளின் அறுவடைகளாகிப் போவதும் உண்டு.மதம்,இனம்,மொழி கடந்த எமது கலை,இலக்கிய,பண்பாட்டு விழுமியங்கள் மேன்மையுறும் என்று சொல்பவர்களும்,இல்லை அது தவறு என்போரும் உண்டு.குடும்ப சிதைவுகளுக்கும் இலக்காகும் அவலங்களும் உண்டு.இன்றைய தலைமுறையினர் புலம்பெயர் கலாச்சாரங்களுக்குள் அமுங்கிவிடுவதும்,அதுவே உறவுச் சிக்கல்களையும் ஏற்படுத்துவதும் உண்டு.

வரலாற்று,தொல்லிய,மரபணு ஆய்வின் அடிப்படையில் எழுதும் ஆற்றல் கொண்ட வத்தியக் கலாநிதி.சிவ.தியாகராஜா அவர்கள் ஈழத்தின் சிறந்த கோவில்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரை சிறப்பாக உள்ளன. நகுலேஸ்வரம், திருக்கோணேஸ்வரம், சந்திரமௌலீஸ்வரம், முனீஸ்வரம், திருக்கேதீஸ்வரம் ஆகிய கட்டுரைகள் ஆங்கிலத்தில் தந்திருப்பது பலரையும் எமது  தடங்களை அறியவாய்ப்பாக இருக்கிறது.இன்றைய தலைமுறையினருடன்,பிற மொழிபேசுபவர்களிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சி பாராட்டக்கூடியது. அதே போல்  'கலாயோகி'ஆனந்தகுமரசாமி அவர்கள் மீதான அக்கறை அவரதுதேடலின் உச்சத்தைக் காட்டுகின்றது.ஆனந்தகுமாரசாமி அவர்களின் 'த டான்ஸ் ஒப் சிவா' எனும் கட்டுரையின் மீள் வாசிப்பாகவும் கொள்ளலாம். இலங்கை வரலாற்றின் முக்கிய ஆட்சியாளர்கள்/ஆண்டவர்களில் போத்துக்கீசர்களினதும்,டச்சுக்காரர்களின் பங்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. வரலாற்றுத் தடயங்களை அதன் கள,தள பதிவுகளை ஆங்கிலத்தில் வந்தவைகள் அனேகம் என்று அறியப்பட்டாலும் நமக்கு கைக்கு கிடைக்காதவைகளாகத் தான் இருக்கிறது.வெறுமனே ஆங்கிலேயர்வருகை,அவர்கள் நாட்டை விட்டுச் சென்றமை பற்றியே அதிகமாக அலட்டிக்கொள்கிறோம்.ஈழ போராட்டத்தின் வலிகளும் ஆங்கிலேயர் சார்ந்தே அமைந்திருக்கிறது. போத்துக்கீச,டச்சு நாடுகளில் இன்னமும் நமது வரலாறுகள் இருக்கிறது என்கிற நம்பிக்கைகளும் உண்டு.எனவே இவரின் கட்டுரை மேலும் உந்துதலை வாசிக்கையில் ஏற்படுத்தும்.முழுமையான ஈழ வரலாற்றினை எழுதும் ஆற்றல் கொண்டவர்.அதனை மெய்ப்பிக்கும் வகையில் 'ஈழத்தமிழரின் ஆதிச் சுவடுகள்' நூல் எமக்குத் தருகிறது. ஒவ்வொரு கட்டுரைகளும் அரிய புகைப்படங்களை தாங்கி மேலும் மெருகூட்டுகின்றன.படங்கள் வரலாற்றை ருசுப்படுத்தவும் செய்கின்றன. இதே போல இந்துக்களின் திருமண முறைகளை அனுபவம் ஊடாகவும்,ஆய்வு ரீதியாகவும் தரிகிறார்.எமது இந்து திருமண முறைகளை நம்மவர்களே நகைப்பிடமாக நினைக்கையில் எனி வரும் சமுதாயம் கடைப்பிடிக்குமா என்பது கேள்விக்குறியாக நோக்கப்படுகிறது.பிற இனத்தவர்களும் அறியக்கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் தந்திருப்பது மகிழ்ச்சி தருகிறது.நமக்கும் இந்து திருமன முறைமைகள் அழிந்துவிடுமோ என்கிற கவலை இருக்கவே செய்கிறது.ஒவ்வொரு திருமண.மரனச் ச்டங்குகளில் ஐயரின் இந்துமத தத்துவங்களை சொல்கையில் நம்மில் சிலர் எரிச்சலடைவதும் தெரிகிறது.ஆனாலும் அது தேவையாகவும் இருக்கிறது.அதனால் இவரின் கட்டுரை நோக்கத்தக்கது.பிற மதத்தவர்கள் பேணுகிற கட்டாய அனுஸ்டானக்களை,சடங்குகளைப் போல நம்மவர்கள் வேண்டும் போது ஏற்றுக்கொள்ளவும், நிராகரிப்பதும் புலம்பெயர் வாழ்சூழலில் நடக்கின்ற யதார்த்தமாகும்.எனவே இவரின் கட்டுரை மீண்டும் மீண்டும் வாசிக்கவும்,அது பற்றியும் சிந்திக்கவும் தேவையாக இருக்கிறது. மணக்களைத் தேர்ந்தெடுத்தபின் இரு வீட்டாரும் கலந்து கொண்டு தீர்மானிப்பது முதல்,மாப்பிள்ளை அழைப்பு,கணபதி பூசை, பெண் மணவறை நோக்கி வருதல்,சிவன்/பார்வதி பூசை,நவக்கிரக சாந்தி,ஹோமம் வளர்த்தல்,காணிக்கை தானம்,தாலி,கூறை மீதான ஆசீர்வாதம்,பின் மணமகள் உடைமாற்றி வந்து ஆசிர்வதிக்கப்பட்ட தாலியை மணமகன் அணியவும்,ஐயரின் திருமணச்சடங்குகள் வரிசையாக நடைபெறும்.இவற்றை விபரமாக எழுதியுள்ளதை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசேர்க்கும் பணியைச் சிறப்பாகவே ஆசிரியர் செய்திருக்கிறார்.அழிந்துவிடாதபடி பாதுகாக்கின்ற கடமையும் நம்மிடம் தரப்பட்டுள்ளது எனபதை காலம்  சொல்லி நிற்கிறது மறுக்கமுடியாது.அக்கட்டுரையைத் தநத படைப்பாளருக்கு நன்றிகளும்..வாழ்த்துக்களும்.

தலைச் சங்கம்,இடைச் சங்கம்,கடைச் சங்கம் என அக்கால பாண்டிய மன்னர்களால் அமைக்கப்பட்டு இயல்,இசைநாடக வளர்ச்சிக்குப் பாடுபட்டனர்.அக்காலத்தெழுத்த இலக்கியங்கள் வரலாற்றில் இன்றும் பேசப்படுவனவாகவே உள்ளன.இதில் தலைச் சங்கத்தில் 4449 புலவர்கள் பாடல்களை இயற்றியதாகவும்,அகத்தியம்,பரிபாடல்,முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை என அக்கால புலவர்கள் இயற்றிய நூல்களாகவும் கொள்ளப்படுகின்றன.அக்காலத்திலேற்பட்ட கடல்கோளால் அனைத்து இலக்கியங்களுடன்,தமிழர் நாகரிகமும்,கலாச்சாரமும் அழிந்ததாக சிலப்பதிகாரத்தை உதாரணம் காடிச் சொல்லுவர். பின் கபாடபுரத்தில் அமைந்த இடைச் சங்கம் 3700 புலவர்கள் இணைத்திருந்தாகவும் சொல்வர்.தொல்காப்பியம்,குருகு,வெண்டாளி,வியாழமாலைஅகவல்,கலி போன்றவை இடைசங்கத்தில் எழுந்தவை எனக்காணலாம்.இவற்றுள்ள் தொல்காப்பியம் தவிர மற்றவையும் அழிந்துபோயின. வட மதுரையில் அமைந்த கடைச்சங்கப் புலவர்களால் இயற்றப்பெற்ற பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சூளாமணி,நீலகேசி,யசோதர காவியம்,நாக குமார காவியம்,உதயகுமார காவியம் நூல்கள் இலக்கியங்களாகப் படைக்கப்பட்டன.தொல்காப்பியம்,திருமந்திரம் இன்றும் பேசப்படுவன.இப்படி நிறைய விடயங்களைப் பற்றி எழுதியகட்டுரை ஆய்வு ரீதியாக எழுதப்பட்டிருப்பதாகவே உணர்கிறேன்.தொல்காப்பியக் கட்டுரைகளை நிறையவே திரு.விஜயரத்தினம் அவர்கள் எழுதிவருவதும் குறிப்பிடத் தக்கது.

சங்க இலக்கியக் காதலையும்,பிற்காலத்து பக்திக் காதல் பற்றியும்,தமிழர்களிடையேயான மூடப்பழக்கவழக்கங்கள் பற்றியும்,பழங்காலத் திருமணமுறைகள் பற்றியும் ஆய்வு ரீதியாகத் தேடி எழுதுகிறார்.அறிவியல் கட்டுரைகளையும் அச்சு ஊடகங்களில் எழுதிவரும் கட்டுரையாளர் ஒவ்வொரு கட்டுரைகளும் தன் அறிவியற் தேடலகளையும் புலப்படுத்திவருவது கண்கூடு. கைக்கிளை,அன்பின் ஐந்திணை,பருந்திணை,களவொழுக்கம்,கற்பொழுக்கம்,பரத்தையிற் பிரிவு சங்க இலக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு எழுதுகிறார். தொல்காபியம், மகாபாரதம், இராமாயணம், எட்டுத்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாணி, பாரதியார், போன்ற இலக்கியங்களுடன், திருமூலரையும், நாயன்மார்களையும் பக்தியுடனும்,தத்துவ நோக்குடனும் ஆராய்கிறார்.

இயற்கைப் பேரழிவுகள்,பெருமையும் பேரழிவும் கட்டுரைகள் சிறப்பாக எழுதபட்டிருக்கின்றன.அதே போலவே பேரையும்,புகழையும் தேடி ஓடும் மனிதர்கள் பற்றியும்,சந்தேகித்தால் சந்தோசமில்லை கட்டுரைகளும் அனுபவித்து எழுதியதை பாராட்டாமல் இருக்கமுடியும். உலக நாடுகளிடையே,குறிப்பாக பிரித்தானியா,சீனா,இந்தியா,ஈழம் அங்கு வாழ்கிற மக்களிடையில் இன்னும் பார்க்கப்படும் நம்பிக்கைகள் அவை மூடநம்பிக்கைகள் எனினும் இன்றும் பார்க்கப்படுகிறது உண்மையே.பகுத்தறிவுக் கொள்கைகள்,பகுத்தறிவு சார் அமைப்புக்கள் மூடநம்பிக்கைகளை அகற்றப் பாடுபட்டு வந்தாலும் தொடர்கிறது என்பது மறுக்கமுடியாதது.

அமுதுப்புலவர்
ஈழத்தில் பிறந்து லண்டனில் வாழ்ந்து மறைந்த எல்லோராலும் அன்புடன் அமுதுப்புலவர் என அழைக்கப்படும் அடைக்கலமுத்து அவர்கலை அறியாதார் இல்லை என்றே சொல்லலாம். நகைச்சுவையுடன் பேசவும்,கவிதை சொல்லவும்,பார்த்திருப்போரை உற்சாகப்படுத்தவும் அவர் ஒருவரால்தான் முடிந்திருக்கிறது என்றால் மிகையாகாது.

அமுதுவின் கவிதைகள்,நெஞ்சே நினை,இந்த வேலிக்குக் கதியால் போட்டவர்கள்,மரிய மடுமாதா காவிய மல்லிகை போன்ற பல அரிய நூல்களுக்குச் சொந்தக்காரார்.இலக்கிய அறிஞர்களைப்பற்றிய குறிப்புக்களை விரல்நுனியில் வைத்திருந்தவர்.அவருடன் உடனிருந்து,பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு,அவரைப் பற்றி முழுமையாகத் தெரிந்தவர் பேராசிரியர்.கோபன் மகாதேவா ஆவார்.அமுதுப்புலவர் பற்றி,அவரின் நூல்கள் பற்றி அழகாக எழுதும் ஆற்றல் உள்ளதை அவரின் கட்டுரை தெளிவுபடுத்துகிறது.அவரைப் பற்றிய இரு சிறு கவிதைகளையும் இணைத்துள்லமை நூலுக்கு சிறப்புச் சேர்க்கிறது.

'பேரும் புகழும்:ஒரு பார்-பரந்த பார்வை'அலெக்ஸாண்டர்-போய்,பிரான்ஸிஸ் பேஹன்,மாவோ சேதுங்க்,ஜேம்ஸ்வாற்,சிக்மண்ட்-புறொயிட் போன்ற பல அறிஞர்களின் அனுபவங்களை,அவர்தம் நூல்களை ஆதாரங் காட்டி அக்கட்டுரை எழுதப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது மனிதனின் இயல்பானா ஆர்வம், ஆசை பற்றியும் பேர் புகழால் வரக்கூடிய இடைஞ்சல்கள், நன்மைகள் பற்றியும் கட்டுரை ஆய்வுசெய்கிறது.நடமுறை சாத்தியமான சிந்தனைகள் தெளிவுற கூறப்படுகிறது. தன் வாழ்வின் இலட்சியம் பற்றியும்,சிங்கப்பூரின் அனுபவங்களை அழகிய இரு கவிதைகளாக தந்துள்ளார்.பல நிறுவனங்களின் செயற்பாட்டாளராகக் கடமையாற்றிய அனுபவம் அவரின் படைப்புக்களில் தெரிகிறது. ஒரு வயோதிபரின் முதுமைக் காலம் பற்றிய கரிசனை இன்று பலருக்கு இருக்கிறது.அது பற்றிய கருத்தை வாழ்வியல் சூழலோடு எழுத்தும் பண்பு மனதை தொடுகிறது.பிறப்பு முதல் வாழ்ந்து உழைத்து,ஓய்வு பெற்ற பின் பொருளாதார வளமற்று,இன்னொருவரில் தங்கி வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு, வாழ்வின் எல்லை வரை  தோல்வி மனப்பான்மையுடன் வாழ்கின்ற பலரை நாம் பார்த்திருக்கிறோம்.வாழ்வின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப ஒருங்குபடுத்தலுடன் வாழ்ந்தால் சிறப்பைத் தரும் என்பதை பலரும் மறந்துவிடுகின்றனர்.தொற்று நோய்களிலிருந்தும்,நீரழிவு போன்ற நோய்களிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் முறைகளைக் கடைப்பிடித்தல்,தேகாப்பியாசம்,நல்லவற்றையே சிந்தித்தல்,கோயில்களுக்குச் செல்லுதல்,மனது அமைதி தரும் வண்ணம் தன்னை பழக்கப்படுத்திக்கொள்ளல்,வயோதிபத்திலும் கனவன் மனைவி தாம்பத்திய உறவுப் பழக்கம்,மன அழுத்தங்களுக்கு ஆளாகாது பாதுகாத்தல் சிறப்பாக ஆய்வு அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது பாராட்டத் தக்கது.வயோதிபருக்கு இலட்சிய வாழ்க்கை எனும் கட்டுரை அனுபவித்து எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மனிதனின் வாழ்வு சிறப்பாக அமைவதில் அவன் வகுக்கும்  நாளாந்த செயல்பாட்டிலேயே தங்கியுள்ளது.தன்னளவில் நேர்மையாளனாகவும்,இதய சுத்தியுடனும் குறை காணுதலைத் தவிர்த்து சத்த்தியத்துடன் வாழ்ந்தால் குறையற்ற வாழ்வுக்கு வழி சமைக்கும்.

மேலும், காதல் பற்றி பல இலக்கியங்கள் அழகாகச் சொல்லுகின்றனர். சேக்ஸ்பியர், வால்மீகி, இளங்கோவடிகள், கம்பன்,புகழேந்தி,பாரதி போன்ற பலருடன்,சிறுகதை,நாவல்,கவிதை,நாடகம்  எனப் பல இலக்கியங்கள் காதலை அழகாக சொல்வதை இவரின் காதலின் ஒரு கனிந்த விளக்கம் கட்டுரையில் ஆசிரியர் சொல்லுகிறார்.மனிதர்களுடன் இதர மிருகங்களும்,பறவகளும் காதல் கொள்ளுகின்றன. ஆங்கிலக் காதல் படைப்புக்களில் ரோமியோ ஜூலியட் காதலும்,லைலா மஜ்னு காதலுடன், நளன் & தமயந்தி, இராமன்& சீதை, சிவன்&சக்தி, முருகன் & வள்ளி/ தெய்வானை காதல் கதைகளும் நமக்கு பதிவுகளாக இருக்கின்றன. காதலன், காதலி உறவு, கணவன் மனைவு காதல்  உறவு,பிற களவொழுக்கம் பற்றியும் கட்டுரை சிலாகிக்கிறது.திரைப்படங்களும்,வேறு வடிவங்களும் காதலை அழகுறச் சொல்லவே செய்கின்றன.அழகான காதல் நாவல்களும் நமக்கு சாட்சியாய் இருக்கிறது.

இலக்கியமும்,விஞ்ஞானமும் எனும் கட்டுரையும் சிறப்பாக இருக்கிறது. தொலைபேசிக்காக காத்திருக்கும் ஒருவரின் மனநிலை கவிதையில் தெரிகிறது.அதே போல் புத்தாண்டு தினப் படபடப்புக்கள் ஏனோ? கவிதையும் புத்தாண்டுப் பரபரப்பு பற்றி எழுதுகிறார். 'புத்தாண்டு தினத்தன்று ஏன் ஐயா இப்படியாம் பண்டிகையும் படபடப்பும்? வி(த்)யாசம் என்ன ஐயா வருட.., மற்றத் தினங்களுக்கும், இந் நாளோ? எந்தையும் நாம் செய்திடினும், எந்தையும் நாம் சொல்லிடினும் ஐயா,  சொல் நீ! புத்தாண்டு தினத்தன்று, அதிசயமோ வரலாறோ,யுகம் எதிலும் நடந்ததுண்டோ? கவிதையின் இறுதிப் பாகம் சொல்லுகிறது.பல நாடுகளிலும் இன்றைய காலகட்டத்தில் பாரிய பிரச்சினையாக சந்ததி பிணக்குகள் தான்.நம்மிடையேயும் அதுவே சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பெரியவர்கள், சிறியவர்களிடையேயான வயது வித்தியாசம்,அவர்களிடையேயான உணர்வு சம்பந்தமான கரிசனை / கரிசல், கல்வி, அறிவு,தொழில், பணம், ஏனைய வசதிகள்/வசதியீனங்கள்,எனது/உனது எனும் பிரிவினை உணர்ச்சிகள் போன்ற பல காணங்களினால் ஏற்படும் பிணக்குகளை விலாவாரியாக எழுதப்பட்டிருக்கிற கட்டுரை தான்'சந்ததிப் பிணக்குகள்'. பெரியவர்கள் தங்களில் சிறியவர்களிடம் அன்போடும், உரிமையோடும் சொல்லப்படுகின்ற அறிவுரைகளை,ஆலோசனைகளை ஏற்பதிலும்/நிராகரிப்பதிலும் சங்கடங்களும் , எரிசலும், கோபங்களும், ஏற்படுவது கண்கூடு.அதேவேளை,சிறிவர்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பதும்,அவர்களின் நிராகரிபினால் சோர்வுறுவதும்,கோபப்படுவதும் தவிர்க்கமுடியாத சூழல்..மன அழுத்தங்களும் ஏற்படும் அபாயமும் உண்டு.கட்டுரையாளரின் ஆழ்ந்த கல்விப்புலமை நன்கு தெரிகிறது. அதே போலத் தான், வாழ்வின் தடங்களின் சில சமயங்களில் சறுக்கல்கள் ஏற்படுவதுண்டு.அதற்கு மூடநம்பிக்கைகளும் ஒருகாரணம்.ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம் சொல்லி மனதை அலைபாயவிட்டு ,வாழ்வே திசைமாறிவிடச் செய்துவிடுகின்ற கொடுமைகளும் உண்டு.இதற்கு தன்னம்பிக்கை,மனத்தைரியம் அதிகமாக இல்லை என்பதல் தான் நிகழ்ந்துவிடுகிறது. சுபசகுனம்,அபசகுனம் என்று சொல்லியும் நம்மை அல்லாடவைக்கிற நிகழ்வுகளும் உண்டு.நாம் சரியென நினைத்து செயல்படுகையில் காரியம் நன்றாகவே அமையும்.சில சமயம் அப்படி நினைக்கையில் சறுக்கிவிடவும் செய்கிறது.வெள்ளிக்கிழமைகளில் பயணித்தல்,விளக்கு வைத்த பின் கொடுக்கல் வாங்கல் செய்தல்,மூவராக போதல்,புத்தகங்களைக் காலால் மிதித்தல்,தூரம் போகையில் மடியில் இரும்புத்துண்டைக் கொண்டு செல்லல்,கைம்பெண்,வீட்டூக்குத் தூரமான பொழுதுகளின் நகைகள் அணியாமை இப்படி பல நம்  முன்னோர்கள் சொன்னதை இன்றும் சொல்லுதல்/ கடைப்பிடித்தல்.சிலசமயம் நிராகரிப்பவர்கள்/பகுத்தறிவுவாதிகளின் கோபத்திற்கும் ஆளாகுதல் இப்படியாக சிந்தித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரை பெரிய நூலுக்குரியவற்றை சுருக்கமாக எழுதப்படிருக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது.நல்லதொரு சிறுகதை ஒன்றின் விமர்சனத்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கிறது ‘REVIEW OF A SHORT STORY:IN THE SPRING by GUY DE MAUPASSANAT’ எனும் கட்டுரை. பத்தொன்பதாம் நூற்றாண்டின்  ஆரம்பக் கூறுகளில் வாழ்ந்த மாப்பசானின் கதைகளில் பல சஞ்சிகைகளில் படித்திருக்கிறோம்.அவற்றுள் ஒன்றை தேர்ந்தெடுத்து விமரசனம் செய்த பாங்கு நன்றாக வந்திருக்கிறது.படைப்பில் கட்டுரையாளரின் ஆங்கிலப்புலமை வெளிப்படுகிறது.அந்த சிறுகதையைத் திரும்பவும் வாசிக்கத்  தோன்றுகிறது.கண்பார்வை தந்த கடவுளர்கள்,எனக்கு வேண்டாம்...கலியாணம்,உலகின் அனர்த்தங்களும் அழிவுகளும்,நான் சுவைத்த போட்டிக் கவிதை என்பன நல்ல கவிதைகள்.

உலகின் போர் அனர்த்தங்களாலும்,இயற்கை அனர்த்தங்களாலும் அழிந்தவைகள் அனேகம்.சுனாமி வந்து கூட அழிவுகளை நம் கண்முன் கண்டோம்.அறிவியல் சார் நிகழ்வுகளை நல்ல பதிவுகளாக பதிவு செய்யவேண்டும்.சுனாமியின் தாக்கம் அழிவுகளைத் தந்திருந்தாலும் அது சார்ந்த அறிவியல் தேடல்களும் அவசியம்.அவை தந்த சோகமும்,நோவுகளும் காலம் கடந்தும் வலிக்கும்.அது போல போரின் வடுக்களும் மாறாத சோகங்கள்.அவற்றை அழகாக கவிதையில் சொன்னது சிறப்பாக இருக்கிறது. ஒருவன் தான் சந்தித்த பெண்களின் குறும்புகள்,கேலிகள்,நிராகரிப்புக்கள்,நச்சரிப்புக்கள் போன்றவற்றால் திருமணம் என்றதும் விலகி ஓடுகையில் அம்மா போல பெண் இருந்தால் சொல் என தாயிடம் கேட்பது சிரிக்கவும்,சிந்திக்கவும் தூண்டுகிறது. ஒவ்வொரு படைப்புக்களும் வாசகருடன் பயணிக்கவேண்டும்.அப்போது தான் வாசகரும் படைப்பில் ஒன்றிப் போகும். ஒவ்வொரு ஆண்டும் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் அவர்களுடன் இயங்கும் படைப்பாளர்களின் படைப்புக்களைத் தொகுத்து வெளியிடும் 'பூந்துணர்' தொகுப்புக்களை இதர படைப்பாளர்களால் விமரசனம் மேற்கொள்ளப்பட்டு அவற்றையும் நூலுடன் இணைக்க இணைத்து வெளியிடுவதன் மூலம் தொகுப்பை அழகு சேர்க்கிறது.அந்த வகையில் உஷா அவர்களினதும், ஜீவகுமாரன் அவர்களினதும் விமர்சனங்களும் 'பூந்துணர்2012' பெருமைசேர்க்கிறது.திரு.செல்வராஜா அவர்கள் பேராசிரியர்.கோபன்.மகாதேவா அவர்களின் படைப்பும்,பதிப்பும் கட்டுரை விரிவாக ஆராய்கிறது. அவரினதும்,  அவரது மனைவி.திருமதி.சீதாதேவி அம்மையாரினதும் வாழ்வியலுடன்,படைப்பிலக்கியம் பற்ரியும்,பூந்துணர் 2007இன் படைப்புக்கள் பற்றியும் ஆய்ந்து எழுதப்பட்ட கட்டுரையாளர் நாடறிந்த நூலியற் பதிவாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தத்தில், பல்சுவை மலர்களின் கொத்தாகவே இப் பூந்துணர் தொகுப்பைப் பார்க்கிறேன். 240 பக்கங்களில் வெளி வந்துள்ள 'பூந்துணர்- 2012'  CENTURY HOUSE வெளியிட்டுள்ளது. எனிவரும் காலங்களில் இரு மொழிப் படைப்புக்களை தனித்தனி நூலாக வெளியிடும் போது வாசகருக்கு நெருடலாக இருக்காது என நம்புகிறேன்.மொழி ஆளுமை உள்ளவர்களை இன்னும் இணைத்தால் படைப்புக்கள் விரிவுபடுத்தவும் வாய்ப்பிருக்கிறது.ஆனாலும், நம்பிக்கையுடன் 'பூந்துணர்' நூலை கையில் எடுக்கையில் முழுமையாக வாசிக்கத் தூண்டுகிறது. பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்...

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R