சரத்சந்திரரின் தேவதாஸ்சரத்சந்திரர்அண்மையில் மறைந்த எழுத்தாளரும், பிரபல மொழிபெயர்ப்பாளருமான சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில்  வெளியான வங்க நாவல்கள் அல்லது படைப்புகள் எதனையாவது எங்கு கண்டாலும் எடுத்து வாசிக்கத்தவறுவதேயில்லை. அவரது மொழிபெயர்ப்பில் வெளியான வங்க நாவலான 'நீல கண்டப்பறவையைத்தேடி ' வாசித்ததிலிருந்து ஆரம்பித்த என் விருப்பங்களில் இதுவுமொன்று. மொழிபெயர்ப்பு என்பதே தெரியாத வகையில் அற்புதமாக விளங்குபவை இவரது மொழிபெயர்ப்புகள். அதுவே இவரது மொழிபெயர்ப்பின் சிறப்பும் கூட.

இவரைப்போல் இன்னுமொருவர் ஞாபகமும் கூட வருகிறது. எழுபதுகளில் என் மாணவப்பருவத்தில் கா.ஶ்ரீ.ஶ்ரீ.யின் மொழிபெயர்ப்பில் வெளியான பிரபல மராட்டிய நாவலாசிரியரான காண்டேகரின் படைப்புகளை ஒரு வித வெறியுடன் தேடிப்பிடித்து வாசித்திருக்கின்றேன். காண்டேகரின் நாவல்களில் வரும் 'வாழ்க்கையென்றால் புயல்' போன்ற வசனங்களை விரும்பி வாசித்த அப்பருவத்து நினைவுகள் இப்பொழுதும் அவ்வப்போது தோன்றுவதுண்டு.

அண்மையில் டொராண்டோவிலுள்ள பொதுசன நூலகத்தின் ஸ்கார்பரோ கிளையொன்றில் சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான தேவதாஸ் நாவலின் பிரதியொன்றைக்கண்டபோது , அம்மொழிபெயர்ப்பு சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளியான காரணத்தினால் எடுத்து வாசிக்க விரும்பி இரவல் பெற்று வந்தேன். , 'நல்லநிலம்' பதிப்பக வெளியீடாக வெளீவந்த பிரதி இது.  தேவதாஸ் நாவலை எழுத்தாளரும் , மொழிபெயர்ப்பாளருமான த.நா.குமாரசாமியும் தமிழில் மொழிபெயர்த்திருக்கின்றார். ஆனால் அந்த மொழிபெயர்ப்பினை நானின்னும் வாசிக்கவில்லை.

ஏற்கனவே திரைப்படம் மூலம் எல்லாருக்கும் நன்கு அறிமுகமான கதை. வாசிப்பதில் அப்படியென்ன பெரிதாக இருக்கப்போகின்றது என்றொரு எண்ணமும் கூட எழுந்தாலும். மொழிபெயர்ப்பாளரின் மேலிருந்த விருப்பு காரணமாக எடுத்து வந்து வாசித்தேன்.

சிறிய நாவல். விரிந்த , ஐந்நூறு பக்கங்களைக்கடந்த பெரிய நாவல்களிலொன்றல்ல. மானுட உளவியல் போராட்டங்களை விரிவாக, பக்கம் பக்கமாக விவரித்துச்சொல்லும் படைப்புமல்ல. எனக்கு அதிகம் பிடித்த இயற்கை வர்ணனைகள் நிறைந்த நாவலுமல்ல. ஆனாலும் வாசித்த பொழுது முக்கியமாக நாவலின் முடிவினை வந்தடைந்த பொழுது நெஞ்சினை அதிர வைத்த படைப்பு சரச்சந்திரரின் தேவதாஸ்.

ஏன் இந்தப்படைப்பு மிகுந்த வரவேற்பினையும், ரோமியோ-யூலியட், லைலா- மஜ்னு , அம்பிகாபதி- அமராவதி வரிசையில் மக்கள் மனதில் நிலையான இடத்தைப்பெற்றது என்று சிந்தனையோடியது.

இந்த நாவலின் சிறப்பு பாத்திரங்களின் உரையாடல்கள், செய்கைகள் மூலம் தூய காதலின் சிறப்பினை வெளிப்படுத்தியிருப்பதுதான். பெரும்பாலும் உண்மையான காதல் என்று பலர் தம் வாழ்வில் அனுபவிக்கும் காதல் உணர்வுகள் உண்மையான காதல் உணர்வுகள் அல்ல என்பதென் கருத்து. பருவத்துக்கிளர்ச்சிகளை, அவற்றின் விளைவுகளை உண்மையான காதலாகப்பலர் கருதி விடுகின்றார்கள் என்று தோன்றுகிறது. அதனால்தான் அவ்விதமான காதல் நிறைவேறாதபோது ஒருவர் மீது ஒருவர் ஆத்திரம் கொள்கின்றார்கள். வஞ்சம் தீர்த்துக்கொள்ள விளைகின்றார்கள். காதல் உண்மையாகவிருப்பின் விளைவு எவ்விதமாகவிருப்பினும் , அவ்விதமான காதல் உணர்வுகளால் பீடிக்கப்படும் ஒவ்வொருவரும் மற்றவரின் நல் வாழ்வுக்காகவே முதலில் வேண்டிக்கொள்வார்கள். அவ்விதமில்லாத எந்தக் காதலும் உண்மையான காதலாக இருக்க முடியாது. இது என் தனிப்பட்ட கருத்து.  இந்நாவலில் வரும் தேவதாஸ்-பார்வதிக்கிடையிலான காதல் அவ்விதமான உண்மையான காதல்.

சிறு வயதிலிருந்தே தேவதாஸ்-பார்வதிக்கிடையில் தொடங்கி வளர்ந்த தூய நட்பு, காதலாகப்பரிணமிக்கின்றது. அவள் அவனை எப்பொழுதுமே 'தேவ் அண்ணா!" என்றே அழைக்கின்றாள். அவன் செய்யும் குறும்புத்தனங்கள், குளப்படிகள் இவற்றால் பாதிக்கப்படும் தருணங்களில் எல்லாம் பெரும்பாலும் அவள் அவற்றை வெளிப்படுத்தி அவனுக்குத்தண்டனை வாங்கிக்கொடுப்பதில்லை. மறைத்து அவனுடன் தொடர்ந்தும் இருப்பதற்கே விரும்புகின்றாள். அவர்களது குடும்பத்தினர் ஒருவருக்கொருவர் நண்பர்களாகப்பழகுபவர்கள். இருந்தாலும் தங்கள் பிள்ளைகள் மணம் முடிப்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள். சிறு சிறு சமூக ஏற்றத்தாழ்வுகள் அவர்கள் முன்னால் பெரிதாக விரிகின்றன. ஆனால் அவற்றை அவர்கள் உணரும்போது வாழ்க்கைப்போராட்டத்தில் சிக்கி தேவதாஸ்- பார்வதி இருவரின் வாழ்க்கைப்படகுகளும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கத்தொடங்கி விட்டிருந்தன.

அவளுக்குத்திருமண ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அவளை மனைவியை இழந்த, அவளையொத்த பருவத்தினரான பிள்ளைகளைக்கொண்ட, செல்வந்தரான , முடியிழந்த , முதியவர் ஒருவருக்கு மணம் முடித்து வைப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. தன் மணவாளனாகத் தேவதாசையே எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவளான பார்வதி, ஓரிரவு அவனைச்சென்று சந்திக்கின்றாள். அவனது காலடியில் ஓரிடம் கேட்கின்றாள். அவனுடன் ஓடிவரவும் துணிவுடனிருக்கின்றாள். ஆனால் அவனோ அச்சமயத்தில் அவள் மேல் தான் வைத்திருந்த காதலையும் உணர முடியாத நிலையில் அல்லது வயதிலிருக்கின்றான். தன்னை மறந்து விடும்படியும் , தன்னால் தன் பெற்றோரை மீற முடியாத நிலை பற்றியும் கடிதம் எழுதுகின்றான். ஆனால் தன்னை நன்குணர்ந்து, அவன் அவளிடம் ஓடி வந்தபோது அவளால் அவனை ஏற்க முடியவில்லை. அந்தச்சந்திப்பில் அவர்களுக்கிடையில் வாக்குவாதமும் கூடவே சிறு மோதலும் ஏற்பட்டு விடுகிறது. தன்னை ஏற்றுக்கொள்ளும்படி அவன் அவளிடம் வேண்டுகின்றான். ஆனால்  ஏற்கனவே அவனது மறுப்பாள் பாதிக்கப்பட்ட அவள், அந்த முதியவரையே மணந்து அவரது ஊருக்கே சென்று விடுகின்றாள்.

அதன் பின் தேவதாசின் வாழ்க்கை மாறிவிடுகின்றது. பார்வதியின் இழப்பை அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. குடிக்கத் தொடங்குகின்றான்.

பின்னர் தேவதாசின் தந்தையின் மரணத்தின்போது , வந்திருந்த பார்வதியை அவன் சந்திக்கின்றான். அவனது நிலை கண்டு வருந்தும் பார்வதி அவனைத்தன்னுடன் வரும்படி கூறுகின்றாள். குடியைக்கைவிடும்படி சத்தியம் செய்து தர வற்புறுத்துகின்றாள். அவன் கூறுகின்றான்: "ஒன் வார்த்தையை மறக்க மாட்டேன். என்னகைக்கவனிச்சுக்கிறதாலே ஒன் துக்கம் மறையும்னா நான் வருவேன்.  சாகறதுக்கு முன்னாலே கூட எனக்கு ஒன்னோட வார்த்தை ஞாபகமிருக்கும்"

ஆனால் அவ்விதமே அவன் சாகக்கிடக்கும்போது அவளுக்குக் கூறியபடி அவளைக்கடைசி நேரத்திலாவது சந்திப்பதற்காக அவளது வீடு நோக்கிச் செல்கின்றான். அவளது வீட்டு வாசலின் முன்னாலேயே விழுந்து கிடக்கின்றான். இது எதனையுமே அவள் அறியாத நிலையில் சம்பவங்கள் விரைகின்றன. பார்வதிக்கு யாரோ ஒருவன் குடித்து விட்டு விழுந்து கிடக்கின்றான் என்று கதைப்பதைக் கேட்டாலும், அம்மனிதன் தேவதாஸ்தான் என்பது தெரியவில்லை. அவன் இறந்து, யாருமில்லாத நிலையில் எரிக்கப்பட்ட நிலையிலேயே அவளுக்கு அவ்விதம் இறந்தவன் தேவதாஸ், அவள் மனதில் குடியிருக்கும் தேவதாஸ் என்பது தெரியவருகிறது. சித்தப்பிரமை பிடித்தவளைப்போல் அவனைத்தேடி ஓடுகின்றாள். அவளை ஓடிச்சென்று அவளது குடும்பத்தவர்கள், வேலைக்காரர்கள் எல்லாரும் அவளது மயங்கிய உடலைத்தூக்கி வீடு கொண்டு வருகின்றார்கள். அந்தக் காட்சியைச் சரச்சந்திரர் பின்வருமாறு விபரிக்கின்றார்:

"மறுநாள் அவளது மயக்கம் தெளிந்தது. ஆனால் அவள் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. ஒரு வேலைக்காரியை மட்டும் கூப்பிட்டுக்கேட்டாள்: 'ராத்திரியிலே வந்தாரா? ராத்திரிபூரா இருந்தாரா?'

அதன்பிறகு அவள் பேசவேயில்லை."


ஆனால் அதன் பின்னர் அதுவரை மறைவாகவிருந்து தேவதாஸ்-பார்வதி கதையினை , படர்க்கையில் விபரித்துக்கொண்டு வந்த கதாசிரியர் , நேரடியாகவே தலையிட்டுச் சில  வார்த்தைகளை உதிர்க்கின்றார். அதுவரையில் நாவலின் சம்பவங்களினூடு, பாத்திரங்களின் உரையாடல்களினூடு , அவர்களின் வாழ்க்கையினுள் தம்மை மறந்து, அவர்கள்தம் இன்பதுன்பங்களுக்குத்தாமும் ஆட்பட்டுக்கொண்டிருந்த வாசகர்களின் துயரத்தினை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்து விட்டன கதாசிரியர் தலையிட்டு உதிர்க்கும் அவ்வார்த்தைகள். அவ்வார்த்தைகள் இதோ:

"இதன்பிறகு பார்வதிக்கு என்ன ஆயிற்று , அவள் எப்படி இருக்கிறாள் என்று தெரியவில்லை. இது பற்றி விசாரிக்கவும் விருப்பமில்லை. தேவதாஸை நினைக்கக் கஷ்ட்டமாயிருக்கிறது. இந்தக்கதையைப் படிக்கும் நீங்களும் எங்களைப்போலவே வருத்தப்படலாம். எனினும் எப்போதாவது தேவதாஸைப்போல் அதிருஷ்ங்கெட்ட, தறுதலையான, பாவி எவனையாவது பார்த்தால் அவனுக்காகச் சிறிது பிரார்த்தனை செய்யுங்கள். என்னதான் நேர்ந்தாலும், அவனுக்கு நேர்ந்தமாதிரி சாவு வேறு எவருக்கும் நேர வேண்டாம் என்று பிரார்த்தனை செய்யுங்கள். மரணத்தில் மோசமில்லை. ஆனால் சாமும் தறுவாயில் அவனது நெற்றிக்கு ஒரு பரிவு நிறைந்த கையின் ஸ்பரிசம் கிடைக்கட்டும். இரக்கத்தால் ஈரமான , பரிவு மிக்க ஒரு முகத்தைப்பார்த்துக்கொண்டே அவனது வாழ்வு முடியட்டும். யாரோ ஒருவருடைய ஒரு கண்ணீர்த்துளியைப்பார்த்தாவது அவன் இறக்கட்டும்!.."

சரச்சந்திரரின் தேவதாஸ் பல்வேறு பிரிவுகளால் பிரிவு பட்டிருக்கும் மானுடரின் பிரச்சினையை அவற்றுக்கான தீர்வுகளை விரிவாகக்கூறும் நாவலல்ல. ஆனால் சரத்சந்திரர் தேவதாஸ்-பார்வதியின் தூய காதலை விபரிப்பதன் மூலம், அவர்கள் அடைந்த இன்ப துன்பங்களை உயிர்த்துடிப்புடன் எழுத்தில் வடிப்பதன் மூலம், நாவலில் பல விடயங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார். மேற்கு வங்கத்தினரின் பிராமண சமுகத்தில் நிலவிய வர்க்கரீதியாக நிலவிய பிரிவுகளை , இவ்விதமான பிரிவுகள் எவ்விதம் தூய்மையான காதல் நிறைவேறுவதைத் தடுக்கிறது என்பதை மற்றும் காதலர்களிடையே ஏற்படும் தேவையற்ற கர்வங்கள் மற்றும் மானுட சமூகத்தில் நிலவும் தேவையற்ற சமூக ஏற்றத்தாழ்வுகள் தூய காதலைப்பிரிக்கின்றன என்பதை  வெளிப்படுத்தியிருக்கின்றார். நிர்ப்பந்தங்கள் மூலம் இளம் பெண்ணொருத்தி, முதியவருக்கு மணம் முடித்துக்கொடுக்கப்படும் பொருந்தா மணத்தை எடுத்துரைத்திருக்கின்றார். ஆனால் அவ்விதம் அவளை மணம் முடிக்கும் அந்த முதியவரையும், அவர்தம் பிள்ளைகளையும் கொடியவர்களாக ஆசிரியர் படைத்திருக்கவில்லை. இருந்தாலும் பார்வதி பொறுப்புள்ள குடும்பத்தலைவியாக விளங்கியபோதும், மனதினாழத்தே அவள் மகிழ்ச்சியாக இல்லை என்பதை அவளது செயற்பாடுகள் மூலம் நுட்பமாக வெளிப்படுத்தியிருக்கின்றார். வாசிக்கும் வாசகர் ஒவ்வொருவரும் 'தேவதாஸ்-பார்வதி ஒன்று சேர்ந்திருக்க  வேண்டும். குழந்தையைப்போன்ற அவளது வாழ்வு இவ்விதம் சின்னாபின்னப்படுத்தப்பட்டிருக்கக்கூடாது. மானுட சமுதாயத்தில் இவ்விதமான முடிவுகளை ஏற்படுத்தும் அனைத்துப்பிரிவுகளும், நடைமுறைகளும் ஒழிக்கப்பட வேண்டும்.' என்று மனப்பூர்வமாக எண்ணிட நாவல் தூண்டுகிறது. அதுதான் சரத்சந்திரரின் 'தேவதாஸ்' அதனை வாசிக்கும் ஒவ்வொருவரிடத்தும் முடிவில் வெளிப்படுத்தும் முக்கிய உணர்வு. அதுவே நாவலின் வெற்றிக்கான முக்கிய காரணங்களிலொன்றும் கூட.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R