தொடங்கும் முன் சில வார்த்தைகள்......

- வெங்கட் சாமிநாதன் -

எனக்கு பல விஷயங்களில் தொடர்பும்  பிடிப்பும் பின் ரசனை உணர்வும் ஏற்பட்டது வேடிக்கையாக இருக்கும். தமிழ் நாட்டில் இருந்த வரை, எனது பதினெட்டாம் பிராயம் வரை நான் தெருக்கூத்து பார்த்தவனுமில்லை. அப்படி ஒன்று இருப்பதாக அறிந்தவனுமில்லை. தமிழ் நாட்டிலிருந்து ஒரிஸ்ஸா வுக்கும் பின்னர் தில்லிக்கும்  சென்று பத்து வருடங்களுக்குப் பின் தான் தெருக்கூத்து என்ற சமாசாரத்தின் ஒர் சிறு சாம்பிள் முப்பது நாற்பது நிமிஷ துண்டுக் காட்சி அனுபவம் கிடைத்தது. அது 1966 அல்லது 1967- ஆக இருக்கக் கூடும்  அது ஒரு குறுகிய நேரக் காட்சியே ஆனாலும், அது ஒரு மின் வெட்டாக இன்றும் மனதில் ஓடும் நிரந்தர பதிவாக ஆகிவிட்டது. அது பற்றி எழுதியதும்  என்  நினைவில் இருக்கிறது.  எழுதியது அந்த வருடத்தின் பின் மாதங்களில் தீபம் இதழில் என்பதும் நினைவில் இருக்கிறது. ஆனால் இப்போது அது கைவசம் அகப்பட  மறுக்கிறது. தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில் சங்கீத நாடக் அகாடமியின் அந்நாளைய செயலாளர், பெயர் சுரேஷ் அவஸ்தி என்று நினைக்கிறேன், அவருடைய நாடகம் என்ற கருத்தாக்கத்தில் இந்தியா முழுதும் பரவிக் கிளைத்துள்ள கிராமீய கலைகள், பூர்வீக குடிகளின் கலைகள் எல்லாமும் அடங்கும். வருடா வருடம் Folk Arts Festival ஒன்றை அவர் நடத்துவார். அவர் நடத்திய அந்த விழாக்களிலிருந்து தான் அவற்றை ஒன்று விடாமல் பார்த்து அனுபவித்தபின் தான்  அந்த பார்வையை நானும் ஸ்வீகரித்துக் கொண்டேன். என் ரசனைக்கும் அது ஏற்புடையதாக இருந்தது. தெருக்கூத்து பார்த்த முதல் அனுபவமும் ரசனையும் அது பல தளங்களில் இயங்கும் ஒன்று  என்ற அறிவும் அன்றைய சங்கீத் நாடக் அகாடமியின் செயலாளர் சுரேஷ் அவஸ்தியின் உபயம்.

1946 வரை நான் வளர்ந்த படித்த நிலக்கோட்டையில், அது தாலுகாவின் தலைமை இடம். கிராமமும் இல்லை டவுனும் இல்லை.  1942-43 களில் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பதற்காக ஒரு அரை மணி நேர பொம்மலாட்டம் முதலும் கடைசியுமாக தாலுக்கா அலுவலகம் முன் இருந்த திறந்த வெளியில் ஆளுயர மேடை எழுப்பி நடந்தது. அதை ஊரூராக எடுத்துச் சென்றிருப்பார்கள் என்று நம்புகிறேன். விளம்பர யுக்தியாக பயன் பட்டது. தமாஷாக இருந்தது.

அதைத்தவிர மார்கழி மாதம் தெருக் கோடியில் இருக்கும் பாழ் வீட்டில் தங்கி தினம் காலையில் பகல் வேஷக்காரர்கள் ஒரு சின்ன கூட்டம் ஏதேதோ வேஷம் போட்டுகொண்டு ஒவ்வொரு வீட்டின்  முன்னாலும் தனித்தோ கூட்டமாகவோ எதோ பாடி ஆடிவிட்டுப் போவார்கள். நாங்கள் சிறுவர்கள் அவர்கள் பின்னாலேயே ஒவ்வொரு வீட்டின் முன்னும் அவர்களைச் சுற்றிக்கொண்டு அலைவோம்.  வாரக் கடைசியில் தான் வந்து ஒவ்வொரு வீட்டிலும் ஏதேனும் கேட்பார்கள். அதன் பிறகு நான் பகல் வேஷக் காரர்களையும் பார்த்ததில்லை. பொம்மலாட்டத் தையும் பார்த்ததில்லை,

தில்லியில் எண்பதுகளில் நடந்த World Trade Fair.-ல் ஒரு நாள் மாலை மதுரை பக்கத்தைச் சேர்ந்த முருகன் ராவ் என்பவர் தன் தோல் பாவைக்கூத்து ஒன்றை நிகழ்த்திக் காட்டி என்னை கொஞ்சம் மதிமயங்கச் செய்திருந்தார் நான் உடனே அதைப் பற்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு எழுதி, அதை சங்கீத் நாடக் அகாடமியின் செயலாளர் கேசவ் கொதாரியின் பார்வைக்குக் கொணர்ந்திருந்தேன். அதை அடுத்து நடந்த World Puppet Festival – க்கு முருகன் ராவுக்கு அழைப்பு போக அந்த கட்டுரையே காரணமாயிற்று. எனக்கும் உலகத்தின் பலநாடுகளின் பாவைக்கூத்து கலையின் இன்றைய வளர்ச்சியைக் காணும் பாக்கியம் கிடைத்தது. பழைய சம்பிரதாயத்திலேயே வாழ வைத்திருக்கும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள், பின் அதை புதுப் புது வடிவங்களில் மலர வைத்திருக்கும் ஹாலந்து போன்ற நாடுகளில் அது எடுத்துள்ள புது வடிவங்களையும் காணும் பாக்கியம் கிடைத்தது. மிக முக்கியமாக முஸ்லீம்களே ஒரு பெரிய பின்னணி இசை வாசிப்பவர்களாகவும்  பாவைகளை இயக்கபவர்களாகவும் கொண்ட வயாங்கையும் பார்த்த சௌபாக்கியத்தை என்ன சொல்ல! ஹாலந்து பிரமிக்க வைத்தது.. நினைத்துப் பார்த்திருக்க முடியாது – விட்டத்திலிருந்து பத்து பன்னிரண்டு அடி உயரத்திற்கு தரை வரை தொங்கும் திரைச் சீலைகளை அசைத்து ஆடவைக்கும் திறனில் அவற்றை பாலே ஆடும் பெண்களாக, நமக்குத் தோன்றச் செய்ய முடியுமானால்……. என்ன கற்பனை, என்ன புத்துயிர்ப்பு, என்ன கலை மனம்….! பிரமித்து நிற்பதைத் தவிர நாம் செய்யக் கூடியது ஒன்றுமில்லை. அத்தோடு மாட்டு வண்டியில் ஊர் ஊராக குடும்பத்துடன் மதுரை மாவட்ட கிராமங்களுக்கு அலைந்து திரியும் முருகன் ராவையும் நினைத்துக் கொள்கிறேன்.

எதற்குச் சொல்ல வந்தேன் என்றால் எனக்கு தமிழ் நாட்டில் கலைகள் சார்ந்த பல விஷயங்களில் ஞானோதயம் தில்லியில் தான் கிடைக்கும் சௌபாக்கியம் இருந்தது. தமிழ் நாட்டில் அவை எனக்கு பார்க்கக் கூட கிடைக்கவில்லை. அது போலத் தான் தெருக்கூத்தும்.

1966 – ல் ஒரு நாள் மாலை அன்று ரவீந்திர பவனின் புல்வெளியில் கண்டது தெருக்கூத்தின் அன்றைய மாஸ்டர்ஸ் எனப் பின்னர் தெரிந்த நடேச தம்பிரானும், கன்ணப்ப தம்பிரானும் மகாபாரதத்திலிருந்து ஒரு காட்சியை நடித்திருந்தார்கள். என்ன காட்சி, வீராவேச வாள்வீச்சும் வாய் வீச்சும் தான். வெற்று மேடை தான். ஆனாலும் என் முன் ஒரு மகாபாரத களம் காட்சியளித்தது. என் முன் வாட்போர் புரிந்து கொண்டிருப்பது துச்சாதனனும் அர்ச்சுனனும் அல்லது துரியோதனனும் பீமனுமா? நினைவில் இல்லை. ஆனால் என்ன? அது பாரத களம், இரு வீரர்கள் பொருதுகிறார்கள், ஆக்ரோஷத்தின் உச்சம். இது ஒரு வெற்று மேடையாகவே, தில்லி ரவீந்திர பவன் புல்வெளியில் இன்றைக்கு எழுப்பப்பட்ட மேடையிலேயே தான் இருக்கட்டும். நாளைக்கு இவர்கள் புரிசைக்குத் திரும்பிப் போவார்கள். அதெல்லாம் பின்னர். இப்போது இது யுத்த களம். அந்த உணர்வை இவர்கள் எனக்குக் கொடுக்க முடிந்திருக்கிறது.

பின்னர் இன்னொரு சந்தர்ப்பத்தில் கண்ணப்ப தம்பிரான் தில்லி வந்திருந்தார் அவ்ருடன் ஒரு நேர்காணல் பதிவு செய்யவேண்டும் என்று சங்கீத் நாடக் அகாடமி சொல்ல, அவருடன் பேசிய போது எனக்கு அவர் தெரிவித்த ஒரு திடுக்கிடும் தகவல், அக்காலத்தில் சில முக்கிய கட்டங்களின் உச்சத்தில் மேடையில் வெடி வெடிப்பார்களாம். அதில் ஒரு சமயம் நிகழ்ந்த விபத்தில் நடேச தம்பிரான் தன் கை ஒன்றையும் இன்னொரு கையின் இரண்டு விரல்களையும் இழந்து விட்டாராம். ஆக, அன்று மாலை நான் பார்த்த நடேச தம்பிரானின் ஆவேச வாள்வீச்சும் கை வீச்சும் கையும் விரலகளும் இழந்த தம்பிரானின் ஆக்ரோஷம். ”அவர் நடிப்பில் இது தெரியவே இல்லையே! என்று வியந்து கேட்டேன் கன்ணப்ப தம்பிரானை.

பீட்டர் ப்ரூக்ஸின் மிக புகழ் பெற்ற வாசகம், வாசகம் என்ன, மந்திர வாக்கியம் ஒன்று. Give me an empty space. I can create theatre there. இது பின்னர் தெரிந்தது.  அவர் Empty space என்ற தலைப்பிலேயே ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அதன் முதல் பக்கத்தின் முதல் வாக்கியம் இது. பீட்டர் ப்ரூக்ஸும் மகாபாரதத்தை ஏழெட்டு பாகங்கள் கொண்ட ஒரு நீண்ட நாடகமாக இயக்கியிருக்கிறார். அதில் திரௌபதியாக நடித்திருப்பது மல்லிகா சாராபாய்.

பீட்டர் ப்ரூக்ஸ் போன்று ஒரு உலகப் பெரும் தலை அல்ல நாடக உலகில், புரிசை தம்பிரான்கள். எனினும் அவர் அதை அறிந்து சொல்வதற்கு ஏட்டுப் படிப்பற்ற கிராமத்துத் தம்பிரான்கள் தலைமுறை தலைமுறையாக இந்த மந்திர வாக்கியம் அறியாமலேயே அதை உள்ளுணர்வில் அறிந்து பயின்று வாழ்ந்தும் வருகிறார்கள்.

இதற்கு முன், எந்த கூத்தில், நாடகத்தில், சினிமாவில் இந்த உணர்வு எனக்கு ஏற்பட்டிருக்கிறது? இந்த மாயத்தைச் செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் எங்கு? ஹிராகுட்டில் சத்யஜித் ரேயின் பாதேர் பஞ்சலியும் ரித்விக் காடகின் அஜாந்த்ரிக்கும் பார்த்த போது. தில்லியில் முதன் முதலாக இப்ராஹீம் அல்காஷியின் அந்த யுக் நாடகத்தை ஃபெரோஷ் ஷா கோட்லா கோட்டையின் இடிபாடுகளுக்கிடையே எழுப்பிய மேடையில் பார்த்த போது. நான் அது வரை நாடகம் என்ற கலை செத்து விட்டது. அதற்கு இனி இடமேயில்லை என்று நினைத்திருந்த போது. அல்காஷி எனக்கு நாடகம் எது என்றும் அது இன்னும் உயிர்த்திருக்கிறது என்றும் உணர்த்தினார். இன்று புரிசை தம்பிரான்கள் இருவரின் முக்கால் மணி நேர தெருக்கூத்து பார்த்த பின், இது தான் நாடகம், தமிழ் நாட்டிலிருந்து நான் பார்க்கும் முதல் நாடகம். இது கூத்து வடிவிலேயானாலும், இது காறும் பார்த்தது எதுவும் கலையும் இல்லை. நாடகமும் இல்லை என்று எனக்குத் தோன்றியது.

இதை அடுத்த இரண்டொரு நாட்களில்,அதே ஆண்டின் Folk festival-ன் இன்னொரு நிகழ்வாக, முதன் முறையாக, தில்லியின் கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள காளிபாடியின் மைதானத்தில் வங்காளிகளின் கூத்தான ஜாத்ரா பார்க்கக் கிடைத்தது. திறந்த வெளி தான். நடுவில் வட்ட வடிவிலான திறந்த மேடை. அந்த மேடையை நோக்கி நான்கு புறத்திலிருந்தும் நடிகர்கள் மேடையை நோக்கி வர பாதைகள். மேடையின் அருகில் ஏறுவதற்கான சாரங்கள். தெருக்கூத்து போல அதுவும் பத்ததிகளாலான் பேச்சும், நடையும் கொண்டது தான். என் பக்கத்தில் இருந்தவர் நான் தில்லியில் அடிக்கடி, சினிமா, ட்ராமா, ஓவியக் கண்காட்சிகளில் பார்க்கும் கிரிஷ்ண சைதன்யா என்னும் கலை விமர்சகர்.  ஜாத்ரா நடந்து கொண்டிருக்கும் போது ஒரு கட்டத்தில் அவரது உற்சாகம் மேலிட்டு, ஏதோ ஆவேசம் வந்தவர் போல, Superb, wonderful. This is great theatre என்று அவரிடமிருந்து வந்ததை கூச்சல் என்று தான் சொல்லவேண்டும். அவ்வளவு மகிழ்ச்சி. அவரது அந்த ஆரவாரம் அவர் பக்கம் என்னைத் திரும்ப வைத்தது. அவரும் என் பக்கம் திரும்பி, “this is like your therukoothu” என்றார். நாங்கள் சகயாத்திரிகள் என்று தெரிந்து சந்தோஷப்பட்டேன்.

இதையும் நான் எழுதியிருக்கிறேன். நான் முதன் முதலில் பார்த்த நாடகம் என்று சொல்லக் கூடியது தமிழ் நாட்டில் தெருக்கூத்து தான் என்றும் அதையும் நான் தில்லியில் தான் பார்த்தேன், ஒரு வட இந்திய ரசிகரும் அதிகாரியுமான சுரேஷ் அவஸ்தியின் உபயம் என்று எழுதியது நினைவிருக்கிறது., எனக்குப் பின்னர் தான் தெரிந்தது அதன் விளைவுகள்.

அக்காலங்களில் எழுத்து பத்திரிகையில் சிறுகதைகள் எழுதி தன் பெயரை பலரும் கவனிக்கச் செய்து வந்த ந. முத்துசாமிக்கு என் எழுத்துக்களில், அபிப்ராயங்களில், குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மதிப்பும் கௌரவமும் இருந்தது. நான் புரிசைத் தம்பிரான்களின் தெருக்கூத்து பற்றி இவ்வளவு தூரம் சிறப்பித்துச் சொல்லி, அது தான் நாடகம் என்றும் வலியுறுத்தி வைத்திருந்தது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.  அதன் பின் சென்னையிலேயே எங்கோ புரிசை கண்ணப்ப தம்பிரானின் தெருக்கூத்து நடந்திருக்கிறது. முத்துசாமியும் அத்தகைய வாய்ப்பைத் தேடிக் கொண்டிருந்தவர் உடனே தெருக்கூத்து பார்க்கச் சென்றிருக்கிறார். அவரையும் அது கவர்ந்திருக்கிறது. தொடர்ந்து தெருக்கூத்து எங்கேடா நடக்கும் என்று தேடுவது அவர் வழக்கமாயிற்று. பின்னர் அது தன் எல்லா நண்பர்களையும் சேர்த்து கூத்துப் பட்டறை உருவாகவும் காரணமாயிற்று. அதில் ஒருவர் பிரக்ஞையின் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த வீராச்சாமி என்பவரும் தான். அன்றிலிருந்து அவருக்கு கூத்தே கதியென்றாகி விட்டிருக்கிறது.

இப்போது திரும்பிப் பார்க்கும் போது ந. முத்துசாமி சிறுகதை எழுதுவதிலும் அதிக கவனமும் ஆர்வமும் காட்டுவது முதலில் நாடகம் எழுதுவதிலும், பின்னர் கூத்து பட்டறையை உருவாக்கி நடத்துவதிலும் தான். இத்தகைய ஒரு விளைவைத் தரும் சக்தி புரிசை தெருக்கூத்துக்கு இருந்திருக்கிறது.

ந. முத்துசாமியின் “அன்று பூட்டிய வண்டி” என்ற கட்டுரைத் தொகுப்பில் இது பற்றிய விவரங்களைக் காணலாம்.

நான்  ஹிராகுட்டில் இருந்த போது எனக்குப் பரிச்சயமான மார்க் என்ற கலை பத்திரிகை, டாக்டர் முல்க் ராஜ் ஆனந்தின் ஆசிரியத்வத்தில் வந்து கொண்டிருந்த பத்திரிகை, ஒவ்வொரு இதழும் ஏதும் ஒரு கலைப் பொருள், வடிவம் துறை பற்றியதாக இருக்கும். அதில் ஈ. கிருஷ்ண ஐயர் தெருக்கூத்து பற்றி ஒரு பத்திரிகைக்கான அளவில், எழுதியிருந்தார்.  பரதம் தாசிகளுக்கேயான ஒன்று என்ற அபவாதம் பரவியிருந்த, அதனாலேயே ருக்மினி அருண்டேல் தூஷிக்கப்பட்ட காலத்தில், ஈ. கிருஷ்ண ஐயர் தானே பரதம் கற்று, சென்னையில் தானே ஏதோ ஒரு சபாவில் ஆடிய நிகழ்வுகளும் உண்டு. சென்னை கலை ஞானிகளுக்கும் ரசிகர்களுக்கும் பரதத்தை தீட்டுக் கழித்து சுத்தப்படுத்திக் கொடுத்ததில் ஈ கிருஷ்ணய்யருக்கு ஒரு கணிசமான பங்குண்டு. ஒரு பரந்த கலை அனுபவமும் ஆழ்ந்த பார்வையும் கொண்டவர். தெருக்கூத்து பற்றி விவர ஞானத்தோடும் ரசனையோடும் எழுதியவர் அவர்.

இப்போது தெருக்கூத்து பற்றிய ஆய்வை மேற்கொண்டு மிக விரிவான புத்தகம் ஒன்றை ரிச்சர்ட் ஃப்ராஸ்கா எழுதியிருக்கிறார். இது மிக முக்கியமான புத்தகம். தெருக்கூத்து பற்றி இவ்வளவு விவரங்களோடும், தெருக்கூத்து மட்டுமல்ல, கர்நாடக சங்கீத ஞானத்தோடும், தாள ஞானத்தொடும் கூட தெருக்கூத்து பற்றியும் அதன் கட்டமைப்பின் அப்பியாசத்தின் ஆராய்வோடு எழுதி வந்துள்ள முதல் புத்தகம் ரிச்சர்ட் ஃப்ராஸ்காவினதாகத் தான் இருக்க வேண்டும்.

சங்கீத நாடக் என்னும் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியர், அபிஜீத் சட்டர்ஜி என்னிடம் அந்த புத்தகத்தைக் கொடுத்து அது பற்றி எழுதச் சொன்னார். நான் அவருக்கு எழுதித் தந்த அந்தக் கட்டுரைதான் தமிழில் இங்கு தரப்பட்டுள்ளது. இதை தமிழில் மொழி பெயர்த்துத் தந்துள்ளது சொல்வனம் அறிந்த உஷா வைத்தியநாதன். இதன் ஆங்கில மூலம்  சங்கீத் நாடக பத்திரிகையின் இதழ்கள் எண் 102 – 102 ஜூலை – டிஸம்பர், 1992 இரண்டிலும் பிரசுரமாகியுள்ளது.

26.4.2015


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R