- சத்தியமூர்த்தி மாஸ்டர். -

அராலி வடக்கில் வசித்த காலத்தில் எம் குடும்பத்துடன் நன்கு பழகியவர்களில் ஒருவர்.  ஆசிரியையான அம்மா மீது மிகுந்த மதிப்பையும், அன்பையும் வைத்திருந்தவர் இவர்.

ஆரம்பத்தில் கட்டுப்பெத்த தொழில் நுட்பக் கல்லூரியில் பொறியியல் கற்றவர். அதன் பின் அமெரிக்கா சென்று பட்டப்படிப்பை முடித்தவர். இவ்விதமே நான் அறிந்திருக்கின்றேன். ஊர் திரும்பியவர் ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்று அதனையே தன் வாழ்க்கைத்தொழிலாகத் தொடர்ந்தார். சக மானுடர் மீது பேரன்பு கொண்டவர். அனைவரினதும் அன்பினையும் பெற்றவர்.

எனக்கு இவரைப்பற்றி நினைத்ததும் முதலில் நினைவுக்கு வருவது 1977 ஆம் ஆண்டின் நவம்பர் 30. அன்று ஶ்ரீதர் திரையரங்கில் நண்பர்களுடன்  'தாயைக் காத்த தனயன்' திரைப்படத்தை 'மாட்னி ஷோ'வாகப் பார்த்து மாலை வீடு திரும்பபோது இவர் எனக்காகக் காத்திருந்தார். நான் பஸ்ஸிலிருந்து இறங்கியபோது வந்த என்னை அரவணைத்தவாறு வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். அவ்விதம் செல்கையில் நான் அதிர்ச்சியடையாத  வகையில் என் அப்பா இறந்த செய்தியினைத் தெரிவித்து என்னை ஆறுதல் படுத்தினார்.

இதனை என்னால் ஒருபோதுமே மறக்க முடியாது. என் கடைசிச் சகோதரி இவர்கள் குடும்பத்தினருடன் இறுதிவரையில் தொடர்புகளைப் பேணி வந்தவர்.  என் தங்கை இவரைப்பற்றிக் கூறுகையில் இவர் ஒவ்வொரு மாதமும் பொருளியல்ரீதியில் வாடும்  பலருக்குப் பல்வேறு வகைகளில் நிதியுதவி செய்து வந்தவர் என்று கூறுவார்.

இவர் நேற்று மறைந்த செய்தியினை என் தங்கை அறியத்தந்தார். இவரது மறைவுச் செய்தி இவரைப்பற்றிய நினைவுகளை ஏற்படுத்தியது. இவரது பிரிவால் வாடும் குடும்பத்தவர், உறவினர்கள் , நண்பர்கள், மாணவர்கள்  அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.