விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

விரல்நுனியில் மை வைத்து விதியை எழுதுங்கள் !!

சில்லறைக்கு
விலைபோகும்
ஓட்டு எந்திரங்களல்ல – நாம்
நாளைய விதியை இன்றெழுதும்
தேர்தல் பிரம்மாக்கள்;
இலவசத்தில் மதிமயங்கி
எடுத்து வீசிய ஊழல் பணத்தில்
வக்கற்று உயிர்வாழும் சோம்பேறி ஜென்மங்களல்ல – நாம்
தேசத்தின் நலனை தேர்தலில் அணுகும்
மண்ணின் – உரிமை குடிகள்;

 போட்டதை தின்று
விரித்ததில் தூங்கிப் போகும்
புரட்சியே யற்ற வெற்று குப்பைகளல்ல – நாம்
சரி தவறு அலசி; தக்கவரை நிறுத்தி – நாட்டின்
வளர்ச்சி குறித்து சிந்திக்கத் தக்க அறிவுள்ள மனிதர்கள்;

விரல்நுனியில் மை பூசி – இருக்கை பெற்றபின்
தலைக்கு நெருப்பிடும் கைகளை
முறித்துப் போடும் வாய்ப்புதனை அன்றிலிருந்தே
மீண்டும் மீண்டும் பெற்றவர்கள் – நாம்
மீண்டும் மீண்டும் இழக்கிறோமே தவறில்லையா??????

அடித்தவனை
திருப்பியடிக்கத்
தயங்காத நம் கைகள் -
வயிற்றில் அடிப்பவர்களை மட்டும்
விட்டுவைத்ததில் சோடைபோனோமே; அதும் தமிழராய்???!!!

வரும் தலைமுறைக்கு
வாழ்வினை சேகரிக்கும் கடமையினை
ஒவ்வொருமுறை – கவனமின்றி பதிந்த ஒட்டுக்களுக்கும்
கொடுத்த விலை படி விற்றுவிட்டோமென்பது
சிந்திக்காத கேவலத்தால் -
நாம்  செய்த பெருங் குற்றமின்றி வேறென்ன???

ஐந்து வருடத்திற்கு
பணம் காய்க்கும் மரமென்றெண்ணி
ஒரு  குவளை சாராயம் ஊற்றிக் கொடுத்து
வெட்டிச் செல்பவர்களை – இனி
விரட்டித் துரத்துவோம்;

ஓட்டு போடுவதற்கென
அரிசி – யல்ல
அமிழ்தமே தந்தாலும்
தூக்கி முகத்தில் வீசுவோம்;

மக்களின்
சுய புரட்சியின் அர்த்தத்தை
தேர்தலால் அனைவருக்கும்
விளங்கவைப்போம்;

உனக்கும்
எனக்கும்
இத் தேசத்தின் நன்மைக்கும்
இனத்தின் மக்களின் ஒவ்வொரு குடிமகனின்
உரிமைக்கும் மதிப்பு கொடுப்பவர்
சிந்திப்பவர்
உழைக்க முடிந்தவர் எவரேனும் உண்டெனில்
அவருக்கென விரல் நுனியில் மையிடுவோம்;
நம் வாழ்வினை நாமே திருத்தியமைப்போம்!!

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.